Wednesday, January 23, 2019

அசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்!

அசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது.

 கீழ்க்காணும் திருமறை வசனங்களை பார்க்கும்போது, தடுக்கப்பட்ட ஒருசிலவற்றை தவிர மற்ற உணவு வகைகள் அனைத்தையும், மாமிசம் உட்பட, இறைவன் மனிதர்களுக்கு ஆகுமானதாக ஆக்கி வைத்திருக்கிறான் என்பது தெரிகிறது.

5:1 முஃமீன்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள்; உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவற்றைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக) ஆகுமாக்கப்பட்டுள்ளன.

2:173 தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக (தடுக்கப்பட்டதாக) ஆக்கியிருக்கிறான்.

6:145 (நபியே!) நீர் கூறும்: “தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை

23:21 நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினன இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம்; இன்னும் அவற்றில் உங்களுக்கு அனேக பயன்கள் இருக்கின்றன; அவற்றி(ன் மாமிசத்திலிருந்து) நீங்கள் புசிக்கின்றீர்கள்.

16:4 நீங்கள் கடலிலிருந்து நய(மும் சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக் கூடிய ஆபரணத்தை அதிலிருந்து வெளிப்படுத்தவும் அவன்தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்.

அசைவ உணவு சாப்பிட இஸ்லாம் அனுமதிதான் அளித்திருக்கிறதே தவிர, அசைவ உணவுதான் உட்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். சைவ உணவை மட்டுமே உண்ணக்கூடிய ஒருவர் ஒரு நல்ல முஸ்லிமாகவும் இருக்க முடியும்.
2. மனிதர்கள் அசைவ உணவு சாப்பிடுவது இயற்கைக்கு மாற்றமானது அல்ல!


இயற்கைக்கு எதிரான மனிதன் செயல்படும்போது அது அவனை தண்டிக்கவே செய்கிறது என்பது நாம் கண்கூடாக கண்டு வரும் நிதர்சனமான உண்மை.  சில ஆண்டுகளுக்கு முன்பு மாட்டுத்தீவனத்தில் மாட்டு எலும்புத்தூளை கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப் பட்டது.  அந்த உணவைக் கொடுத்தால் மாடு அதிக பால் கறக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.  பால் மற்றும் இறைச்சி அதிகமாகத்தான் கிடைத்தது. ஆனால், ஒரு கட்டத்தில் மாடுகளுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. இதை “Mad Cow disease” என்றனர்.

இவ்வாறு நிகழ்ந்ததற்குக் காரணம் என்ன? ஆடு, மாடு போன்ற பிராணிகள் தாவர உண்ணிகள். இவற்றின் செரிமான அமைப்பு தாவர வகை உணவுகளை மட்டுமே செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. அது போலவே, சிங்கம், புலி போன்ற விலங்குகளின் செரிமான அமைப்பு மாமிச உணவு வகைகளை செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. அதனால்தான் ‘புலி பசித்தாலும் புல் தின்பதில்லை’. இந்த இயற்கை அமைப்பிற்கு மாற்றமான உணவு வகைகளை இந்த பிராணிகள் உட்கொள்ள நேர்ந்தால், Mad Cow Disease போன்ற வியாதிகளின் மூலம் இயற்கை தனது எதிர்ப்பைத் தெரிவிக்கிறது.

ஆனால், மனிதன் புலால் உணவு உண்பது இயற்கைக்கு மாற்றமானதல்ல என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. மனிதனின் செரிமான அமைப்பு மட்டுமே, மாமிச உணவு, தாவர உணவு என இருவகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. இந்த அமைப்பு, இருவகை உணவுகளையும் மனிதன் உட்கொள்ளலாம் என்பதற்கு இயற்கையே வழங்கியிருக்கும் அனுமதி.

மேலும், பிராணிகள் மற்றும் மனிதர்களின் பற்கள் அமைப்பிலும் இதற்கு ஒரு ஆதாரம் இருக்கிறது.  ஆடு, மாடு போன்ற தாவர உண்ணிகள், தாவர உணவு மட்டுமே உண்ணுவதற்கு ஏற்றவாறு தட்டையான பற்களை கொண்டிருக்கின்றன. இந்த பிராணிகள் இலை தழைகளை நன்கு மென்று உண்ண இந்த பற்கள் உதவுகின்றன. அது போல சிங்கம், புலி போன்ற மாமிச உண்ணிகளின் பற்கள், மாமிசத்தை கடித்து தின்பதற்கு வசதியாக கூராக அமைந்துள்ளன. ஆனால், மனிதனுக்கு மட்டுமே, மாமிச உணவு உண்ண வசதியாக கூரான முன்பற்களும், தாவர உணவுகளை மென்று உண்ண வசதியாக தட்டையான கடைவாய்ப் பற்களும் அமைந்துள்ளன. மனிதன் சைவ உணவுகளை மட்டுமே உண்ண வேண்டுமென்பது இறைவனின் சித்தமாக இருந்தால், மனிதனுக்கு கூரிய பற்களை ஏன் படைக்க வேண்டும்?

3. பூமியின் பசுமைப் பாதுகாப்பு கேடயம் அரிக்கப்படுவதற்கு புலால் உண்பவர்கள் காரணமல்ல.

“ஒரு கிலோ மாமிசம் ஒருவர் உண்ணும்போது, அது பல கிலோ பசுமையான தாவர இலைகளால் ஆனது என்பதை உணர்வதில்லை; பூமியின் பசுமைப் பாதுகாப்பு கேடயம் அரிக்கப்படுவதற்கு தான் காரணமாவதை உணர்வதில்லை.” என்ற ஒரு குற்றச்சாட்டு அசைவம் உண்பவர்கள் மீது சுமத்தப் படுகிறது. 

அதாவது, பல கிலோ பசுமையான தாவர இலைகளை உட்கொண்ட ஆடு, மாடுகளே சில கிலோ மாமிச உணவாக மாறுகிறது என்ற பொருள் தொனிக்கிறது. இருக்கலாம். ஆனால் அதற்காக மனிதர்கள் மாமிச உணவு உண்பதை நிறுத்திவிட்டால் நிலைமை இன்னும் மோசமாக அல்லவா போய்விடும்? 
 
* ஆடு, மாடுகள் அப்போதும் தாவர இலைகளைத்தான் உண்ணும்.
* கால்நடைகள் வேகமாக இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. உணவுக்காக அவை கொல்லப்படாததால் உலகில் அவற்றின் பெருக்கம் கிடுகிடுவென அதிகரிக்கும்.
* சைவ உணவு மட்டுமே உண்ணும் மனிதர்களும் தாவர உணவுவகைகளுக்காக கால்நடைகளுடன் போட்டியிட வேண்டும்.
* இந்த சூழ்நிலையில் பூமியின் பசுமைக்கவசம் வெகு சீக்கிரமே காணாமல் போகும்!

Saturday, February 19, 2011

இஸ்லாம் என்றால் என்ன?

உலகில் இன்று பரவலாகக் கடைப்பிடிக்கப்படும் மதங்களில் கிட்டத்தட்ட அனைத்துமே அதன் தலைவரின் பெயரைக் கொண்டோ, ஒரு இனத்தை அல்லது நாட்டைக் குறிப்பதாகவோதான் அமைந்திருக்கின்றன.

உதாரணமாக,

ஆனால், இஸ்லாம் மட்டும் இதில் விதி விலக்கு.  இதன் பெயர் எந்த ஒரு தலைவரையோ, இனத்தையோ, நாட்டையோ குறிப்பது அல்ல.  மாறாக,   ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டிய தன்மைகளை பிரதிபலிப்பதாகவே இதன் பெயர் அமைந்துள்ளது.

இஸ்லாம் என்ற அரபிச் சொல்லின் பொருள் 'அடிபணிதல்', 'கட்டுப்படுதல்' 'கீழ்ப்படிதல்' ஆகியவையாகும்.  படைப்பாளனாகிய இறைவனின் கட்டளைகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு அவற்றிற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதுதான் இஸ்லாம். 

இஸ்லாம் என்றச் சொல்லுக்கு 'அமைதி' என்றொரு பொருளும் உண்டு.  இறைவனின் கட்டளைகளுக்கேற்ப அமையும்  வாழ்க்கையில்தான் உடலும் உள்ளமும் அமைதி பெறும் என்பதையே இப்பெயர் குறிப்பதாகக் கொள்ளலாம்.

Tuesday, September 28, 2010

இட ஒதுக்கீடு தீர்வாகுமா?

இந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று! - சவால்களும் தீர்வுகளும்! (தொடர் - பகுதி 2)


ந்தியாவில் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் மற்ற சமுதாயத்தினரைக் காட்டிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தை முன்னேற்றுவதற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் ஆகியவை பரிந்துரைத்திருக்கின்றன.
 
சிறுபான்மையினருக்கு 15% வரை இடஒதுக்கீடு கொடுக்க இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்திலும் விதிமுறைகள் இருக்கின்றனவாம்.

கமிஷன் அறிக்கைகள் வெளியானபிறகு கிட்டத்தட்ட எல்லா இந்திய இஸ்லாமிய அமைப்புகளுமே முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், போராட்டம், பேரணி, மாநாடு என நடத்திக் கொண்டுள்ளன. குறிப்பாக தமிழக இஸ்லாமிய அமைப்புகள் இக்கோரிக்கைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்தால் சமுதாய முன்னேற்றத்திற்கு இடஒதுக்கீட்டை விட்டால் வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அரசியல்வாதிகளும் தங்கள் மனோநிலை, அரசியல் சூழல், நெருங்கி வரும் தேர்தல் போன்ற காரணிகளுக்கேற்ப ஏதாவது அறிக்கைகள் விடுவதும் ஒப்புக்குச் சப்பாணியாக சில திட்டங்களை அறிவிப்பதும் பிறகு அதை திரும்பப் பெறுவதுமாக 'அரசியல்' பண்ணிக் கொண்டுள்ளனர்.


இந்தியாவின் சுதந்திரத்திற்காக பல தலைமுறைகளாக தமது மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட அதிகமாகவே உயிர்த்தியாகம் செய்து போராடிய முஸ்லிம் சமுதாயம் இன்றைய சுதந்திர இந்தியாவில் தமக்கான சலுகைகளைக் கோர முழு உரிமையும் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. இருப்பினும் சமுதாயத்தின் விருப்பப்படி இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டு விட்டால் அது சமுதாய முன்னேற்றத்திற்கு எந்த அளவிற்கு பயனளிக்கும் என்பதை அலசி ஆராய வேண்டியதும் அவசியம்!


இடஒதுக்கீட்டினால் இஸ்லாமிய சமுதாயத்திற்குக் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?


பொறியியல், மருத்துவம் போன்ற உயர்கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவர்களுக்கு சில இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுமானால், பள்ளிப்படிப்பில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற முஸ்லிம் மாணவர்கள் அதிக போட்டி இல்லாமல் மேற்கண்ட உயர்நிலை கல்வியைத் தொடர வாய்ப்பு ஏற்படும்.


அதேபோல, அரசு சார்ந்த பணியிடங்களில் குறிப்பிட்ட சதவிகிதம் முஸ்லிம்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படுமானால் அந்தந்தப் பணிகளுக்குத் தகுதியுடைய படித்த முஸ்லிம் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது சுலபமாகி விடும். அரசாங்க வேலை கிடைப்பது சுலபம் என்றால் அது படிப்பில் ஆர்வமின்றி இருக்கும் இளைஞர்களும் பட்டப்படிப்பு வரையாவது தொடர்ந்து படிக்க தூண்டுகோலாக இருக்கும். இதனால் சமுதாயத்தில் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகும். பள்ளிப்படிப்பைக்கூட சரிவர முடிக்காமல் வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடி பயணிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை ஓரளவிற்காவது குறையலாம்.


சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இரு பேராசிரியர்கள் இந்தியாவில் நடத்திய ஒரு ஆய்வில் அதிர்ச்சி தரும் ஒரு உண்மை வெளிப்பட்டது. (
http://www.satyamargam.com/673). இந்த ஆய்வுக்குழுவினர், பத்திரிக்கைகளில் வெளியான பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு விளம்பரங்களுக்கு வெவ்வேறு பெயர்களில் சுமார் 4,800 வேலை விண்ணப்பங்களைப் பல நிறுவனங்களுக்கும் அனுப்பினர். கிட்டத்தட்ட ஒரே அளவிலான தகுதிகளை உடைய விண்ணப்பங்களைத் தயாரித்து, அவற்றிற்கு உயர் சாதி, தாழ்ந்த சாதி மற்றும் முஸ்லிம் பெயர்களை இட்டு, அவற்றை இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அவர்கள் அனுப்பினர். இவற்றிற்கு வந்த பதில்கள்தான் இந்தியத் தனியார் தொழிற்துறை நிறுவனங்களிடையே சாதி, இன பாகுபாடுகளும் பாரபட்சமான மனப்போக்கும் எந்த அளவிற்குப் புரையோடிப் போயுள்ளது என்பதை வெளிப்படுத்தியது.

இவ்வாறு 'விண்ணப்பித்த' தலித் ஒருவர் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் வாய்ப்பு, கிட்டத்தட்ட அதேத் தகுதியை உடைய ஒரு உயர்சாதியினருக்குக் கிடைத்த வாய்ப்புகளில் மூன்றில் இரண்டு பங்குதான். முஸ்லிம் 'விண்ணப்பதாரர்களின்' நிலைமையோ இன்னும் மோசம். உயர்சாதி இந்துக்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் மூன்றில் ஒரு பங்கே முஸ்லிம்களுக்குக் கிடைத்தது.


அரசு சார்ந்த பணியிடங்களில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுமானால் இந்த அவலநிலைக்கு ஒரு தீர்வு பிறக்கலாம்.


நிற்க!


மேற்கண்ட சலுகைகளால் பலனடையக்கூடியவர்கள் பள்ளிக்கல்வியை முடித்து உயர்கல்வியைத் தொடர வாய்ப்பும் வசதியும் உள்ள மாணவர்களும், உயர்கல்வியை முடித்து உள்நாட்டிலேயே வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களும்தான்! சச்சார் கமிஷன் அறிக்கையின்படி முஸ்லிம்களில் 7.2 சதவிகிதத்தினர் மட்டுமே உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார்கள். அதிலும் 4 சதவிகிதத்தினர் மட்டுமே பள்ளிப்படிப்பைத் தாண்டி கல்லூரிக்குச் செல்கிறார்கள். பட்டமேற்படிப்பு படித்தவர்கள் வெறும் 1.2 சதவிகிதத்தினர் மட்டுமே. இடஒதுக்கீடு என்பது சுமார் 95% வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் நலிவடைந்த இஸ்லாமிய சமுதாயத்தின் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே பலனளிக்கக்கூடியது! அப்படியானால் பெரும்பான்மையான மற்றவர்களின் நிலை?


தொடர்ந்து அலசுவோம் இன்ஷா அல்லாஹ்.. 

Monday, September 27, 2010

இந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று! - சவால்களும் தீர்வுகளும்!

பகுதி 1 - கமிஷன் அறிக்கைகள் ஒலிக்கும் எச்சரிக்கை மணி!

வெள்ளையருக்கெதிரான சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கமாக அந்நியத்துணிகளை புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார் காந்திஜி. ஆனால் இந்திய முஸ்லிம் சமுதாயமோ அந்நியர்களின் மொழி மற்றும் அதனூடாக போதிக்கப்பட்ட கல்வியையும் புறக்கணித்து வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியது.

சுதந்திரப்போராட்ட வரலாற்றின் மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட பக்கங்களில் இதுபோன்ற இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் எண்ணற்ற தியாகங்கள் புதையுண்டிருப்பதைக் காணலாம். "இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது." என இல்லஸ்டிரேட்டட் வீக்லி 29-12-1975 தேதியிட்ட இதழில் எழுதினார் குஷ்வந்த்சிங்.

சுதந்திரம் கிடைத்து 63 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில் தியாக சமுதாயமான இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலையை ஒற்றை வார்த்தையில் சொல்வதென்றால், அவலம்! முஸ்லிம்கள் கல்வி மற்றும் பொருளாதார நிலையில் மற்ற சமூகங்களைக் காட்டிலும் மிகவும் பின்தங்கி இருப்பது அரசியல்வாதிகளுக்கும் சமுதாயத் தலைவர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் நன்கு தெரிந்த ஒன்றுதான். உதாரணத்திற்கு தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், வங்கக் கடற்கரையையொட்டிய சில மாவட்டங்களைத் தவிர மாநிலத்தின் பிறபகுதிகளில் வசிக்கும் பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கு அன்றாடம் வறுமைக் கோட்டுடன் ஒட்டி உறவாடும் வாழ்க்கைதான்! 2006-ல் ஆளூர் ஷாநவாஸ் தயாரித்த 'பிறப்புரிமை' என்ற ஆவணப்படத்தில் இந்த நிலையை தெளிவாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். [காண்க http://www.islamkalvi.com/media/pirappurimai/index.htm]

முஸ்லிம்களின் இந்த அவல நிலைக்கு புள்ளிவிவரங்களுடன் அரசாங்க முத்திரை பதித்து சான்றிதழ் வழங்கியிருக்கிறது சச்சார் கமிஷன் அறிக்கை. இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 13.4 சதவிகிதமாக இருக்கிறார்கள். ஆனால் அரசாங்கத்தின் பொறுப்பான பதவிகளில் 2 அல்லது 3 சதவிகிதத்தினர் மட்டுமே முஸ்லிம்கள். நாட்டின் நிர்வாக அமைப்பில் பங்குபெறுவதில் முஸ்லிம்கள் இவ்வாறு பின்தங்கியிருப்பதன் முக்கிய காரணம் கல்வித்துறையில் அவர்கள் வெகுவாக பின்தங்கியிருப்பதுதான் என்று சுட்டிக் காட்டுகிறது சச்சார் அறிக்கை. முஸ்லிம்களில் 7.2 சதவிகிதத்தினர் மட்டுமே உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார்கள். அதிலும் 4 சதவிகிதத்தினர் மட்டுமே பள்ளிப்படிப்பைத் தாண்டி கல்லூரிக்குச் செல்கிறார்கள். பட்டமேற்படிப்பு படித்தவர்கள் வெறும் 1.2 சதவிகிதத்தினர் மட்டுமே என அதிர்ச்சித் தகவல்களை அள்ளித் தருகிறது அவ்வறிக்கை. மேலும், கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் தலித்துகளைவிடவும் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள் என்ற குண்டையும் தூக்கிப் போடுகிறது சச்சார் அறிக்கை.

இந்திய முஸ்லிம்களில் 94.8 சதவிகிதத்தினர் வறுமைக்கோட்டுக் கீழ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் நகரங்களில் வசிக்கும் முஸ்லிம்களில் 28.3 சதவிகிதத்தினர் மிக மோசமான வறுமையில் வாழ்கிறார்கள்.. அல்ல.. வாடுகிறார்கள். நாடு முழுவதிலுமுள்ள சிறு நகரங்களில் தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் மாதவருவாயை விட முஸ்லிம்களின் மாத வருவாய் குறைவாக இருக்கிறது. நீதித்துறையில் தலித்துகளின் பங்கு 20 சதவிகிதமாக இருக்கிற போது முஸ்லிம்கள் பங்கு 7.8 சதவிகிதம் மட்டுமே. தலித்துகளில் 23 சதவிகிதத்தினருக்கு குழாய் குடிநீர் கிடைக்கையில் முஸ்லிமகளில் 19 சதவிகிதத்தினருக்கு மட்டுமே அது கிடைக்கிறது. தலித்துகளில் 32 சதவிகிதம் பேருக்கு ரேஷன் கார்டு இருக்கிறதென்றால் முஸ்லிம்களில் 22 சதவிகிதத்தினரே ரேஷன் கார்டு வைத்திருக்கின்றனர். பொதுத்துறை (7.2%) சுகாதாரத்துறை (4.4%) ரயில்வே துறை (4.5%) போன்ற பல்வேறு அரசு சார்ந்த துறைகளில் தலித்களைவிட முஸ்லிம்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது. முஸ்லிம் விவசாயிகளில் 2.1 சதவிகிதத்தினர்தான் சொந்தமாக டிராக்டர் வைத்திருக்கிறார்கள். ஒரு சதவிகிதத்தினர்தான் நிலத்திற்கு நீர்பாய்ச்ச பம்ப்செட் வைத்திருக்கிறார்கள்.

சச்சார் அறிக்கை குறிப்பிடும் இன்னொரு முக்கியமான விஷயம் முஸ்லிம்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப அரசியல் அதிகாரத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பதாகும். தற்போதைய நாடாளுமன்றத்தில் 543 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் முஸ்லிம்களின் மக்கள் தொகையான 13.4 சதவிகிதத்திற்கு சுமார் 70 - 75 முஸ்லிம் எம்.பி-க்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய முஸ்லிம் எம் பி-க்களின் எண்ணிக்கை 33 மட்டுமே! (அதில் எத்தனை பேர் இஸ்லாமிய சமுதாய நலனில் அக்கறை கொண்டவர்கள் என்பது வேறு விஷயம்!) மின்சாரம் இல்லாத கிராமங்களில் அதிகம் வாழ்பவர்கள் முஸ்லிம்களே. அதுபோல சேரிகளில் வாழ்பவர்களிலும் முஸ்லிம்களே அதிகம். விடுதலைப் போராட்டத்தில் தமது மக்கள் தொகையைவிட கூடுதலான விகிதாச்சாரத்தில் உயிர்த்தியாகம் செய்த சமுதாயத்தின் இன்றைய நிலை இது!

போதுமா புள்ளிவிவரங்கள்? இவ்வாறு இஸ்லாமிய சமுதாயம் குறித்து எச்சரிக்கை மணி ஒலிக்கப்படுவது முதன் முறை அல்ல. 1953ல் காகா கலேல்கர் கமிஷன், 1983 கோபல் சிங் கமிஷன், 1989 மண்டல் கமிஷன், 2006 சச்சார் கமிஷன், அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் என அனைத்து கமிஷன் அறிக்கைகளிலும் தவறாது இடம் பெறும் வாசகம் 'இந்திய இஸ்லாமிய சமுதாயம் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் மற்ற சமுதாயத்தினரைக் காட்டிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது' என்பதுதான்.

இந்த நிலையில் இஸ்லாமிய சமுதாயம் செய்ய வேண்டுவது என்ன? பின்தங்கியிருக்கும் சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் செலுத்தத் தேவையான ஏற்பாடுகள் என்னென்ன? இந்தப் பிரச்னைகளுக்கு இஸ்லாம் காட்டும் தீர்வுகள் என்ன?

தொடர்ந்து அலசுவோம் இன்ஷா அல்லாஹ்...

Sunday, June 06, 2010

ஒளி வீசும் 'இருண்ட காலம்' - குறும்படம்

பள்ளிச்சிறுவர்களை அரும்பொருள் காட்சியகத்திற்கு அழைத்துச் செல்லும் வரலாற்று ஆசிரியை அவர்களை சிறு சிறு குழுக்களாக பிரித்து அவர் சொல்லும் தலைப்பிற்கேற்ற பதிலை தயாரித்துக் கொண்டு வருமாறு கூறுகிறார்.

"உங்கள் ஒவ்வொரு குழுவிற்கும் வரலாற்றின் வெவ்வேறு காலக்கட்டங்களை பிரித்துத் தரப்போகிறேன்.  கேள்வி என்னவென்றால்,  'உங்களுக்குக் கொடுக்கப்பட்ட காலக்கட்டம், இன்றைய நவீன உலகிற்கு என்ன பங்களிப்பை வழங்கியிருக்கிறது?' என்பதுதான்"  என்று சொல்லும் ஆசிரியை, கிரேக்க, ரோம காலங்களுக்குப் பிறகான 'மத்திய கால'த்தை பெறப்போகும் குழுவிடம் "உங்களுக்குக் கிடைத்திருக்கும் 'மத்திய காலம்' ஒரு சவாலான காலக்கட்டம்.  ஏனெனில் இந்தக் காலத்தை வரலாற்றில் 'இருண்ட காலம்' என்று அழைக்கிறார்கள்" என்று சொல்லி அந்த மாணவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்து அனுப்புகிறார்.

நொந்த மனதுடன் அரும்பொருள் காட்சியகத்தின் 'மத்தியக் கால'ப் பிரிவைத் தேடிச் செல்லும் மாணவர்களுக்கு அங்கே ஆச்சரியம் காத்திருக்கிறது.   அங்கே அவர்கள் ஒரு மனிதரைச் சந்திக்கிறார்கள்.  ('காந்தி' படத்தில் நடித்த பென் கிங்ஸ்லி இந்தப் பாத்திரத்தில் தோன்றுகிறார்)  அவர் 'இருண்ட காலத்தில் அப்படி என்ன முக்கியமான கண்டுபிடிப்புகள் இருக்கப் போகிறது?' என்ற அலட்சிய மனோபாவத்தில் இருக்கும் மாணவர்கள், அது உண்மையில் இருண்ட காலம் அல்ல என்பதை தெளிவு படுத்துகிறார்.

மத்தியக்காலத்தில் வாழ்ந்த விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்பாளர்களுமான அல் ஜஸாரிஅல்ஹஸன் இப்னு ஹைத்தம், அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ், அபுல்காசிம் அல் ஜஹ்ராவி, மர்யம் அல் அஸ்துர்லாபி ஆகியோர் மாணவர்களின் கண் முன்னே தோன்றி அவர்களின் கண்டுபிடிப்புகளை விளக்குகிறார்கள்.

ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியிலிருந்து ஐரோப்பிய மறுமலர்ச்சி வரையிலான காலக்கட்டத்தையே 'மத்தியக் காலம்' என்று அழைக்கிறார்கள்.  இதை சில வரலாற்றாசிரியர்கள் 'இருண்ட காலம்' என குறிப்பிட்டிருக்கிறார்கள்.  உண்மையில் அது ஐரோப்பியர்களுக்குத்தான் இருண்ட காலமாக இருந்தது.  அதே காலத்தில் இஸ்லாமிய சமூகம் விஞ்ஞானத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தது.  ஏராளமான அறிவியல் கண்டுபிடிப்புகள் அந்தக் காலத்தில்தான் முஸ்லிம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப் பட்டன.


13 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இக்குறும்படம் '1001 Inventions' என்ற அமைப்பின் சார்பில் தயாரிக்கப் பட்டுள்ளது.  இதுவரை பல சர்வதேச விருதுகளையும் இப்படம் வென்றிருக்கிறது.

Wednesday, May 12, 2010

அறிவியலும் ஆன்மீகமும்!

நாத்திக அன்பர் ஒருவருடன் சமீபத்தில் நடந்த விவாதத்தின்போது, 'இறை நம்பிக்கை உடையவர்கள், அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள், அறிவியலுக்கு எதிரானவர்கள்.  ஆனால், நாத்திகர்களோ அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டவற்றை மட்டுமே ஏற்பார்கள்' என்ற ரீதியில் தன் வாதங்களை எடுத்து வைத்திருந்தார். அவரது இந்த இரண்டு வாதங்களுமே தவறு என்று எவ்வளவோ விளக்கியும் அவர் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.

"இஸ்லாம் அறிவியலுக்கு எதிரான மதமல்ல நண்பரே.  குர்ஆன் ஒரு அறிவியல் நூலல்ல என்றாலும், 'அத்தாட்சிகள்' என்ற முறையில் எத்தனையோ அறிவியல் உண்மைகள் அதில் சொல்லப்பட்டுள்ளன" என்றேன் நான்.

"உங்களைப் பற்றி தெரியாதா? எதையுமே குரானில் போட்டிருந்தால் ஏற்பீர்கள்.  குரானில் இல்லாவிட்டால் ஏற்க மாட்டீர்கள்.  இதில் என்ன அறிவியல் வாழுகிறது?" என்றார் அவர்.

"நண்பரே.  இஸ்லாம் பற்றி நீங்கள் தப்பும் தவறுமாக புரிந்து வைத்திருக்கிறீர்கள்.  இஸ்லாமியக் கொள்கைகளைப் பற்றி ஒரு முஸ்லிமின் கண்ணோட்டத்தில் விளக்கிச் சொல்ல நான் தயார். இஸ்லாமியக் கொள்கைகள் கற்பனையானவை என நீங்கள் செதுக்கி வைத்திருக்கும் மனப்பிம்பத்தினை தற்காலிகமாகவேனும் ஒதுக்கி வைத்து விட்டு, அந்த விளக்கங்களை தெரிந்துக் கொள்ள நீங்கள் தயாரா?"

"தேவையில்லை.  இஸ்லாம் குறித்து யார் எதிராக எழுதினாலும், அது இஸ்லாம் குறித்த போதிய விளக்கமின்மையால் எழுதப்பட்டது என்பது இஸ்லாமியர்களின் தட்டையான சிந்தனைகளில் ஒன்று. இதற்கு நீங்களும்  விதிவிலக்கல்ல. அதேபோல் குரான் கூறும் எதுவும் நிரூபிக்கப்பட்ட அறிவியலோடு மோதாது, அப்படி மோதியது என்றால் அது யூகமாக இருக்கும் என்பதும் உங்களின் தட்டையான சிந்தனைகளில் உள்ளது.   எனவே, உங்கள் விளக்கங்கள் தேவையில்லை.    நீங்கள் இஸ்லாமிய பிரச்சாரம் செய்வதற்கு இது இடமல்ல!"

அதோடு இந்த விவாதம் முடிவுக்கு வந்தது!

வேறு யாராவது இதுபோல எழுதியிருந்தார்களென்றால் எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டிருக்காது.  ஆனால் இந்த நாத்திக அன்பர்  'இஸ்லாமியர்களின் அடிப்படை நம்பிக்கையை தகர்ப்பதற்காகவே' தனது வலைத்தளத்தில் தொடர்க் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருப்பவர்!  அடக் கடவுளே!

இஸ்லாமியர்கள் என்றால் தட்டையான சிந்தனை உள்ளவர்கள் என்று இவரே முடிவு செய்து கொள்வாராம்.  ஒரு முஸ்லிமின் அடிப்படை நம்பிக்கை என்ன என்பதை ஒரு முஸ்லிமின் கண்ணோட்டத்தில் இவர் தெரிந்துக் கொள்ளகூட மாட்டாராம்.  ஆனால் அந்த முஸ்லிமின் அடிப்படை நம்பிக்கையை இவர் தகர்க்கப் போகிறாராம்.  எங்கே போய் முறையிடுவது?

'நீங்கள் இஸ்லாமிய பிரச்சாரம் செய்வதற்கு இது இடமல்ல' என்று அவர் முகத்திலடிப்பதுபோலச் சொன்னாலும் நான் அதை அப்படியே விட்டுவிடத் தயாராக இல்லை.  அவரது இன்னொரு பதிவில் விவாதத்தைத் தொடர்ந்தேன்.  அதைப் பற்றி அடுத்த பதிவில்..

Wednesday, January 13, 2010

இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள்: யாருக்கு யார் எதிரி?

இஸ்லாமின் அடிப்படைகளைப் பற்றிய சரியான புரிதல்கள் இல்லாமலேயே இஸ்லாமை 'அறிமுகம்' செய்ய முற்பட்ட தோழர் செங்கொடி, 'முதல் கோணல் முற்றிலும் கோணல்' என்ற பழமொழியை பத்திக்குப் பத்தி நிரூபித்து வருகிறார்.
"...மனித குலத்திற்கான அந்த இஸ்லாம் எனும் ஒரே மதம் உருவான சில கணங்களிலேயே சைத்தான் எனும் அல்லாவின் எதிரியால் சிதைவுக்கு உள்ளாக்கப்படுகிறது. பின்னர் தொடர்ந்து சைத்தானால் சிதைக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு அதனால் மனிதர்கள் மனம்போன போக்கில் பின்பற்றக்கூடிய நிலையானது. உருவாக்கித்தந்த ஆண்டவனே தான் உருவாக்கிய மதம் இப்படித்தான் அப்படி இல்லை என்று போதிப்பதற்காக இறைத்தூதர்களை அனுப்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டது. ஆனால் அவைகளும் சைத்தானின் வினையாக்கலுக்கு ஆட்பட்டு தனித்தனி மதங்களாக உருமாறி இறைத்தூதர்களையே கடவுளாக கொண்டாடும் நிலையாகி நிற்கிறது..." - செங்கொடி
படைப்பினங்கள் அனைத்தையும், சைத்தான் உட்பட, படைத்தவன் அல்லாஹ் ஒருவனே என்பது இஸ்லாமின் அடிப்படைகளுள் ஒன்று.  அல்லாஹ்வால் படைக்கப்பட்ட சைத்தான்   எப்படி அல்லாஹ்வுக்கே எதிரியாகி, அல்லாஹ் ஏற்படுத்திய மார்க்கத்தை சிதைக்க முடியும்?  

உண்மையில் ஷைத்தான் மனிதர்களுக்குத்தான் எதிரி.  குர்ஆன் இவ்வாறு சொல்கிறது:
"உண்மையில் ஷைத்தான் உங்களின் பகைவனாவான்.  ஆகையால் நீங்களும் அவனை உங்களின் பகைவனாகவே கருதுங்கள்.  அவன் தன்னைப் பின்பற்றுபவர்களைத் தனது வழியில் அழைத்துக் கொண்டிருப்பது அவர்கள் நரகவாசிகளுடன் இணைந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான்." (35:06)
 அதுபோல, 'அல்லாஹ் ஏற்படுத்திய மார்க்கங்கள் சைத்தானால் சிதைக்கப்பட்டன' என்பதும் தவறான கருத்துதான். இறைத்தூதர்களை அனுப்புதல், வேதங்களை வழங்குதல், மார்க்கத்தை ஏற்படுத்துதல், அதனை பாதுகாத்தல், அதில் மாற்றங்களை ஏற்படுத்துதல் ஆகிய அனைத்தையும் செய்யக் கூடியவன் அல்லாஹ் ஒருவனே.

”இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன், இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்” என்று குர்ஆனில் (5:3) சொல்கிறான் அல்லாஹ்.  இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன் வந்த இறைத்தூதர்களுக்கோ அவர்களுக்கு அளிக்கப்பட்ட வேதங்களிலோ இப்படி ஒரு அறிவிப்பை அல்லாஹ் செய்யவில்லை.  அப்படியென்றால், முந்தைய இறைத்தூதர்களின் காலத்தில் மார்க்கம் நிறைவு செய்யப் பட்டிருக்கவில்லை.  எனவே அடுத்தடுத்து வந்த இறைத்தூதர்களின் மூலம் இறைச் சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தன.  இறுதி வேதம் குர்ஆன் மூலம் இஸ்லாம் முழுமைப் படுத்தப் பட்டு விட்டது.

"நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை இறக்கி வைத்தோம்.  நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்" (குர்ஆன் 15:9)

இவ்வாறு, குர்ஆனை அருளிய அல்லாஹ்வே அதனை பாதுகாக்கவும் பொறுப்பேற்ற பிறகு, அல்லாஹ்வின் படைப்பான ஷைத்தானால்  அதை ஒருபோதும் சிதைக்க முடியாது.  அல்லாஹ் நாடினால், இஸ்லாம் அதன் தூய வடிவில் இறுதி நாள் வரை நிலைத்திருக்கும்.  

Sunday, January 10, 2010

இஸ்லாம்: அறிமுகம் இல்லாமல் ஒரு அறிமுகம்!

"பிரதமர் மன்மோகன் சிங்கை உங்களுக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறேன்"

"அடேடே...!  அறிமுகம் செய்து வைக்கும் அளவிற்கு உங்களுக்கு பிரதமரை தெரியுமா?"

"எனக்கு அவரைத் தெரியாது..  அவருக்கும் என்னைத் தெரியாது..  இருந்தாலும் , வாங்க அறிமுகப் படுத்தி விடுகிறேன்"

இந்த மொக்கை ஜோக்கைச் சொல்லி இந்தக் காலத்தில் ஒரு எல்.கே.ஜி குழந்தையைக் கூட சிரிக்க வைக்க முடியாது. ஆனால் இதைப்போன்ற ஒரு விஷயத்தை சீரியஸாக சொல்ல முயன்றிருக்கிறார் செங்கொடி.

கிபி ஆறாம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் மக்கா என்னும் நகரில் முகம்மது என்ற பெயர் கொண்ட உயர்குல வணிகரால் தொடங்கப்பட்ட மதம் இஸ்லாம். ஆனால் அவரைப்பின்பற்றும் இஸ்லாமியர்கள் அல்லது முஸ்லீம்கள் இதை இப்படி ஏற்றுக் கொள்வதில்லை.  அனைத்து ஆற்றல்களையும் தன்னகத்தே அடக்கிக்கொண்டுள்ள தங்களின் ஏக இறைவனான அல்லா களி மண்ணிலிருந்து முதல் மனிதனை படைத்தபோது, அந்த முதன் மனிதனிலிருந்து தொடர்ச்சியாக மனித குலத்தை உருவாக்க நினைத்தபோது, அப்படியான மனித குலத்திற்காக இறைவன் உண்டாக்கித்தந்ததுதான் இஸ்லாம் எனும் மதம் என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை. - செங்கொடி
அதாவது, முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டபோதே இஸ்லாம் தோன்றி விட்டது என்று முஸ்லிம்கள் நம்பிக் கொண்டிருப்பது உண்மையல்ல என்கிறார் செங்கொடி. 

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தன்னை ஒரு இறைத்தூதராக சொல்லிக் கொண்டது உண்மையல்ல;  மாறாக அவர்தான் இஸ்லாம் மதத்தின் ஸ்தாபகர் என்கிறார் செங்கொடி.

எனில், இறைவேதம் குர்ஆன் அல்லாஹ் அருளியது என்று முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னது உண்மையாக இருக்க முடியாது; அதை நபி (ஸல்) அவர்களே எழுதியிருக்க வேண்டும் என்பது செங்கொடியாரின் கருத்து.

கோடிக்கணக்கான முஸ்லிம்களின் நம்பிக்கையை மேற்கண்ட ஒரே வாக்கியத்தில் 'பொய்' என்று செங்கொடி மறுக்கிறார் என்றால்,
  • ஆதம் (அலை) முதல் நபி ஈசா (அலை) வரையிலான இறைத்தூதர்களின் வரலாறுகளை அவர் அறிந்திருக்கவில்லை
  • இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், குறிப்பாக, எதிரிகளால் கூட 'அவர் பொய்யர்' எனக் குற்றஞ்சாட்ட முடியாத அப்பழுக்கற்ற குணநலன்களைப் பற்றியும் செங்கொடி அறிந்திருக்கவில்லை.
  • "இது மனிதர்களால் எழுதப் பட்டிருக்கவே முடியாது" என்று சொல்லத்தக்க பல ஆதாரங்கள் குர்ஆனில் இருப்பதையும் அவர் அறிந்திருக்கவில்லை.
 இருந்தும், இஸ்லாமிய நம்பிக்கைகளின் அடிப்படையைக்கூட அறிந்திருக்காத தோழர் செங்கொடியின் பதிவின் தலைப்பு:  இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

கிபி ஆறாம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் மக்கா என்னும் நகரில் முகம்மது என்ற பெயர் கொண்ட உயர்குல வணிகரால் தொடங்கப்பட்ட மதம் இஸ்லாம். ஆனால் அவரைப்பின்பற்றும் இஸ்லாமியர்கள் அல்லது முஸ்லீம்கள் இதை இப்படி ஏற்றுக்கொள்வதில்லை. அனைத்து ஆற்றல்களையும் தன்னகத்தே அடக்கிக்கொண்டுள்ள தங்களின் ஏக இறைவனான அல்லா களிமண்ணிலிருந்து முதல் மனிதனை படைத்தபோது, அந்த முதன் மனிதனிலிருந்து தொடர்ச்சியாக மனித குலத்தை உருவாக்க நினைத்தபோது, அப்படியான மனித குலத்திற்காக இறைவன் உண்டாக்கித்தந்ததுதான் இஸ்லாம் எனும் மதம் என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை.
மனித குலத்திற்கான அந்த இஸ்லாம் எனும் ஒரே மதம் உருவான சில கணங்களிலேயே சைத்தான் எனும் அல்லாவின் எதிரியால் சிதைவுக்கு உள்ளாக்கப்படுகிறது. பின்னர் தொடர்ந்து சைத்தானால் சிதைக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு அதனால் மனிதர்கள் மனம்போன போக்கில் பின்பற்றக்கூடிய நிலையானது. உருவாக்கித்தந்த ஆண்டவனே தான் உருவாக்கிய மதம் இப்படித்தான் அப்படி இல்லை என்று போதிப்பதற்காக இறைத்தூதர்களை அனுப்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டது. ஆனால் அவைகளும் சைத்தானின் வினையாக்கலுக்கு ஆட்பட்டு தனித்தனி மதங்களாக உருமாறி இறைத்தூதர்களையே கடவுளாக கொண்டாடும் நிலையாகி நிற்கிறது. இப்படி அனுப்பப்பட்ட  அனேகம் அனேகம் தூதர்களில் முகம்மது தான் கடைசியாக வந்த தூதர் அதாவது நபி. இனி உலகம் உள்ளளவும் மனித குலம் வாழும் வரையிலும் அந்த முகம்மது நபி தான் இறுதித்தூதர், அவர் சொன்னதும் செய்ததும் தான் இஸ்லாமின் வேதமும் வழிகாட்டுதலும். இதுவும் முஸ்லீம்களின் நம்பிக்கை.
முஸ்லீம்களின் இந்த நம்பிக்கை வேதம் படித்த, மத ஆச்சாரங்களின்படி ஒழுகும் சில மேல்மட்ட முஸ்லீம்களிடம் மட்டும் இருப்பது, ஏனைய சாதாரணமானவர்களுக்கு இதெல்லாம் தெரியாது என்று யாரும் கருதிக்கொள்ளலாகாது. அடிமுதல் முடி வரை, ஏழையானாலும் பணக்காரனானாலும், நல்லவன் கெட்டவன் எனும் பேதமின்றி முஸ்லீம்கள் அனைவரிடமும் இந்த நம்பிக்கை நிலை கொண்டிருக்கும். இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கும் சமூகவியல் ஒழுங்குகளை முஸ்லீம்கள் எல்லோரும் கடைப்பிடிப்பார்கள் என்று சொல்லமுடியாது. இஸ்லாம் கூறும் மதச்சடங்குகளை எல்லோரும் ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால் முஸ்லீமாக இருப்பவர்கள் அனைவரும் மேற்கண்ட நம்பிக்கையை தவறாமல் கொண்டிருப்பார்கள் என அறுதியிட்டு சொல்லிவிடலாம். ஏனென்றால் இது தான் அந்த மதத்தின் அடிப்படை.
பிற மதங்களில் வேறொன்றிலிருந்து தங்களின் மதத்திற்கு மாறுபவர்களை அடையாளப்படுத்த சில சடங்குகளை செயல் வடிவங்களை கொண்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைப் பொருத்தவரை மேற்கண்ட நம்பிக்கைதான் வழிமுறை. அதை கண்டிப்பாக நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும், அப்படி ஏற்றுக்கொள்ளாதவரை ஒருவனை முஸ்லீமாக கருத மாட்டார்கள். “அல்லாவை தவிர வேறு ஆண்டவன் யாருமில்லை. முகம்மது நபி அல்லாவின் தூதர் தான்” இப்படி ஒருவன் நம்பிவிட்டால் போதும் அவன் முஸ்லீமாக ஆகிவிடுவான். இதனைத்தொடர்ந்து இன்னும் சில நம்பிக்கைகள் வருகின்றன. சொல்லப்போனால் தொடர்ந்து வரும் இந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் தான் மேற்கண்ட சூத்திரமே வடிவமைக்கப்பட்டுள்ளது.
௧) இதில் முதலில் வருவது ஆண்டவனின் சக்தி அல்லது அதிகாரம். ஆண்டவன் யாராலும் பெறப்படவில்லை, சுயம்பு என்பது எல்லோருக்கும் தெரியும், சுற்றிவழைத்து எல்லா மதங்களும் சொல்வது தான். ஆனால் இஸ்லாத்தின் விளக்கம் வேறானது, ஆண்டவனான அல்லாவைத்தவிர வேறு யாருக்கும் எதற்கும் எந்த சக்தியும் இல்லை என்பதுதான். ஒரு பொருளுக்கு ஒரு குறிப்பிட்ட ஆற்றல் இருக்கிறது என்றால் அது அல்லாவைத்தவிர வேறு எவற்றினாலும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அல்லாவின் உத்திரவை மீறி அது செயல்படவும் முடியாது. பிரபஞ்சம் முழுக்க நாம் காணும், காணாத; அறிந்த , அறியாத அனைத்தும் அல்லாவின் கட்டளையை ஏற்று செயல்படுத்தும் விதத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.
௨) மறைவானவற்றின் ஞானம். அதாவது இந்த உலகத்திலோ அல்லது பிரபஞ்சத்திலோ ஏதோ ஒன்று அல்லது அதைப்பற்றிய ஞானம் மனிதனுக்கு தெரியவில்லை என்றால் அது இல்லை என்று கூற முற்படுவதோ, ஆதாரம் உண்டா எனக்கேள்வி கேட்பதோ அல்லாவின் சமஸ்தானத்தில் மிக மிகக்கடுமையான தண்டனைக்குறிய குற்றமாகும். உதாரணமாக எதிர்காலத்தில் பூமியிலிருந்து ஒரு மிருகம் வெளிப்பட்டு மக்களுடன் பேசும் என்றால் அதை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஒரு மிருகம் வருமா? பரிணாமத்தில் அதற்கு வாய்ப்பிருக்கிறதா? பேசும் மிருகம் என்றால் அது சமூக வயப்பட்டிருக்கவேண்டுமே என்பன போன்ற சிந்தனைகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் அல்லாவைப்பற்றிய பயமற்ற காபீராக இருக்கவேண்டும். ஏனென்றால் அனைத்து ஞானங்களும் அறிந்தவன் அல்லா ஒருவனே. அல்லா இப்படிக்கூறியிருக்கிறான் என்று யாரேனும் கூறினால் அல்லா அப்படி கூறியிருக்கிறானா? என்று குரானின் பக்கங்களை நீங்கள் புறட்டிப்பார்க்கலாமே தவிர அதற்கு சாத்தியமிருக்கிறதா என்று நீங்கள் சிந்திக்கக்கூடாது. மொத்தத்தில் அல்லாவின் இருப்பையோ, ஆற்றலையோ நீங்கள் சந்தேகிக்கவே கூடாது.
௩) குரான். இது ஆண்டவனால் முகம்மதுக்கு வழங்கப்பட்ட வேதம். இதை நீங்கள் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். இதில் எந்த ஒரு முரண்பாட்டையும் நீங்கள் காணமுடியாது.  இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் மனிதன் வாழ்ந்தாலும் தங்களின் ஐயங்களை இதிலிருக்கும் ஆறாயிரத்துச் சொச்ச வாக்கியங்களுக்குள்ளிருந்துதான் தீர்த்துக்கொள்ளவேண்டும். இதற்கு வெளியே மனிதனுக்கு எந்த ஒரு தீர்வும் இல்லை. இதிலிருக்கும் எதிர்காலக் கணிப்புகள் அப்படியே புள்ளி மாறாமல் நிகழும். இதில் கூறப்பட்டிருக்கும் வரலாறுகள் அத்தனையும் அப்படியே நடந்தவை. எந்த மாறுதலோ திருத்தமோ தேவையில்லாத, அல்லா கூறியது போன்றே அப்படியே பாதுகாக்கப்படும் அதி அற்புத வேதம் திருக் குரான்.
மேலே கூறப்பட்ட நம்பிக்கைகள் அனைத்தும் ஒரு முஸ்லீமுக்கு கட்டாய அவசியமாகும். இதனால் தான் முஸ்லீம்கள் ஏனைய மதங்களை பின்பற்றுபவர்களை விட அதிகமான பற்றும் பிடிப்பும் நம்பிக்கையையும் தங்கள் மதத்தின் மீது கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கைகள் அவர்களுக்குள் ஆழமாக வேரோடியிருப்பதால் தான் இஸ்லாம் கூறும் ஒரு செய்திக்கு மாறாக ஒன்றை எவ்வளவு ஆதாரங்களுடன் நிரூபணமாக விளக்கினாலும் ஏற்றுக்கொள்ள பிடிவாதமாக மறுக்கிறார்கள். காரணம் அவர்கள் மனதில் சரியாக இருக்குமோ என்று சிறிய ஐயம் வந்தாலும் செத்த பிறகு ஆண்டாண்டு காலத்திற்கும் எண்ணெய்க்கொப்பரையில் வறுபட வேண்டியதிருக்கும். மறுபரிசீலனை என்ற வார்த்தையே இஸ்லாத்தின் அகராதியில் கிடையாது.
ஆனால், எந்த நம்பிக்கைகள் அவர்களின் மதத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பை ஏற்படுத்துகிறதோ அந்த நம்பிக்கைகள் முரண்பாடுகளின் தொடக்கமாகவும் இருக்கின்றன என்பது அவர்களுக்கு விளங்குவதில்லை. காரணம் எந்த முஸ்லீமும் அந்த நம்பிக்கைகளை உரசிப்பார்த்ததில்லை. அந்த நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்தியதில்லை. எல்லாவற்றையும் சிந்திப்பது இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டுள்ளது என்பவர்கள் கூட தங்கள் சிந்தனையை உள்வசமாய் இஸ்லாத்தை நோக்கி திருப்புவதில்லை. திருப்பினால் அவன் முஸ்லீமல்ல என இஸ்லாமியர்களால் தீர்ப்பளிக்கப்படுவது மட்டுமல்ல, ஊர்விலக்கம், சமூகப்புறக்கணிப்பு, பொருளாதாரத் தனிமைப்படுத்துதல் என்பவை தொடங்கி கொலை மிரட்டல் வரை எதிர்கொள்ள நேரிடும். சிலர் கொலை செய்யப்பட்டதும் உண்டு. அமெரிக்காவின் ஆமினா வதூத், கனடாவின் இர்ஷாத் மஞ்சி, எகிப்தின் நவ்வல் சதாவி, லெபனானில் சாதிக் ஜலால் அல் அஸ்ம், மஹ்தி அமில், பாகிஸ்தானின் தாரிக் அலி, சோமாலியாவின் ஹிர்ஸ் அலி இவர்களெல்லாம் இஸ்லாம் பற்றிய தங்களின் மாற்றுக்கருத்துகளால் கடுந்துன்பங்களுக்கு ஆளானவர்களில் சிலர். இவர்கலெல்லாம் இஸ்லாத்தை விட்டு விலகியவர்கலல்ல. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டே அதன் கொள்கைகளைப்பற்றிய தங்கள் ஐயங்களை வெளியிட்டவர்கள்.  தமிழகத்தில் தக்கலையில் கவிஞர் ரசூல் கடந்த சில ஆண்டுகளாக ஊர் விலக்கம் செய்யப்பட்டு சொந்தக்காரரின் மரணத்தில் கூட கலந்து கொள்ள இயலாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இவைகளெல்லாம் இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை பரிசீலிப்பதில்லை என்பதோடு மட்டுமல்லாது அப்படி பரிசீலிப்பவர்களையும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதற்கான எடுத்துக்காட்டுகள். ஆனாலும் மாற்றுக்கருத்துகளை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்பதாலேயே அவர்கள் சரியான இடத்தில் இருப்பதாகப் பொருளாகாது. சரியானதிலேயே தாங்கள் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் முஸ்லீம்களை நோக்கி கேள்விகள் தொடரும்….

இப்பதிவின் தொடக்கத்தில் உள்ள ஜோக்கை மீண்டும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள்!

Saturday, January 09, 2010

இஸ்லாமிய ஒருங்கிணைவை தடுக்க விரும்பும் பொதுவுடைமைவாதி!

செங்கொடி என்ற பொதுவுடைமைவாதி, இஸ்லாமியக் கொள்கைகளை பரிசீலனைச் செய்து எழுதும் பதிவுகளைப் பார்க்க நேர்ந்தது.

இந்தத்தொடர் இஸ்லாமியர்களின் மதச்சடங்குகளை, சட்டங்களை, வேத வசனங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு அதற்கு அவர்கள் தரும் விஞ்ஞான விளக்கங்கள் எப்படி போலியாக இருக்கின்றன என்பனவற்றை யும், இஸ்லாம் தோன்றிய அன்றைய அராபியாவின் அரசியல், சமூக, பொருளாதார, இறையியல் சூழல்களையும் பேசுவதன் மூலம் இஸ்லாம் என்ற மதத்தின் புனித சட்டகங்களை நீக்கி அதன் மெய்யான இருப்பை, உள்ளடக்கத்தை அடையாளப்படுத்தும் ஒரு முயற்சிதானேயன்றி வேறில்லை.
 என்கிறார் செங்கொடி.  இதை இவர் ஏன் செய்கிறாராம்?  அதற்கும் அவரே பதிலளிக்கிறார்.
இந்தியாவில் இந்துப்பாசிச வெறிக்கு அதிகம் பலியாவது இஸ்லாமியர்கள் தாம். அரசு பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படும்போதும் அவர்களின் மத அடையாளமே முன்னிருத்தப்படுகிறது. இதனாலும் அவர்கள் மதத்தின் தழுவலில் கட்டுண்டு கிடக்க ஏதுவாகிறது. இதனடிப்படையில் அரசியல் விழிப்புணர்வு என்ற பெயரில் மதரீதியில் ஆன்மீக இயக்கங்களின் பின்னால் அணிதிரள்வது அதிகரிக்கிறது. ஒரு வகையில் இது இந்துபாசிசங்களுக்கும் தேவையாகவும் உதவியாகவும் இருக்கிறது. அந்த வகையில் இந்துபாசிசங்களுக்கு உதவும் இஸ்லாமிய ஒருங்கிணைவை தடுத்து வர்க்க அடிப்படையில் சமூக போராட்டங்களில் அவர்களையும் இணைத்து முன்செல்லவேண்டிய அவசியமிருக்கிறது. அதற்கு அவர்களின் மத நம்பிக்கையை மதப்பிடிப்பை கேள்விக்குள்ளாக்குவது முன்நிபந்தனையாகிறது.
அதாவது, இஸ்லாமியர்கள் மத அடிப்படையில் ஒருங்கிணைந்து இருப்பதால்தான் இந்துப்பாசிச வெறிக்கு பலியாகிறார்களாம்.  இந்துப்பாசிச வெறியைத் தடுக்க வேண்டுமென்றால் இஸ்லாமியர்களின் ஒருங்கிணைப்பைத் தகர்த்து விட வேண்டுமாம். 

அதாவது, 'மாமரத்தில் மாம்பழம் காய்த்துத் தொங்குவதால்தான் போக்கிரிப்பசங்க அதன் மேல் கல்லெறிகிறார்கள்.  எனவே, அவர்கள் கல்லெறிவதைத் தடுக்க வேண்டுமென்றால் மாமரத்தை வெட்டி விட வேண்டும்' என்ற யோசனையை முன்வைத்திருக்கிறார் தோழர் செங்கொடி.

இது அவரது கட்டுரைத் தொடரின் 'நுழைவாயில்' பதிவில் கண்ட யோசனை.  தொடரின் மற்ற பதிவுகளிலும் இதுபோன்ற பல சுவாரஸ்யமான யோசனைகளை அவர் வெளிப்படுத்தியிருக்கக் கூடும்.  படித்து விட்டு சொல்கிறேன், இன்ஷா அல்லாஹ்.

Tuesday, January 05, 2010

இஸ்லாம் எதிர் கொள்ளும் விமர்சனங்கள்!

தமிழில் வலைப்பதிவுகள் வரத்தொடங்கிய ஆரம்பக் காலத்திலேயே 'இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சார' வலைப்பதிவுகளும் முளைத்து விட்டன.  இந்த இஸ்லாமிய விமர்சகர்களில் பிரதான இடத்தை வகிப்பவர்கள் பார்ப்பனீய / இந்துத்துவ ஆதரவாளர்கள்.  அதற்கடுத்த இடங்களில் இருப்பவர்கள் கிருஸ்துவ பதிவர்கள், கம்யூனிஸ்டுகள், நாத்திகவாதிகள், பெண்ணுரிமைவாதிகள் போன்றோர்.

ஆனால், இவர்கள் வெளிப்படுத்தும் தங்களைப் பற்றிய அடையாளங்கள் உண்மையானதாகத் தான் இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.  நாத்திகப் போர்வையிலோ,  கிருஸ்துவப் பெயரிலோ எழுதுபவர் உண்மையில் இந்துத்துவவாதியாக இருக்கலாம். 

விமர்சகர்களின் பிண்ணனி எதுவாக இருந்தாலும் இஸ்லாம் பற்றிய அவர்களின் விமர்சனங்களில் ஒரு பொதுத் தன்மையைக் காணலாம்.  இஸ்லாமிலுள்ள குறைபாடுகள் என இவர்கள் கருதும் விஷயங்களைப் பற்றி பக்கம் பக்கமாக எழுத சளைக்காத இவர்கள், அந்தக் குறைகளைக் களைய அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் மதம் அல்லது கொள்கை என்ன வழி காட்டுகிறது என்பதைச் சொல்வதேயில்லை.

கடைவீதியில் இரண்டு பேர் மருந்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  முதலாமவர் 'இன்னின்ன வியாதிகளை எனது மருந்து குணப் படுத்தும்' என்று சொல்லி விற்பனை செய்கிறார்.  இன்னொருவரோ, 'அய்யய்யோ,  அந்த ஆளோட மருந்தை வாங்காதீங்க.  அதுல அந்த குறை இருக்கிறது.. இந்த குறை இருக்கிறது..  அதனால என்னோட மருந்தை வாங்கிட்டுப் போங்க' என்று சொன்னால் அதில் நேர்மை இல்லை.  முதலாமவரின் மருந்து குறைபாடுடையது என்பதால் மட்டுமே இரண்டாமவரின் மருந்து சிறந்ததாக ஆகி விடாது.  முதலாம் மருந்தை விட தனது மருந்தில் என்ன சிறப்புத் தன்மைகள் இருக்கின்றனவோ அவற்றை எடுத்துச் சொல்லி விற்பதே முறை.

இஸ்லாமை விமர்சிக்கும் பெரும்பாலானோர் இந்த இரண்டாம் (தர) மருந்து வியாபாரியாகவே இருக்கின்றனர்.

Thursday, July 14, 2005

குண்டு மனிதருக்கு வந்த கோபம்!

'விர்'ரென்று வேகமாக வந்து வளாகத்துக்குள் நுழைந்து 'கிரீச்'சென்று நின்றது அந்த கருப்பு வண்ணக் கார்.

ஓட்டுனர் இருக்கையிலிருந்து இறங்கிய அந்தக் குண்டுப்பிறவி படாரென்று கதவை மூடிவிட்டு இரண்டு இரண்டு படிக்கட்டுகளாக தாவி நான்கே எட்டில் முதன்மை வாயிலை அடைந்தது. அரங்குக்குள் நுழைந்து மூச்சிரைக்க, கோபம் கொப்புளிக்கும் கண்களால் இங்குமங்கும் துழாவி, மேற்கே முகம் பார்த்து நின்றிருந்த டிஷர்ட் ஆசாமியை நெருங்கி, 'மொத்'தென்று விட்டார் ஒரு குத்து.

டிஷர்ட் ஆசாமியின் உதட்டோரத்தில் இரத்தம்...!

'உனக்கு என்ன துணிச்சல்?' என ஆவேசமாக கத்தினார். சுற்றி இருந்தவர்கள் குண்டு மனிதரையும் டிஷர்ட் ஆசாமியையும் பிரித்து குண்டு மனிதரை குண்டுகட்டாக வெளியே தூக்கிச்சென்றனர். மீடியாவையும் பத்திரிக்கையாளர்களையும் சகட்டுமேனிக்கு திட்டிக்கொண்டே சென்றார் குண்டு மனிதர்.

திடீரென்று தன்னைப்பிடித்திருந்தவர்களை உதறித்தள்ளி டிஷர்ட் ஆசாமியை மறுபடியும் நெருங்கிய குண்டு மனிதர், 'இனிமேல் என் மனைவியைப்பற்றி ஒரு வார்த்தை எழுதினே... நடக்கிறதே வேறே..' என சுட்டு விரலை ஆட்டி மிரட்டினார்.

ஏன் இந்த ஆவேசம்? டிஷர்ட் ஆசாமி திரைப்பட நிருபராம். குண்டு மனிதரின் மனைவி ஒரு மாடலிங் நடிகையாம். இந்த மாதிரி நடிகைகளைக் குறித்து பொதுவாக எப்படி எழுதுவார்களோ, அப்படி அந்த மாடலிங் பெண்ணைப்பற்றியும் டிஷர்ட் ஆசாமி எழுதினாராம். இதனைப்படித்த குண்டு மனிதரின் மனம் புண்பட்டு விட்டதாம். ஆவேசத்துக்கு அதுதான் காரணமாம்.
அந்தக் குண்டு மனிதர் யார் தெரியுமா?

ஸல்மான் ருஷ்தி!

ஆம், 'சாத்தானிய வசனங்கள்' நாவலை எழுதி கோடிக்கணக்கான முஸ்லிம்களின் இதயத்தை காயப்படுத்திய அதே ருஷ்திதான்.
தன்னுடைய லேட்டஸ்ட் நடிகை மனைவி குறித்து ஆபாசமாக எழுதிவிட்டானே என இந்தளவுக்கு ஆவேசப்பட்ட ருஷ்திக்கு, தன் 'சாத்தானிய வசனங்கள்' நாவலால் முஸ்லிம்கள் எந்தளவுக்கு துடித்திருப்பார்கள் என்பது புரிந்திருக்குமா? அறுபது வயது ருஷ்திக்கு 35 வயது மனைவி மீது இருக்கும் அன்பை விட கோடிக்கணக்கான மடங்கு அதிகமான இன்னும் சொல்லப்போனால் உயிரினும் மேலான நேசத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது வைத்திருக்கும் முஸ்லிம்கள் எந்தளவுக்கு கொதித்துப்போய் இருப்பார்கள்? ருஷ்திக்கு உறைத்திருக்குமா?

தெரியவில்லை. ஆனால், கருத்துச் சுதந்திரம் என்கிற போர்வையில் ருஷ்தியை அரவணைத்து, பாதுகாத்து இந்தப்பிரச்னையை சாக்காக வைத்துக்கொண்டு ஈரானுடன் பல்லாண்டுகள் தூதரக உறவுகளை முறித்து முரட்டுத்தனமாக நடந்து கொண்ட மேற்கத்திய நாடுகள் ருஷ்தியின் ஆவேசத்தைக் கண்டு கொள்ளவில்லையே..! ருஷ்திக்கு எதிராக முஸ்லிம்கள் ஆவேசத்தை வெளிப்படுத்தியபோது கண்டித்து பக்கம் பக்கமாக எழுதித்தள்ளிய ஊடகம் ருஷ்தியின் ஆவேசத்தை அமுக்கி விட்டதே..! ஏன்?

நன்றி: நம்பிக்கை ஜூலை 2005

Tuesday, July 12, 2005

சிறுகதை - வேண்டாத பிள்ளை!

('நம்பிக்கை' ஜூன் 05 இதழில் வெளியான சிறுகதை, சிறு மாற்றங்களுடன்..)

அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் ஆறாவது மாடி வீட்டின் சன்னலோரம் உதுமான் அமர்ந்திருந்தார். எதிரே உள்ள தொடக்கப் பள்ளியின் வாசலருகில் வகுப்பு முடிந்து வரும் தம் குழந்தைகளை எதிர்பார்த்து பெற்றோர்களும், பணிப்பெண்களும் காத்திருக்கின்றனர். பள்ளி நேரம் முடிந்து குழந்தைகள் வரத்தொடங்கி விட்டனர். அவர்கள் ஒருவர் ஒருவராகவும் வருவார்கள். இரண்டு மூன்று பேர் சேர்ந்து உரக்கப் பேசி சிரித்துக் கொண்டும் வருவார்கள். சிலர் சோர்வாக வருவார்கள். களைப்பு முகத்திலேயே தெரியும். தனக்காக காத்திருக்கும் பெற்றோரை பார்த்த உடன் சடாரென ஒரு உற்சாகம் பிறக்க புத்தகப்பையை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு ஓடி வருவார்கள். பத்து, பதினைந்து நிமிடங்களில் அந்த இடம் காலியாகி விடும். பள்ளி நடக்காத, சனி ஞாயிறு, மற்றும் விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களிலெல்லாம் மாலை வேளைகளில் இந்த குழந்தைகளை கண்டு மகிழ்வது உதுமானின் ஒரு முக்கிய பொழுது போக்கு. பள்ளி விடுமுறை நாட்களில் நேரம் போவது அவருக்கு பெரும் சிரமமாக இருக்கும். எப்படா மீண்டும் பள்ளி திறப்பார்கள் என்று காத்திருப்பார்.

'காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது!' என பெருமூச்சிட்டார் உதுமான். அவரது குழந்தைகளை இதே போல் பள்ளிக்கு அழைத்துச் சென்ற நாட்கள் அவர் நினைவிலாடியது. காலை நேர வகுப்பென்றால் ஏழு மணிக்கெல்லாம் பள்ளிக்குள் இருக்க வேண்டும். பள்ளிக்கூடம் வீட்டிற்கு அருகில்தான் இருந்தது. ஐந்து நிமிட நடை தூரம்தான். பிள்ளைகளின் புத்தகப்பைகள்தான் எவ்வளவு கனமாக இருக்கும்! கொஞ்சம் தாமதமாகி விட்டால் அந்தப் பையையும் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக விரைவார்கள். உதுமானும் அவர்களுடன் சேர்ந்து ஓட வேண்டி இருக்கும். இல்லாவிட்டால் அவரை எதிர் பார்க்காமல் சாலையை கடக்க இறங்கி விடுவார்கள். மாலையில் பள்ளி முடியும் நேரத்தில் அம்மா சல்மா போய் அவர்களை அழைத்து வருவாள். சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு குர்ஆன் வகுப்பிற்கோ, டியூஷனுக்கோ போக வேண்டி இருக்கும். சல்மாவுக்குத்தான் அதிக அலைச்சல்.

உதுமானின் இரு மகள்களில் மூத்தவள் படபடவென்று வெகுளித்தனமாக பேசுவாள். மனதில் ஒன்றையும் மறைத்து வைக்கத் தெரியாது. திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற பின்பும் அந்த வெகுளித்தனம் மட்டும் மாறவேயில்லை. அவள் கணவருக்கு சவுதி அரேபியாவில் ஒரு நல்ல வேலை கிடைத்தது. புனித நகரான மக்காவுக்கு அருகில் உள்ள ஜித்தாவில் வேலை என்றதும் உடனே குடும்பத்துடன் புறப்பட்டு விட்டார்கள். உதுமானும், சல்மாவும் ஹஜ் யாத்திரை சென்ற போது அவர்கள் வீட்டில் போய் தங்கி விட்டு வந்தார்கள். அவர்களும் குடும்பத்துடன் இரண்டு வருடத்திற்கொருமுறை சிங்கப்பூர் வருவார்கள். மற்றபடி வாரம் ஒரு முறை தொலைபேசியில் அழைப்பார்கள்.

சின்னவள் மூத்தவளைவிட நான்கு வயது இளையவள். அமைதியான சுபாவம். படிப்பில் கெட்டி. கணிணி படிப்பில் ஆர்வம் கொண்டு படித்தாள். அவளுக்கு அமைந்த கணவரும் கணிணி வல்லுனர்தான். இருவரும் தற்போது கனடாவில் இருக்கிறார்கள்.

சின்னவள் பிறந்தபோது உதுமான் ஒரு நாணயமாற்று வியாபாரியிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். சுற்றுலாப்பயணிகள் அதிகம் நடமாடும் இடத்தில் கடை இருந்தது. காலை எட்டு மணிக்கு போனால் இரவு ஒன்பது மணி வரை கை ஓயாத வேலை இருக்கும். சம்பளம்தான் போதுமானதாக இல்லை. ஆனால் கிடைத்த சம்பளத்தில் பொறுப்பாக குடும்பம் நடத்தும் திறமை சல்மாவிடம் இருந்தது.

இரண்டாவது மகள் பிறந்து மூன்று மாதமே ஆன நேரத்தில்தான் அது நிகழ்ந்தது. சல்மா மீண்டும் கர்ப்பமாகி இருப்பதாக டாக்டர் சொன்னபோது உதுமானுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சாதாரணமாக சந்தோஷப்பட வேண்டிய ஒரு செய்தி அவருக்கு அதிர்ச்சி அளித்ததென்றால் அதற்கு காரணம் இருந்தது. அப்போதைய குடும்ப பொருளாதார சூழ்நிலையில் இன்னொரு குழந்தையை பெற்று வளர்க்க தம்மால் முடியுமா என்ற கேள்வி அவர் முன் விசுவரூபமெடுத்து நின்றது. அது மட்டுமல்லாமல், மூன்று மாதங்களுக்கு முன்புதான் பிரசவம் நடந்திருக்க, இன்னொரு கர்ப்பத்தை சுமக்க சல்மாவின் உடல்நிலை இடங்கொடுக்குமா என்பதும் அவரை மிக குழப்பத்தில் ஆழ்த்தியது.

மிகுந்த யோசனைக்கு பிறகுதான் உதுமான் அந்த முடிவுக்கு வந்தார். கர்ப்பத்தை கலைத்துவிடுவதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை. சல்மாவுக்கு இதில் உடன்பாடே இல்லை. வேறு எதற்காகவும் அவள் தன் கணவருடன் இந்தஅளவுக்கு வாதிட்டதேயில்லை. ஆனால் அவர் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார்.

சல்மாவுக்கு இருமுறை பிரசவம் பார்த்த அதே டாக்டரிடம் அழைத்துச் சென்று விஷயத்தை கூறினார் உதுமான். அவர்கள் மேல் அக்கறை கொண்ட அந்த டாக்டர் கர்ப்பத்தை கலைக்க வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். உதுமான் வ்¢டாப்பிடியாக இருந்ததால் வேறு ஒரு டாக்டரிடம் பரிந்துரை செய்து அனுப்பி விட்டார்.

இந்த டாக்டர் ஒரு சீனர். உதுமான் சொன்னதை காது கொடுத்து கேட்ட டாக்டர் அவர் மேல் அனுதாபப்பட்டதாகத்தான் தோன்றியது. அதன் பிறகு கர்ப்பம் கலைப்பதைப் பற்றி அவர் விளக்கமாகச் சொல்லி 'நிறைய ரத்தமெல்லாம் வெளியாகும்' என்று சொன்னபோது உதுமானுக்கு கொஞ்சம் கலக்கமாக இருந்தது. 'யாரும் செய்யாததையா நாம் செய்கிறோம்' என்று ஒருவாறு சமாதானம் செய்து கொண்டார்.

பிறகு ஆபரேஷனுக்கு நாள் குறிப்பதற்காக ஒரு நர்ஸிடம் அவர்களை அனுப்பி வைத்தார் அந்த டாக்டர். அந்த தமிழ் நர்ஸ் சல்மாவின் முகவாட்டத்தைக்கண்டு விஷயத்தை ஒருவாறு விளங்கிக்கொண்டார் போலிருக்கிறது. சல்மாவிடம் அவர் ஆறுதலான தொனியில் பேச்சுக்கொடுத்தார். உதுமான் அந்த உரையாடலில் குறுக்கிடவில்லை. சல்மாவுக்கு இத்தகைய இதமான பேச்சு தேவைதான் என்று அவருக்கு தோன்றியது. ஆபரேஷனுக்கு தேதி குறித்தபின் அவர் சொன்னார், "இது நீங்க கணவன் மனைவி எடுக்க வேண்டிய முடிவு. இதுல நான் மூன்றாம் மனுஷி கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனா, நல்லா யோசனை பண்ணிக்குங்க. ஒருவேளை மாறுதலான முடிவு எதுவும் எடுத்தீங்கன்னா இந்த தேதியில வராமெயே இருந்திடலாம். தேதி குறிச்சுட்டமே என்பதற்காக வர வேண்டியதில்லை." உதுமான் மனதில் இப்போது கலக்கத்துடன் குழப்பமும் சேர்ந்து கொண்டது.

இது போன்ற குழப்பமான சூழ்நிலைகளில் தகுந்த ஆலோசனை வேண்டி உதுமான் நாடிச்செல்வது மெய்தீன் மாமாவிடம்தான். அவரை தொலைபேசியில் அழைத்து பேசியபோது தன்னையறியாமலே உதுமானின் குரல் தழுதழுத்தது. "ரொம்ப மனசைப் போட்டு குழப்பிக்கிட்டு இருக்காதே! நாளைக்கு உன்னை ஒருத்தர் கிட்டே அழைச்சுக்கிட்டு போறேன். உன் குழப்பம் தீர ஆலோசனை சொல்றதுக்கு சரியான ஆள் அவர்" என்றார் மெய்தீன் மாமா.

அடுத்த நாள் அவர் உதுமானை அழைத்துச் சென்றது ஒரு பள்ளிவாசல் இமாமிடம். சாந்தமான தோற்றம் கொண்ட பெரியவர் அவர். அஸர் தொழுகை முடிந்த பிறகு அந்த அமைதியான சூழ்நிலையில் அவரைச் சந்தித்தார்கள் அவ்விருவரும். உதுமான் அவரது பிரச்னையை விளக்கியபோது குறுக்கிடாமல் பொறுமையுடன் அவர் கேட்டுக்கொண்டிருந்த விதமே அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. 'இவர் எனக்கு ஒரு நல்ல லோசனை சொல்வார்' என்ற நம்பிக்கையும் அவருக்கு ஏற்பட்டது.

பிறகு அந்த இமாம் சொன்னார், "தம்பி, நான் உங்களுக்கு ஆலோசனை சொல்லனும்னா, நான் கேட்கிற சில கேள்விகளுக்கு நீங்க எதையும் மறைக்காம உண்மையான பதிலை சொல்லனும். டாக்டர் கிட்டேயும், வக்கீல் கிட்டேயும் எதையும் மறைக்கக் கூடாதுன்னு சொல்வாங்க இல்லியா, அது போலத்தான் இதுவும்."

"சரி" என்றார் உதுமான்.

"கர்ப்பத்தை கலைக்கணும்னு நீங்க நினைக்கிறதுக்கு முக்கியமான காரணம் என்ன?"

"அது.. வந்து.. இப்பத்தான் ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடி பிரசவம் ஆகியிருக்கு. உடனே மறுபடியும் கர்ப்பம்னா உடம்பு தாங்குமாங்கிற கவலைதான்!" தன் குரலில் தயக்கம் இருந்தது அவருக்கே தெரிந்தது.

"இன்னொரு கர்ப்பத்தை தாங்க முடியாதுன்னு டாக்டர் யாரும் சொன்னாங்களா?"

"டாக்டர் அப்படி சொல்லலை. உண்மையைச் சொல்லப்போனா 'கர்ப்பத்தை கலைக்காதீங்க'ன்னுதான் சொன்னாங்க"

சற்று நேரம் மவுனமாக அவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு இமாம் சொன்னார், "தம்பி! கொஞ்சம் நிதானமா யோசனை பண்ணிப் பாருங்க! உங்க மனைவி மேல நீங்க வச்சிருக்கிற அக்கறையினால 'இன்னொரு கர்ப்பத்தை அவரால தாங்க முடியுமா?'ன்னு நீங்க கவலைப்படுறீங்க. ஆனா உங்களைவிட உங்க மனைவியின் உடல்நிலையைப் பற்றி நல்லா தெரிஞ்ச டாக்டர் 'கர்ப்பத்தை கலைக்க வேண்டாம்'னு அறிவுரை சொல்றாங்களே! அவங்க சொல்றதுதானே நியாயமா தெரியுது! அதுக்கும்மேலே உங்களோட கவலைக்கு குர்ஆன் விளக்கம் கொடுக்குது பாருங்க..."

'இதற்கெல்லாமா குர்ஆன் விளக்கம் கொடுக்கிறது!' என எண்ணினார் உதுமான்.

"அல்லாஹ் எந்த ஒர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை'. ஒரு பெண்ணால அடுத்தடுத்து இரண்டு கர்ப்பங்களை சுமக்க முடியாதுன்னா அப்படி ஒரு கஷ்டத்தை ஆண்டவன் எந்த பெண்ணுக்குமே கொடுத்திருக்க மாட்டான். சரிதானே?" என்று சொன்ன இமாம், உதுமான் யோசனை செய்யட்டும் என்பதற்காகவோ என்னவோ சற்று நேரம் அமைதியாக இருந்தார்.

உதுமானுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. இருந்தாலும் அவர் இந்த முடிவுக்கு வருவதற்கு முக்கியமான காரணமான பொருளாதார சூழ்நிலைக்கு இவரால் என்ன தீர்வு அளிக்க முடியும்?

அவரது எண்ணவோட்டத்தை புரிந்து கொண்டது போல் இமாம் கேட்டார், "வேறு ஏதாவது பிரச்னை இருக்கா?" மிக தயக்கத்துடன் அவர் தனது பொருளாதார சூழ்நிலையையும், இன்னொரு பிரசவம், குழந்தை வளர்ப்பு ஆகியவற்றை தன் வருமானத்தைக்கொண்டு சமாளிக்க முடியாது என்பதாலேயே இந்த முடிவுக்கு வர நேரிட்டதையும் சுருக்கமாக சொன்னார்.

"தம்பி! உங்க நிலைமை எனக்கு புரியுது. இதுக்கு நீங்க உதவி கேட்கவேண்டியது இறைவன் கிட்டேதான். அந்த இறைவன் சொல்கிறான், 'வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்'. இன்னும் பிறக்கவில்லை என்றால்கூட கர்ப்பத்தில் இருப்பதும் ஒரு உயிர்தானே!. அதுவும் உங்கள் குழந்தைதானே!."

இதற்கு மேல் உதுமானுக்கு வேறு எந்த விளக்கமும் வேண்டியிருக்கவில்லை. ஆபரேஷனுக்கு குறிப்பிட்டிருந்த தேதியில் அவர்கள் மருத்துவமனைக்கு போகவில்லை. சல்மாவுக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது.

****
வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. உள்ளே வந்தது உதுமானின் மகன் அப்துல்லாதான். பட்டமேற்படிப்பு முடித்து ஒரு அரசு நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறான்.

பலத்த சிந்தனையில் ஆழ்ந்திருந்த உதுமான், சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதை கூட இவ்வளவு நேரம் உணரவில்லை. அவரது அருகில் வந்து ஆதரவாக அவரது தோளில் கை வைத்த அப்துல்லா அவரது முகக்குறிப்பை அறிந்தவனாக, "என்ன வாப்பா, டாய்லட் போகணுமா?" என்றான். அவனது கணிணி பையை கீழே வைத்துவிட்டு, சில ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்ட ஸ்ட்ரோக்கின் விளைவாக கை,கால்கள் உணர்விழந்து, பேசும் சக்தி இழந்து சக்கர நாற்காலியிலேயே காலத்தை கழித்துவரும் அவரை, கழிவறைக்கு நாற்காலியுடன் தள்ளிச்சென்றான். கழிவறை அருகில் வந்ததும் ஒரு குழந்தையைத் தூக்குவதுபோல அவரை இருகைகளிலும் தூக்கிக்கொண்டு கழிவறையுள் நுழைந்தான். ஏதோ சொல்ல முயன்று முடியாமல் தவித்த உதுமானின் இரு கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தோடியது.

Wednesday, May 25, 2005

வணிகம் என்றொரு வணக்கம்!

மனிதர்கள் அனைவரும் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பொருளீட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தொழில், வணிகம், உத்தியோகம் ஆகியவை பொருளீட்ட நாம் மேற்கொள்ளும் சில வழிமுறைகள். இம்மூன்றில் நாம் எதை தேர்ந்தெடுத்தாலும் அதிலிருந்து நமக்கு வருமானம் கிடைக்கிறது. சிலவற்றில் அதிகம் கிடைக்கும். சிலவற்றில் குறிப்பிட்ட தொகையே கிடைக்கும். சிலவற்றில் சில நேரங்களில் நட்டம் கூட ஏற்படலாம். வருமானம் பெற்றுத்தரும் வழிமுறைகள் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்தால் இவற்றுக்கிடையில் வேறு வித்தியாசங்கள் அதிகம் இல்லை.

ஆனால் இஸ்லாத்தின் பார்வையில் இந்த வழிமுறைகள் எல்லாம் சமமானவை அல்ல. இஸ்லாம் இவற்றுள் பெரும்பாலானவற்றை ஆகுமாக்கி வைத்து, சிலவற்றை தடுத்திருக்கிறது. குர்ஆன் கூறுகிறது: "வணிகத்தை ஆகுமாக்கி வைத்த இறைவன் வட்டியை தடுத்து விட்டான்" (2:275). அதோடு மட்டுமல்லாது, இஸ்லாம் தொழில், வணிகம் ஆகியவற்றை வெறும் வருமானம் பெற்றுத்தரும் வழிமுறையாக மட்டும் பாராது, அதற்கும் அதிகமான ஒரு உயர்ந்த அந்தஸ்தை அளிக்கிறது.

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உண்மை பேசி நாணயத்துடன் நடந்து கொள்ளும் ஒரு வணிகர், மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீத் (இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தோர்) ஆகியோருடன் இருப்பார்" (அறிவிப்பாளர்: அபூஸயீத் குத்ரீ (ரலி) - நூல்: திர்மிதி)

இத்தகைய உயர்ந்த அந்தஸ்து கொடுக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது, இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் வணிகம் என்பது வெறுமனே பொருளீட்டும் வழி மட்டுமல்லாது, அதற்கும் மேலாக சமுதாயத்திற்கு மிக பயனளிக்கும் ஒரு சேவையும் கூட என்பது தெரிகிறது. இத்தகைய உயரிய அந்தஸ்திற்கு தகுதியுடையதாக ஆக வேண்டுமென்றால் அந்த வணிகம் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்ற வழிமுறைகளையும் இஸ்லாம் சொல்லித்தருகிறது.

இன்றைய சூழ்நிலையில் வணிகம் என்பது பண நிர்வாகம், பொருளாதாரம், தயாரிப்பு, சந்தைப்படுத்தல், மனிதவள மேலாண்மை, போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாக, மிக சிக்கலானதாக இருக்கிறது. தொலைத்தொடர்பு வசதிகள், கணினி போன்ற வணிக நிர்வாகத்திற்கு தேவையான துறைகள் வெகுவாக முன்னேற்றம் அடைந்துள்ளன. நிர்வாகிகளாக ஆக விரும்புபவர்கள் பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டியுள்ளது.

இங்கு சில கேள்விகள் எழலாம்.

(1) 14 நூற்றாண்டுகளுக்கு முன் கூறப்பட்ட, அதற்குப்பின் மாற்றப்படாத இஸ்லாமிய நெறிமுறைகளும் போதனைகளும் இன்றைய காலக்கட்டதிற்கும் பொருந்துமா?

(2) வணிகம் நடத்துவதற்கு தேவையான மேற்கண்ட எல்லா துறைகளிலும் இஸ்லாம் வழிகாட்டுதல்களை தந்துள்ளதா?

(3) தொழிற்துறை நிர்வாகம் குறித்து பல்கலைக்கழகங்கள் போதிக்கும் பாடங்கள் இஸ்லாத்திற்கு ஏற்புடையானவை அல்லவா?

இந்த கேள்விகளுக்கு விடை அறிவதற்கு இஸ்லாமிய கொள்கைகள் குறித்த சில அடிப்படையான கருத்துக்களை புரிந்து கொள்வது நல்லது.

முதலாவதாக, இஸ்லாமின் கொள்கைகள் அனைத்துமே ஒரு மனிதனை நல்லொழுக்கங்களைக் கொண்ட ஒரு சிறந்த மனிதனாக ஆக்கும் நோக்கம் கொண்டவை. இறுதித்தூதர் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் "நல்ல ஒழுக்கங்களை பரிபூரணமாக்குவதற்காகவே நான் அனுப்பப்பட்டேன்." தொழுகை முதற்கொண்ட எல்லா இஸ்லாமிய கடமைகளும்கூட மனிதர்களை நல்ல ஒழுக்கத்தின்பால் இட்டுச் செல்லும் பயிற்சிகளே.

இஸ்லாம் கற்றுத்தரும் இத்தகைய நற்பண்புகளைப் பெற்ற ஒரு சிறந்த மனிதர், ஒரு சிறந்த வணிகராகவும் திகழ்வதில் வியப்பேதும் இல்லை. இந்த வணிகர்,
- நாணயமிக்கவராக இருப்பார்.
- பொய் சொல்ல மாட்டார். மோசடி செய்ய மாட்டார்.
- தான் தொடர்பு கொள்பவர்களுடன் மென்மையுடனும் நற்பண்புகளுடனும் நடந்து கொள்வார்.
- அளவையிலும் நிறுத்தலிலும் நேர்மையுடன் நடந்து கொள்வார்.
- தான் விற்கும் பொருளில் குறைகள் ஏதேனும் இருந்தால் அதை மறைக்காமல் தெளிவாக எடுத்துரைத்து விற்பார்.
- மக்களுக்கு தேவைப்படும் பொருட்களை பதுக்கி வைக்க மாட்டார்.

இத்தகைய வணிகருடன் வியாபாரம் செய்ய யார்தான் விரும்ப மாட்டார்கள்? வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் ஒரு வணிகர் தனது தொழிலில் வெற்றியடைய தடையென்ன இருக்கப் போகிறது? இஸ்லாம் சொல்லித்தரும் இந்த நெறிமுறைகள் 14 நூற்றாண்டுகளுக்கு முன் சொல்லப்பட்டதாக இருந்தாலும் எல்லா காலக்கட்டத்திற்கும் பொருந்துபவையே!

இரண்டாவதாக, மார்க்க அறிஞர்கள் இஸ்லாமின் கொள்கைகளை ஒரு கட்டிட வரைபடத்திற்கு ஒப்பிடுகிறார்கள். வரைபடத்தை அடிப்படையாக கொண்டு கட்டிடம் எழுப்பப்படுகிறது. ஆனால் வரைபடமே கட்டிடமல்ல. அதுபோல, இஸ்லாமின் கொள்கைகள் முஸ்லிம்கள் தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் தேவையான ஒரு அடிப்படைத்திட்டம்.

வணிகம் நடத்துவதற்கு தேவையான எல்லா துறைகளிலும் இஸ்லாம் வழிகாட்டுதல்களை தந்துள்ளதா? என்ற கேள்விக்கு மௌலானா சையித் அபுல் அ'லா மௌதூதி (ரஹ்) அவர்கள் திருமறையைப்பற்றி கூறிய ஒரு கருத்து, பொருத்தமான பதிலாக இருக்கிறது. "குர்ஆன் மனிதனுக்கு வழிகாட்டுகிறது என்பதன் பொருள், இஸ்லாமிய வாழ்க்கை முறையைச் செயல்படுத்துவதற்காக வாழ்வின் ஒவ்வொரு சின்னஞ்சிறு அம்சம் குறித்தும் விரிவான சட்ட திட்டங்களையும் விதிமுறைகளையும் வகுத்துத் தருகிறது என்பதல்ல. மாறாக வாழ்க்கையின் ஒவ்வொரு துறை குறித்தும் அதற்குள்ள எல்லைகளையும் வரம்புகளையும் நிர்ணயித்து, இறைவனின் விருப்பத்துக்கு இசைவாக அத்துறைகளை எவ்வாறு அமைக்க வேண்டும், எவ்வாறு நிர்மாணிக்க வேண்டும் என்று அறிவிக்கக் கூடிய கைகாட்டிகளை ஆங்காங்கே அது ஊன்றி வைக்கிறது"

மூன்றாவதாக, நல்லொழுக்க போதனைகள் இரண்டு வகைப்படும். செய்யவேண்டியவற்றை பட்டியலிட்டு அவற்றை மட்டுமே செய்யும்படி போதிப்பது, அல்லது செய்யக்கூடாதவற்றை பட்டியலிட்டு அவற்றிலிருந்து விலகி இருக்கும்படி அறிவுறுத்துவது ஆகியவையே அவை. இஸ்லாம் இந்த இரண்டு வகை போதனைகளை செய்திருந்தாலும், செய்யக்கூடாதவற்றை அது தெளிவாக வரையறுத்துள்ளதுபோல் செய்யவேண்டிய அனைத்து விஷயங்களையும் அது பட்டியலிடவில்லை என்றே மார்க்க அறிஞர்கள் கருதுகின்றனர். இதன் பொருள் என்னவெனில், எவையெல்லாம் இஸ்லாமில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ தடுக்கப்படவில்லையோ அத்தகைய செயல்களில் ஈடுபடுவது குற்றமல்ல என்பதே.

இதை ஒரு சிறிய உதாரணம் மூலமாக விளக்கலாம். சில நாடுகளில் வாகனமோட்டிகள் சாலைகளில் "U" போல திரும்புவதற்கு உரிய இடங்களில் அதற்கான சாலைக்குறியீட்டு பலகைகள் வைத்திருப்பார்கள். அந்த இடங்களில் மட்டுமே "U" போல திரும்ப முடியும். வேறு சில நாடுகளில் சாலைகளில் எங்கெல்லாம் "U" போல திரும்ப அனுமதி இல்லையோ அந்த இடங்களில் அதற்கான குறியீட்டு பலகைகள் வைத்திருப்பார்கள். அந்த குறிப்பிட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் "U" போல திரும்பலாம் என்பதுதான் இதன் பொருள். இஸ்லாமிய கொள்கைகள் இந்த இரண்டாம் வகையைப் போன்றவை.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்த்தால், இஸ்லாம் மனித வாழ்வுக்கு தேவையான அடிப்படையான நெறிமுறைகளை சொல்லித்தருவதோடு நின்று விடாமல், தனி மனிதருக்கும் சமுதாயத்திற்கும் தீமை தருபவை என விலக்கி வைக்கப்பட்டவைகளை தவிர மற்ற காரியங்களெல்லாம் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையே என்ற பரந்த கண்ணோட்டத்தையும் வழங்குகிறது. எனவே, இஸ்லாமிய கொள்கைகளுக்கு முரண்படாத தொழில் நிர்வாக நுணுக்கங்களை பல்கலைக்கழகங்களில் பயிலுவதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதும் இஸ்லாத்திற்கு ஏற்புடையதே!

மேலும், திருமறையும், இறைத்தூதரும் காட்டித்தந்த வழியில் தமது வணிகத்தை நடத்திவரும் ஒரு வணிகர் மனதில் இறையச்சம் எப்போதும் நிரம்பி இருக்கும். எந்த ஒரு செயலையும் துவங்குமுன் "இது இறைக்கட்டளைக்கு ஏற்புடையதா, மாற்றமானதா" என கண்டறிய அவரது மனம் விழையும். "வியாபாரமோ, கொடுக்கல் வாங்கலோ அல்லாஹ்வை திக்ரு செய்வதைவிட்டும் (ஈமான் உள்ள) அம்மனிதர்களை திருப்பி விடா" (24:37) என்ற திருமறை வசனத்திற்கு இலக்கணமாக அவர் திகழ்வார். இந்த சூழ்நிலையில் வணிகமும் ஒரு வணக்கமாகவே ஆகிவிடுகிறது.

-----
"நம்பிக்கை" மே 2005 இதழில் வெளியான கட்டுரை..

இஸ்லாம் குறித்த விவாதங்கள்!

இஸ்லாம் குறித்த காரசாரமான விமரிசனங்கள் பல வலைப்பதிவுகளில் நடைபெற்று வருகிறது. 'இஸ்லாத்தைப்பற்றி மற்றவர்கள் விமரிசனம் செய்யக்கூடாதா?' என்ற கேள்வியும் அவ்வப்போது எழுகிறது. நான் மார்க்க அறிஞனல்ல என்றாலும், நானறிந்த வரையில் ஒரு சிறு விளக்கத்தை தரலாம் என்று நினைக்கிறேன். யாரையும் பழிப்பதோ, குத்திக்காட்டுவதோ என் நோக்கமல்ல என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

விமரிசனம் என்பது இஸ்லாத்திற்கு புதியது அல்ல. நபிகளாரின் காலத்திலிருந்தே அது கடுமையான கண்டனங்களையும் விமரிசனங்களையும் சந்தித்தே வந்திருகிறது. அவற்றிற்கான தக்க பதில்களும் விளக்கங்களும் அவ்வப்போது அளிக்கப்பட்டும் வந்துள்ளன. ஒருவகையில் இஸ்லாம் இத்தகைய விமரிசனங்களை வரவேற்கிறது என்று கூட சொல்லலாம். எனவே, இஸ்லாத்தை குறித்து யார் வேண்டுமானாலும் விமரிசனம் செய்யலாம். விவாதம் ஆரோக்கியமானதாக நடைபெற கீழ்க்கண்ட சில அடிப்படைகளை புரிந்து மனதில் இறுத்திக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

1. முதலில் ஒரு ஸென் கதையைப்பார்ப்போம்: ( நன்றி: கங்காவின் 'தினம் ஒரு ஸென் கதை)

"கோப்பையை காலி செய்"
ஒரு பல்கலைக் கழக பேராசிரியர் சிறந்த ஸென் துறவியை சந்திந்து அவரிடம் ஞானம் பற்றி தெளிவு பெறுவதற்காக சென்றார். துறவி அமைதியாக தேனீரினை கோப்பையில் ஊற்றிக் கொண்டு இருந்த போது, பேராசிரியர் ஸென் புத்த மதத்தை பற்றியும் தியானம் பற்றியும் தனக்கு தெரிந்ததை பற்றி வலவல வென்று பேசிக் கொண்டிருந்தார். பேராசிரியரின் கோப்பையின் விளிம்பு வரை தேனீர் ஊற்றிக் கொண்டு இருந்த துறவி, நிறுத்தாமல் தொடர்ந்து ஊற்றிக் கொண்டே இருந்தார். கோப்பையில் இருந்து வழியும் தேனீரை கவனித்துக் கொண்டிருந்த பேராசிரியர், ஒரு நிலைக்கு மேல் பொறுக்காமல் "கோப்பை நிறம்பி விட்டது. இதற்கு மேல் அதில் இடம் இல்லை" என்றார். அதற்கு துறவி "நீயும் இந்த கோப்பை போல் தான்", "நீ எப்போழுது உனது கோப்பையை காலி செய்து இடம் வைக்கிறாயோ, அப்போது தான் உனக்கு ஞானம் பற்றி என்னால் கூற முடியும்" என்றார்.

ஆக, இஸ்லாம் பற்றி நன்கு விளங்கிக்கொள்ள விரும்பும் நண்பர்கள் முதலில் தங்கள் கோப்பைகளை காலி செய்து கொள்வது நல்லது. விவாதத்தின்போது வெளிப்படும் புதிய கருத்துக்கள், புதிய கோணங்கள், புதிய விளக்கங்களை ஏற்றுக்கொள்ள மனதில் இடம் வேண்டுமல்லவா?

2. விவாதத்தின் கருப்பொருள்:

இஸ்லாத்தின் கருத்துக்களோடு முஸ்லிம்களின் சொல், செயல் ஆகியவற்றை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். நடைமுறையில் முஸ்லிம்களின் சொல், செயல் அனைத்தும் எல்லா நேரங்களிலும் இஸ்லாத்தின் அடிப்படைகளை சார்ந்து இருப்பதில்லை. இது ஒரு கசப்பான உண்மை. பின்லாடனாக இருந்தாலும், கொமைனியாக இருந்தாலும், நாகூர் ரூமியாக இருந்தாலும், நானாக இருந்தாலும் இந்த நிலைதான். இறைத்தூதர்கள் மட்டுமே இதில் விதிவிலக்கானவர்கள். நபிகளாரின் சொல் செயல் அனைத்துமே இஸ்லாமாக இருந்தது.

ஆக, விவாதிக்கப்படும் பொருள் இஸ்லாத்தின் கருத்தா அல்லது முஸ்லிம்களின் சொல், செயல்பாடுகளா என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.

3. ஆதாரம் ப்ளீஸ்..

இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆனும் ஹதீஸும்தான். எனவே உங்கள் சந்தேகங்களை முடிந்தவரை ஆதாரங்களுடன் எடுத்து வையுங்கள். குர்ஆன் வசனங்களை யாராவது உங்களுக்கு தவறாக விளக்கி இருக்கலாம். ஹதீஸ் என நீங்கள் நம்பி இருந்த ஒரு செய்தி வெறும் கட்டுக்கதையாக இருக்கலாம். அதனால், 'நான் ஆதாரம் காட்டினால் நீங்கள் இஸ்லாத்தை விட்டு விலக தயாரா?' என்பது போன்ற சவால்களை தவிர்க்கவும்.

'முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள்' என்பது போன்ற பொதுப்படையான வாக்கியங்களையும் (generalised statements) தவிர்க்கவும். இத்தகைய விவாதங்களுக்கு முடிவென்பதே கிடையாது.

4. விளக்கம் கிடைக்க தாமதமாகலாம்:

பொதுவாக இஸ்லாத்தை வெளியிருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும் கேள்விகளும் சந்தேகங்களும் முஸ்லிம்களுக்கு தோன்றுவதில்லை. அவற்றிற்கான விளக்கங்களும் அவர்களிடம் பெரும்பாலும் தயாராக இருப்பதில்லை. அத்தகைய கேள்விகளை எதிர் நோக்கும் முஸ்லிம்கள் உணர்ச்சிவசப்படாமல் மார்க்க நூற்களையும் மார்க்க அறிஞர்களையும் அணுகி தக்க விளக்கம் பெற்று பதிலளிப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும். அதனால், நீங்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு தக்க விளக்கம் கிடைக்க தாமதமாகலாம். ஆனால் இஸ்லாத்தில் அத்தகைய கேள்விகளுக்கு பதிலில்லை என்ற முடிவுக்கு வந்து விட வேண்டாம்.

5. முகமூடிகள் ஜாக்கிரதை:

இணையத்தில் நிறைய முகமூடிகள் உலவுகின்றனர். இஸ்லாமிய பெயர்களை வைத்துக்கொண்டு இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்புபவர்களும் அவர்களுள் இருக்கலாம். அதனால் பெயரை மட்டும் வைத்து எந்த முடிவுக்கும் வந்து விட வேண்டாம். அத்தகையோர் வெளிப்படுத்தும் கருத்துக்களை சற்று உன்னிப்பாக கவனித்தால் அவர்களின் உண்மை முகம் வெளிப்படும்.

ஆகவே, வாருங்கள் நண்பர்களே! ஒன்று சேர்ந்து இஸ்லாத்தைப்பற்றி தெரிந்து கொள்வோம்!

Thursday, March 10, 2005

யூசுஃப் இஸ்லாமுக்கு நஷ்டஈடு!

யூசுஃப் இஸ்லாமுக்கு நஷ்ட ஈடு வழங்கும் பிரிட்டிஷ் பத்திரிக்கைகள்!

(08-03-05 அன்று பதிந்த இக்கட்டுரை அன்றே காணாமல் போய்விட்டது. அதனால் மீண்டும் பதிகிறேன்.)

இரண்டு ஆங்கில பத்திரிக்கைகள் இவ்வளவு என்று குறிப்பிடாமல் தாங்கள் யூசுஃப் இஸ்லாம் எனும் பிரபல பாடகருக்கு இழப்பீடு கொடுத்ததாக தெரிவித்தன. முன்பு கேட் ஸ்டீவன்ஸ் என்ற பெயரில் புகழ்பெற்ற பாப் இசைப்பாடகராக இருந்தவர் யூசுஃப் இஸ்லாம். அவர் இஸ்லாத்தை தழுவியபின் இஸ்லாமிய அழைப்புப்பணியில் ஈடுபட்டு உலகெங்கும் சுற்றி வருகிறார். அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் பல இஸ்லாமியக் கல்வி நிலையங்கள் உருவாக்கி அறப்பணிகள் செய்து வருகிறார். இவரது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில் இவரை பயங்கரவாதத்துடன் தொடர்புப் படுத்தி செய்தி வெளியிட்டதற்காக இந்த இழப்பீட்டை அவருக்கு அளிக்க வேண்டிய நிலை அப்பத்திரிக்கைகளுக்கு ஏற்பட்டது.

இது பற்றி யூசுஃப் இஸ்லாம் கூறியதாவது: "தி சண்டே டைம்ஸ் பத்திரிக்கையும், தி ஸன் பத்திரிக்கையும் என்னைப் பற்றி பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி இனி எழுதுவதில்லை என்றும் இதற்கான சட்ட நடவடிக்கைக்குரிய எனது செலவு தொகையோடு எனக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நஷ்ட ஈடாக தருவதாகவும் ஒப்புக் கொண்டுவிட்டன. இப்பொதெல்லாம் முஸ்லிம்களைப் பற்றி பொய்யாகவும் அவதூறாகவும் செய்திகளை வெளியிடுவது மீடியாவுக்கு மிகவும் எளிதான செயலாகிவிட்டது. இவ்விஷயம் எனக்கு பெரும் பாதிப்பை உண்டுபண்ணிவிட்டதோடு, நான் செய்து வரும் அழைப்புப்பணி, கல்விப்பணிகளுக்கு இடையூறு உண்டாக்கிவிட்டது. இவ்விதம் இழைக்கப்பட்ட தீய விளைவை நேர் செய்வது பெரும்பாலும் சிரமமானதொன்றாகும்" என்று கூறினார் யூசுஃப் இஸ்லாம்.

நன்றி: நம்பிக்கை மாத இதழ் மார்ச் 05

Saturday, March 05, 2005

நூல் அறிமுகம்: இயற்கை மதம்

நூல் அறிமுகம்: இயற்கை மதம்

ஆசிரியர்: அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி (ரஹ்)

முதன் முதலாக திருமறையை எளிய தமிழில் மொழிபெயர்த்து அதன் போதனைகள் முறையான மார்க்கக் கல்வி பெறாத சாதாரண தமிழ் முஸ்லிம்களையும் சென்றடையச் செய்த இந்த மார்க்க அறிஞருக்கு தமிழ் முஸ்லிம் சமுதாயம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

இந்தப் பெரியார் எழுதிய பிற நூற்களுள் ஒன்றே இந்த 'இயற்கை மதம்'. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்நூல் இஸ்லாமின் ஆன்மிக நம்பிக்கைகளை விளக்குவதுடன், இஸ்லாம் போதிக்கும் அரசியல், பொருளாதாரம், வாழ்வியல் போன்றவற்றை விமரிசிப்பவர்களுக்கும் தக்க பதிலளிக்கிறது. பிற சமூகங்களில் வழக்கத்திலுள்ள தீண்டாமை, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஆகியவற்றை கடுமையாக சாடும் இந்நூல், இத்தகைய சமூக கொடுமைகளுக்கு இஸ்லாம் எப்படி தீர்வளிக்கிறது என்பதைப் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை முன் வைக்கிறது. இரட்டைத் தம்ளர் முறை இன்றளவும் பரவலாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், இந்நூலின் கருத்துக்கள் இன்றைய காலக்கட்டத்திற்கும் பொருந்திப்போவது ஆச்சரியமான ஒன்றல்ல.

அக்கால சோவியத் ரஷ்யாவைப் பற்றியும் அவர்களின் பொது உடைமைக் கொள்கையைப் பற்றியும் எழுதும்போது, நூலாசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார், "... அந்த ஸோவியத் அரசாங்கம் பின்பற்றும் பொது உடைமைக் கொள்கையானது அதன் ஆட்சிக்குட்பட்ட மக்களை வெகு சீக்கிரத்தில் மிக்க தாழ்ந்த நிலைமைக்கு கொண்டு வந்து அவர்கள் கேவலம் அடையும்படி செய்யும் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை". இக்கூற்று தற்காலத்தில் எவ்வளவு உண்மையாகி விட்டது என்பதைப் பார்க்கும்போது ஆசிரியரின் தொலைநோக்குப் பார்வை நமக்கு புலப்படுகிறது.

இந்நூல் முன்வைக்கும் செய்தியை சுருக்கமாக அதன் பதிப்புரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். 'இறைவனின் மார்க்கமான இஸ்லாமின் வாழ்க்கை நெறி, பின்பற்றுவதற்கு இலகுவானது; சாத்தியமானது; எவ்வித குறைகளோ குற்றங்களோ இல்லாதது; இயற்கைக்கு உகந்த முறையில், அறிவார்ந்த சீர்திருத்தங்களுக்கு எல்லாம் முன்னோடியாக, எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானது. எனவே, இஸ்லாம் ஓர் இயற்கை மதமே!'

இந்நூலிற்கு ஹிஃபாஜத்துல் இஸ்லாம், ஸைஃபுல் இஸ்லாம், சுதேசமித்திரன் போன்ற பத்திரிக்கைகளிலும் திருவாளர் ஈ.வெ.ரா. பெரியார், ஜூட்டி எம். கிருஷ்ணமாச்சாரி ஆகியோரும் மதிப்புரைகள் எழுதியுள்ளனர்.

ஈ.வெ.ரா. பெரியார் இவ்வாறு குறிப்பிடுகின்றார், 'இயற்கை மதம்' என்னும் அதன் பெயருக்கேற்ப, இஸ்லாமிய மதக்கொள்கைகள் இயற்கைத்தன்மைக்கு முற்றிலும் பொருந்தியவை என்பதை அதன் ஆசிரியர் அதில் தெளிவுபட விளக்கிக் காட்டியிருப்பதுடன், இஸ்லாமிய மதச்சட்டங்கள் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் பொருத்தமானவை, அனுபவ சாத்தியமானவை, எந்நாட்டிலும் உள்ளவர்கள் எளிதில் அனுசரிக்கக் கூடியவை என்பதாகவும் விளக்கிக் காட்டுகின்றார். ... இந்நூல் இந்து மக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என்ற சமய வித்தியாசமின்றி அனைவரும் வாங்கி வாசித்துப் பார்க்க வேண்டியதொரு நூலாகும்'.


வெளியீடு:

தாருல் ஹுதா
211 (102) லிங்கி செட்டி தெரு
மண்ணடி. சென்னை 600 001
தொலைபேசி: 044 25247866, 98401 74121

இணையத்தளம்: www.darulhuda.info
மின்னஞ்சல்: click@darulhuda.info

டபுள் டெம்மி சைஸில் 128 பக்கங்கள்
விலை: ரூ.30

Tuesday, February 15, 2005

ஹதீஸ் ஒரு சிறு விளக்கம் - 2: தபகாத் இப்னு ஸஃது

திண்ணையில் வெளியான எனது முந்திய ஹதீஸ் பற்றிய கடிதத்தை ‘குழப்பவாதம்’ என்றும் ‘திசை திருப்பும் முயற்சி’ என்றும் தனது 27.1.05 பதிவில் குற்றம் சாட்டிய நேசகுமார், அதே பதிவில் ‘ஹதீதுகளைப்பற்றி சொல்லியிருக்கும் சலாஹ¤தீன் தபகாத் பற்றியும் கொஞ்சம் ஆய்ந்து எழுதியிருந்தால் நன்றாகயிருந்திருக்கும்’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து மார்க்க அறிஞர்களை கலந்தாலோசித்து திரட்டிய தகவல்களை இங்கு முன்வைக்கிறேன்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்கு பிறகு சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகே ஹதீஸ்கள் எழுத்துப்பூர்வமாக தொகுக்கும் பணி தொடங்கியது. நபிகளார் அவர்களின் காலத்தில் குர்ஆன் வசனங்கள் வஹீ மூலம் அறிவிக்கப்படும்போது அவ்வசனங்களை எழுத்து வடிவத்தில் அவ்வப்போது குறித்து வைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதே சமயத்தில் ஹதீஸ்களையும் எழுத்து வடிவத்தில் குறித்து வைத்தால் வீணான குழப்பம் ஏற்படும் என்பதால் ஹதீஸ்களை பதிவு செய்வதை நபிகளார் தடை செய்திருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து அபூபக்கர், உமர், ஆகிய கலிபாக்களின் ஆட்சிக்காலத்திற்கும் பிறகு, கலிபா உமறுப்னு அப்தில் அஜீஸ் அவர்களின் ஆட்சிக்காலத்தில் அவரது உத்தரவின்பேரில் அபூபக்கரிப்னு ஹஜ்ம் என்ற அறிஞர் அவர் அறிந்திருந்த ஹதீஸ்களை தொகுத்து ஒரு கிரந்தம் எழுதினார். இக்கிரந்தத்தை தொடர்ந்தே வேறு சில மார்க்க அறிஞர்களும் தங்களுக்கு தெரிந்த இதர ஹதீஸ்களையும் எழுத ஆரம்பித்தனர். இவ்வாறுதான் ஹதீஸ்களை தொகுக்கும் பணி தொடங்கியது.


இவ்வாறு தொகுக்கப்பட்ட கிரந்தங்களில், நபி (ஸல்) அவர்களின் சொல், செயல் ஆகியவைகள் மட்டுமில்லாமல், ஸஹாபிகள் எனப்படும் நபித்தோழர்களின் சொல் செயல் ஆகியவைகளும், அவர்களுக்கும் அடுத்த தலைமுறையினரான தாபியீன்களின் மார்க்கத் தீர்ப்புகளும் கலந்திருந்தன. தாபியீன்கள் நபிகளாரின் காலத்தில் பிறந்தே இருக்காத தலைமுறையினர். இவர்கள் ஸஹாபிகளிடமிருந்து மார்க்கத்தை கற்றவர்கள்.

இந்த காலக்கட்டத்திலிருந்தே பொய்யான ஹதீஸ்களை கூறுபவர்களும் தோன்றிவிட்டார்கள். அதிகமான ஹதீஸ்களை அறிந்து அறிவிக்கும் மார்க்க அறிஞர்களை மக்கள் பெரிதும் மதித்தனர். அத்தகைய மதிப்பு தனக்கும் கிடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும், இஸ்லாத்தின் வளர்ச்சியை காணப்பிடிக்காமல் அது வளரும் வேகத்தை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் போன்ற காரணங்களினாலும், பொய்யான ஹதீஸ்களை புனைந்து மக்களிடையே இவர்கள் பரப்பத்தொடங்கினர்.

தபகாத் இப்னு ஸஃது தொகுக்கப்பட்ட காலத்தில் இவ்வகை கற்பனை ஹதீஸ்கள் நிறைய பரப்பப்பட்டிருந்ததாக தெரியவருகிறது. இதற்கு பல ஆண்டுகளுக்கு பிறகு (ஹிஜ்ரி 194-ல்) தோன்றிய இமாம் புகாரி அவர்களின் காலத்திலும் இவர்களுக்கு பின் தோன்றிய மற்ற ஹதீஸ் தொகுப்பாளர்களின் காலத்திலும்தான் ஹதீஸ்களை ஆய்ந்து, தரம் பிரித்து, ஆதாரமானவைகளை இனங்கண்டு தொகுக்கும் பணி நடந்து வந்தது.

தபகாத் இப்னு ஸஃது பற்றியும், இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள, நேசகுமார் ஆதாரமாக காட்டும் நிகழ்வு பற்றியும் இனி சில ஆதாரங்களை காண்போம்.

ஹதீஸ்கலையின் பெரிய இமாம்களில் ஒருவரான இப்னுஸ்ஸலாஹ், இப்னு ஸஃது பற்றியும் அவரது தபகாத் பற்றியும் பின்வருமாறு கூறுகிறார்கள்.

"இப்னு ஸஃது நம்பகமானவராக இருந்தாலும் அவர் தனது "தபகாத்"தில் பலவீனமான அறிவிப்பாளர்கள் வாயிலாக அதிகமான செய்திகளை அறிவித்துள்ளார். அத்தகைய பலவீனமான அறிவிப்பாளர்களில் முஹம்மத் பின் உமரும் ஒருவர்" (1)

இந்தக் கதை இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கு யாரும் ஆதாரம் தரவில்லை என்கிறார் நேசகுமார். அப்படி கூறுவது தவறான வாதமாகும். நிறைய ஆதாரங்கள் உண்டு.

முதலில், இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசை:

1) முஹம்மத் பின் யஹ்யா பின் ஹப்பான்
அவரிடமிருந்து
2) அப்துல்லாஹ் பின் ஆமிர்
அவரிடமிருந்து
3) முஹம்மது பின் உமர்
அவரிடமிருந்து
4) இப்னு ஸஃது

இந்த அறிவிப்பாளர் வரிசைப்படி நபி(ஸல்) அவர்கள் இப்படி நடந்துகொண்டதாக சொல்பவர், முஹம்மத் பின் யஹ்யா பின் ஹப்பான். இவர் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பிறக்கவே இல்லை. இவர் நபியின் மரணத்திற்கு பல்லாண்டுகளுக்குப் பின் பிறந்த ஒரு தாபிஈ ஆவார். ஒரு தாபிஈ, நபி(ஸல்) அவர்கள் இப்படிச் செய்தார்கள், இப்படிச் சொன்னார்கள் என்று அறிவிக்கும் எந்தச் செய்தியும் ஹதீஸ் கலை அறிஞர்களிடத்தில் ஒப்புக்கொள்ளப்படாத செய்தியாகும்.

இந்தக் குறை மட்டுமல்ல, இதைவிட பெரிய குறை, இரண்டாவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் ஆமிர், ஹதீஸ்கலை அறிஞர்களால் பலவீனமானவர், மத்ரூத் (ஏற்றுக்கொள்ளமல் விடப்பட்டவர்) என்று வர்ணிக்கப்பட்டவர். (2)

அடுத்து, மூன்றாவது அறிவிப்பாளர், முஹம்மத் பின் உமர்; இவரும் ஹதீஸ் கலை அறிஞர்களால், மத்ரூத் (ஏற்றுக்கொள்ளாமல் விடப்பட்டவர்) என்று அறிவிக்கப்பட்டவர் ஆவார். (3)

ஆக இந்தச் செய்தி பலவீனத்துக்கு மேல் பலவீனமானது என்பது தெளிவாகிறது.

இந்தச் செய்தி தஃப்ஸீர் (குர்ஆன் விளக்கவுரை) நூற்களில் வந்துள்ளதே என நேசகுமார் கேள்வி எழுப்புகிறார். அப்படியானால் குர்ஆன் விளக்கவுரையாளர்களின் தலைவர் என அறியப்படும் இமாம் இப்னு கஸீர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

திருக்குர்ஆனின் 32:37-வது வசனத்திற்கு கீழ் இமாம் இப்னு கஸீர் கூறுவது: "இப்னு அபீஹாத்தமும், தபரீயும் இவ்விடத்தில் சில செய்திகளை குறிப்பிடுகிறார்கள். அவை ஆதாரமில்லாதவையாதலால், அச்செய்திகளை நாம் புறக்கணிக்கவே விரும்புகிறோம். ஆதலால் அவற்றை இங்கு நாம் கொண்டுவரவில்லை".

மேலும் இமாம் இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் தனது "ஜாதுல் மஸீர்" என்ற பிரபலமான திருக்குர்ஆன் விளக்கவுரையில், 32:37-வது வசனத்தின் விளக்கப்பகுதியில் மேற்படி கதையை சுட்டிக்காட்டி, இந்தக்கதையை மறுத்து விளக்கமளித்துள்ள அறிஞர்களின் விளக்கத்தை விரிவாக எழுதியுள்ளார். இப்னுல் ஜவ்ஸீ, இப்னு கஸீரைவிட காலத்தால் முந்தியவர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

அடுத்து ஹதீஸ் கலை மேதை இப்னு ஹஜர், ஸஹீஹுல் புகாரியின் விளக்கவுரையில், 32:37-வது வசனத்திற்கு விளக்கமாக இடம்பெறும் ஹதீஸுக்கு விளக்கமளிக்கும் போது, "இப்னு அபிஹாத்தமும், தபரீயும் வேறு செய்திகளை (அதாவது மேற்படி கதைகளை) குறிப்பிட்டிருக்கிறார்கள். அவற்றை பல குர்ஆன் விரிவுரையாளர்கள் நகல் செய்துள்ளார்கள். அந்தச் செய்திகளை பேசுவதில் ஈடுபடுவதே வெறுக்கத்தக்கது” என்று கூறுகிறார்.

இப்படி ஹதீஸ்கலை அறிஞர்களாலும், குர்ஆன் விளக்கவுரையாளர்களாலும், இந்தக் கதை கட்டுக்கதைதான் என்று உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.

அதனால்தான் 'ரஹீக்' நூலின் ஆசிரியர், ஆதாரம் எழுதாமல் ‘கட்டுக்கதை' என்று மாத்திரம் குறிப்பிட்டுள்ளார். தவிர யாருக்கும் பயந்துக்கொண்டு எதையும் அவர் மறைக்கவில்லை.

எனவே, நேசகுமார் இனி ஆதாரமற்ற கட்டுக்கதைகளையும், அவற்றையே ஆதாரமாகக்கொண்டு எழுதப்பட்ட ஆங்கில புத்தகங்களையும், இவற்றை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்ட இணையத்தளங்களையும் படித்து தனது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மற்றபடி, நான் முன்பே சொல்லியதுபோல, நேசகுமாரின் கேள்விகள் என்னைப்போன்ற முஸ்லிம்களை ப்ல மார்க்க நூற்களை ஆழ்ந்து படிக்கவும், மார்க்க அறிஞர்களுடன் கலந்தாலோசிக்கவும், அறியாத பல விஷயங்களை அறிந்து கொள்ளவும் தூண்டுகிறது. எனவே, ஆதாரங்களின் அடிப்படையிலான பல கேள்விகளை நேசகுமார் தொடர்ந்து எழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இக்கட்டுரைக்கான ஆதாரங்களை திரட்டி உதவிய சகோதரர்களுக்கு எனது நன்றிகள்!

- சலாஹ¤த்தீன் - 15 பிப்ரவரி 05

Reference books:

(1) இப்னுஸ்ஸலாஹ், நூல்: அல் முகத்திமா ஃபீ உலூமில் ஹதீஸ், பக்கம் 369, பதிப்பு தாருல் குத்துப் அல் இல்மிய்யா

(2) தஹ்தீபுத் தஹ்தீப், பக்கம் 245, பதிப்பு- தாருல் குத்துப் அல் இல்மிய்யா

(3) தக்ரீபுத் தஹ்தீப், பக்கம் 555, பதிப்பு- பைத்துல் அஃப்கார்.

(4) முஹம்மது அப்துல் காதர் ஸாஹிபு பாக்கவி (ரஹ்), நூல்: தஜ்ரீதுல் ஜாமிஇஸ் ஸஹீஹில் புகாரி தமிழ் மொழிபெயர்ப்பு பாகம்-1, பதிப்பு - இஸ்லாமிய நூல்கள் மலிவுப்பதிப்பு பப்ளிஷர்ஸ் & புக் செல்லர்ஸ்

Friday, February 11, 2005

இயற்கையின் சீற்றம்! இறை சித்தமா?

கோலாலம்பூரிலிருந்து வெளிவரும் இஸ்லாமிய தமிழ் மாத இதழான ‘நம்பிக்கை’ பிப்ரவரி 05 இதழில் வெளியான தலையங்கம்.

சுனாமி.

நமது அகராதியில் புதிதாக புகுந்துவிட்ட ஒரு சொல்.நில நடுக்கத்தால் உருவாகும் கடல் பிரளயத்தை உணர்த்தும் ஜப்பானிய வார்த்தை. உச்சரிப்பில் ஆபத்தை நுகர முடியவில்லை. அனுபவம் அவ்வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் கதிகலங்க வைக்கிறது.

இந்தியப் பெருங்கடல் வட்டத்திற்குட்பட்ட நாடுகளின் கடலோரப் பகுதிகளில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்புப் பேரிடர் செய்திகள் வந்த வண்ணமுள்ளன. ஆங்காங்கே மக்கள் தொடர்ந்து பட்டு வரும் அவதிகளுக்கு வரலாற்றில் முன்னுதாரணம் ஏதுமில்லை.

இரண்டாம் உலக யுத்தத்தில் வீசப்பட்ட அணுகுண்டுகளில் பலியான மக்கள் ஹிரோஷிமா - நாகசாகி என்ற இரு நகரங்களில் வசித்தவர்களே. அதிலும் பாதிப்பு ஒரு நாட்டின் ஒரு பகுதியைத்தான் உள்ளடக்கியது. பல நூறு அணுகுண்டுகளின் தாக்கத்தை இரு கண்டங்களின் பல நாடுகளை பேதமின்றி இந்த சுனாமி ஏற்படுத்தியுள்ளது. இப்பேரிடருக்கு விஞ்ஞான அடிப்படையில் காரணம் கூறியுள்ளனர்.

பூமி ஒரு கோள். அதன் மேல்பரப்பு குளிர்ந்துவிட்ட தட்டுகளால் ஆனது. மையம் ‘லாவா’ எனும் வெப்பக் குழம்பினாலானது. மையப்பகுதியில் வெப்பத்தினால் அழுத்தம் கூடும்போது ஏற்படும் வெடிப்பு, பூகம்பமாக - எரிமலை குமுறலாக மேல்மட்டத்திற்கு வருகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூமியின் மேல் தகடுகள் உராய்கின்றன. அதனால், ஆழ்கடல் அலைகள் உருவெடுக்கின்றன; வெகுண்டெழுந்து ‘சுனாமி’யாக பேரழிவை ஏற்படுத்துகிறது.

இன்னொரு பார்வையில், நிகழ்ந்துள்ள பேரிடர் ஒரு சாபக்கேடு என்றும், இறைவனின் கோபப்பார்வை என்றும் சித்தரித்துள்ளனர். ‘பலா’ - தண்டனை இறக்கப்பட்டுவிட்டது என்ற விளக்கத்தையும் தந்துள்ளனர்.

‘காக்கும் கடவுளே அழிவைத்தந்துவிட்டான்’ எனும் அங்கலாய்ப்பும் சேர்ந்துள்ளது. அவநம்பிக்கையில் இறைமறுப்பும் ஒரு சாராரிடம் உருவெடுத்துள்ளது.

‘அவனின்றி ஓர் அணுவும் அசையா’ என்ற கோட்பாட்டில் இயற்கை தரும் வளங்களும் நலன்களும் அதன் சீற்றமும் துன்புறுத்தலும் இறை கட்டளைகளுக்கு உட்பட்டதே.

ஆனால் ‘இறைவன் பழிவாங்கிவிட்டான்!’ என்ற கூற்று இஸ்லாத்திற்கு உடன்பாடற்ற கொள்கை. படைக்கப்பட்ட அனைத்தும் அவற்றிற்கு விதிக்கப்பட்ட நியதிகளுக்கு உட்பட்டே இயங்குகின்றன. பேரிடர், பெருநஷ்டம், இழப்பு ஏற்பட்டால் அவை இறையச்சத்தின் அடையாளங்களாக முஸ்லிம்கள் கருத வேண்டும். நம்பிக்கை வலுப்பெற்று, வாழ்க்கையை திருத்தி அமைக்க வகை செய்ய வேண்டும்.

அவதியுறும் மக்களின் துயர்துடைப்பிற்கு உதவுவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. இவ்விஷயத்தில் சமுதாயப்பற்று முஸ்லிம் சமூகத்துடன் நின்று விடக்கூடாது. மனித நேயத்தின் முழு வீச்சும் முஸ்லிம்களிடம் பிரதிபலிக்க வேண்டும். இன மத பேதமின்றி உதவிகளை வாரி வழங்க வேண்டும்.

‘நம்பிக்கை’ இதழைப்பற்றி..

மலேஷிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வெளிவரும் ‘நம்பிக்கை’, கடந்த 9 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அனேகமாக, கிழக்காசிய வட்டாரத்திலிருந்து தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஒரே இஸ்லாமிய தமிழ் இதழ் இதுவாகத்தான் இருக்கும். தலையங்கம், நேர்காணல், ஆளுமை, சிந்தனைத்துளி போன்ற தலைப்புகளில் பயனுள்ள கட்டுரைகளும், சிறுகதைகள், கவிதைகளும் தாங்கி இந்த இதழ் வந்து கொண்டிருக்கிறது.

முகவரி:

Nambikkai
YPI Publication
Lot 44025, Jalan PJS 10/11
Bandar Sri Subang
46000 Petaling Jaya
Selangor Darul Ehsan
Malaysia

Tel: 6 03 5631 4802
Fax: 6 03 5632 8025


- சலாஹ¤த்தீன் - 11 பிப்ரவரி 05

Tuesday, February 08, 2005

நேசகுமாரின் விளக்கங்களுக்கு பதில்!

நபிகள் நாயகம் - அன்னை ஜைனப் திருமணம் குறித்து நேசகுமார் தனது வலைப்பதிவில் நீண்ட விளக்கம் ஒன்று அளித்திருக்கிறார். இந்த நீண்ட கடிதம் எழுதும்முன் எனது முந்திய திண்ணை கடிதத்தை அவர் சற்று கவனமாக படித்திருக்கலாம். இந்த விவாதத்தில் அவர் தரப்பு வாதங்கள் அனைத்தும் ஆதாரமற்ற ஒரு கட்டுக்கதையை அடிப்படையாக கொண்டே அமைந்திருக்கின்றன. பொய்யை உண்மை என்று வாதிடுபவர்களுக்குத்தான் அதற்கான ஆதாரங்களை தெள்ளத்தெளிவாக எடுத்து வைக்க வேண்டிய கடமை இருக்கிறது. மாறாக, பொய்யை 'பொய்தான்' என்று சொல்வதற்கும் ஆதாரம் கேட்கிறார் நேசகுமார். நாம் அதற்கும் தயார்!

1. //ஹதீஸ்களிலும் தப்ஸீர் புத்தகங்களிலுமே இந்த 'கட்டுக்கதை' காணக்கிடைக்கிறது எனும்போது, எது ஹதீஸ், எது ஹதீஸ் இல்லை என்ற வாதத்தின் அடிப்படையே தகர்ந்து போகிறது.// என்கிறார் நேசகுமார். எனது முந்திய கடிதத்தை அவர் சற்று கவனமாக படித்திருந்தால் இந்த கேள்வியே எழுந்திருக்காது. இங்கு விவாதம் எது ஹதீஸ், எது ஹதீஸ் இல்லை என்பதல்ல. எது ஸஹீஹ் (ஆதாரபூர்வமான) ஹதீஸ், எது ஸஹீஹ் அல்ல என்பதுதான். இதை தெளிவுபடுத்துவதற்காகவே ஹதீஸ் பற்றிய சிறு விளக்கத்தை அளித்திருந்தேன். அது குழப்பவாதமோ, திசைதிருப்பும் முயற்சியோ அல்ல. (இந்த விவாதத்தில் ஷியாக்களைப் பற்றி நேசகுமார் பேச ஆரம்பிப்பதுதான் தெளிவான திசை திருப்பும் முயற்சி!)

2. ஒரு ஹதீஸ் ஸஹீஹ் என்று ஒப்புக்கொள்ளப்படுவதற்கு அதன் அறிவிப்பளர் வரிசை மிக முக்கியமானது. நேசகுமார் குறிப்பிடும் ஹதீஸ், ஸஹீஹ் என்று ஒப்புக்கொள்ளப்படுவதற்கு எந்த தகுதியும் அற்றது என்பதை எனது முந்திய கடிதத்தில் தெளிவு படுத்தியிருந்தேன். இது குறித்து, சகோதரர் அபூமுஹை தனது வலைப்பதிவில் நீண்ட விளக்கம் அளித்திருக்கிறார்.

http://abumuhai.blogspot.com/2004_12_01_abumuhai_archive.html

//முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தம் மனதில் எண்ணியது இது தான் என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. நபி(ஸல்) அவர்களும் சொல்லவில்லை. ஸைனபைப் பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்ததாக நபி(ஸல்) அவர்களும் சொல்லவில்லை. ஸைனபும் சொல்லவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த அறிவிப்பாளர் வரிசையும் கிடையாது. ஒரு ஆதாரமுமின்றி இவ்வாறு எழுத எப்படித் துணிந்தார்கள்? நபி(ஸல்) அவர்களின் உள்ளத்தில் மறைத்திருந்த எண்ணத்தை நபி(ஸல்) அவர்களின் உள்ளத்தில் ஊடுறுவி அறிந்தார்களா? அல்லது நபி(ஸல்) அவர்களின் கடந்தகால வாழ்வில் ஏதேனும் களங்கத்தைக் கண்டு அதனடிப்படையில் இவ்வாறு அனுமானம் செய்தார்களா? நபி(ஸல்) அவர்களைக் களங்கப்படுத்த வேண்டுமென்பதற்காகவே இஸ்லாத்தின் எதிரிகள் இந்தக் கதையை புனைந்துள்ளனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.//

இதற்கு நேசகுமாரின் பதில் என்ன?

3. நேசகுமார் கூறுகிறார், “இவ்விஷயத்தை பதிவு செய்த ஆரம்பக்கால இஸ்லாமிய அறிஞர்கள் கடுமையாக சோதித்து உண்மையென்று தம்மில் தெளிந்த பின்னரே பதிவு செய்து வைத்துவிட்டு சென்றிருக்கும் நிலையில்..”. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதற்கான ஆதாரங்கள் நேசகுமாரின் கைவசம் இருக்கும் பட்சத்தில், இந்த நிகழ்வு ஒரு ஸஹீஹான ஹதீஸ்தான் என்று நிரூபிக்க நேசகுமாருக்கு எந்த பிரச்னையும் இருக்கப் போவதில்லை. (ஸஹீஹ் என்றால் என்ன என்பதற்க்கு எனது முந்திய பதிவைப் பார்க்கவும்) இதை அவர் ஆதாரங்களுடன் நிரூபித்தால் அதை ஒப்புக்கொள்வதில் யாருக்கும் எந்த தயக்கமும் இருக்கப் போவதில்லை. நேசகுமார் செய்வாரா?

4. நேசகுமார் மேலும் கூறுகிறார், “...இதை கட்டுக்கதை என்று கூறும் மெளதூதியோ மற்றவர்களோ அம்முடிவை, தம்முடைய மதநம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே முன்மொழியும்போது, அதற்கு வேறு ஏதும் சான்று பகராதபோது, இதை எம்போன்றவர்களால் ஒப்புக் கொள்ள முடிவதில்லை.” நேசகுமாரின் இந்த கூற்றும் அடிப்படையற்றதே. இதில், மதப்பிடிப்புள்ள அறிஞர்கள் இந்த நிகழ்வு நபிகளாரை அவதூறு செய்வதாலேயே இதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் என்ற கருத்து தொனிக்கிறது. ஒரு ஹதீஸ் ஒப்புக்கொள்ளப்படுவதற்கும், ஒப்புக்கொள்ளப்படாததற்குமான அளவுகோல், முன்பே விளக்கியதுபோல், அது ஸஹீஹ் ஆனதா, அல்லவா என்பதுதானே ஒழிய அது நபிகளாரை போற்றுகிறதா, தூற்றுகிறதா என்பதல்ல. நபிகளாரை அளவுக்கு அதிகமாக போற்றும் ஒரு ஹதீஸ் (“நபியே! உம்மை படைத்திருக்காவிட்டால் இந்த உலகையே படைத்திருக்க மாட்டேன்” என்று இறைவன் அறிவித்தான் என்பது) ஆதாரமற்றது என்பதால், மதப்பிடிப்புள்ள மார்க்க அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

5. நேசகுமார் குறிப்பிடும் நிகழ்வு “ஹதீஸ் மற்றும் தஃப்ஸீர் புத்தகங்களிலேயே காணக்கிடைக்கிறது என்று தீவிர மதப்பிடிப்புள்ள முஸ்லிம்களே ஒப்புக்கொள்கிறார்கள்” என்று சொல்லும் அவர், இதற்கென ‘ரஹீக்’ என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டியுள்ளார். ஆனால் அப்புத்தகத்தில் 399-400 பக்கங்களில், மேற்குறிப்பிட்ட அந்த நிகழ்வு அப்பட்டமான கட்டுக்கதை என்றும் அதை இறைவன் எவ்வாறு தெளிவு படுத்தினான் என்றும் விளக்கப் பட்டிருக்கிறது.

அந்நூலிலிருந்து குறிப்பிட்ட அந்த பகுதி:

ஜைனப் (ரழி) நபி (ஸல்) திருமண விஷயத்தில் பெரும் பொய்க் கதைகளையும் கற்பனைகளையும் நயவஞ்கர்கள் புனைந்தனர். அதவது, முஹம்மது ஒருமுறை திடீரென ஜைனபைப் பார்த்து விட்டார். அப்போது ஜைனபின் அழகில் மயங்கி ஜைனபின் மீது காதல் கொண்டார். இதை அறிந்த அவரது வளர்ப்பு மகன் முஹம்மதுக்காக தனது மனைவியை விட்டுக் கொடுத்து விட்டார் என்று கூறினர். இந்தக் கட்டுக் கதையை அவர்கள் எந்தளவு பரப்பினார்கள் என்றால், இன்று வரை அதன் தாக்கம் ஹதீஸ் மற்றும் தஃப்ஸீர் நூற்களில் காணக்கிடைக்கிறது. இந்த பொய்ப் பிரச்சாரம் இறை நம்பிக்கையில் குறையுள்ளவர்களைப் பெரிதும் பாதித்தது. ஆகவே, உள்ளங்களில் ஏற்பட்ட சந்தேக நோய்களைக் குணப்படுத்தும் விதமாக பல தெளிவான வசனங்களை அல்லாஹ் குர்ஆனில் இறக்கி வைத்தான். இது பொய்ப் பிரச்சாரம் என்று அல்லாஹ் அத்தியாயம் அஹ்ஜாபின் தொடக்கத்திலேயே இவ்வாறு கூறுகிறான்.

நபியே! நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிராகரிப்பவர்களுக்கும், நயவஞ்சகர்களுக்கும் (பயந்து அவர்களுக்கு) வழிப்படாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) அறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:1)

6. நேசகுமார் குறிப்பிடும் நிகழ்வு ஆதாரமற்றது என்பதற்கு மேலும் ஆதாரங்கள்:

அல்லாமா ஷபீர் அஹமது உஸ்மானி அவர்களின் ‘த•ப்ஸீரே உஸ்மானி’ எனும் குர்ஆன் விளக்கஉரை நூலில் 33-ம் அத்தியாயத்தின் அடிக்குறிப்பு ஒன்று கீழ்க்கண்டவாறு கூறுகிறது: “..The legends which are described by the unauthentic historians at this place are rejected by Ibne Hajar and Ibne Kathir’

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இப்னு கஸீர் (Ibne Kathir) தனது விரிவுரை நூலில் நபிகளார் - அன்னை ஜைனப் திருமணம் நிகழ்ந்த சூழ்நிலையை விரிவாக விவாதித்திருக்கிறார். நேசகுமார் குறிப்பிடும் சம்பவம் அதில் இடம்பெறாததோடு, ‘இச்சூழலில் அறிவிக்கப்பட்ட சில ஹதீஸ்கள் ஆதாரமற்றவை (ஸஹீஹ் அல்ல) என்பதால் அவற்றை புறக்கணிப்பதே சரி’ என்ற குறிப்பும் இடம் பெற்றுள்ளது.

7. “இச்சம்பவம் இப்னு சாதின் தப்காத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று உணர்ந்தால், அப்போதாவது நபிகள் நாயகமும் நம்மைபோன்று அல்லது நம்மைவிட அதிகமாக ஆசாபாசங்கள் உடையவரே என்பதை சலாஹ¤தீனும் மற்ற இஸ்லாமிய அன்பர்களும் ஒப்புக்கொள்வார்களா?” என்று நேசகுமார் கேள்வி எழுப்புகிறார். நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன், ஒரு பதிவு அரபியில் எழுதப்பட்ட ஒரு நூலில் இடம்பெற்றிருப்பதாலேயே ஆதாரபூர்வமானதாக ஆகிவிடாது. ஒரு ஸஹீஹ் ஆன ஹதீஸ் என்று நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அது ஒப்புக்கொள்ளப்படும். நேசகுமார் தனது வாதத்தை ஸஹீஹ் ஆன ஹதீஸ்களை கொண்டு நிரூபித்தால் அதை எல்லா முஸ்லிம்களும் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இதை நிரூபிக்க நேசகுமார் தயாரா?

8. “இம்மாதிரியான விவாதங்களிலிருந்து முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும் தமது மதத்தின் குறைபாடுகள் புலப்பட்டு, அது மத வெறியை தணித்தால் சமுதாயம் மிகவும் பயன்பெறும்.” என நேசகுமார் கருத்து தெரிவித்திருக்கிறார். விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் அவர் எப்படி இந்த ஒரு முடிவுக்கு வந்தார் என்பது எனக்கு புரியவில்லை. விவாதம் ஒரு முடிவுக்கு வரும் சூழ்நிலையில் ‘குறைபாடுகள் இஸ்லாம் மார்க்கத்தில் இல்லை, அதை தவறாக புரிந்து கொண்டவர்களின் செயல்பாடுகளில்தான் இருக்கிறது’ என்பதை அவர் சரியாக புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்.

9. மற்றபடி, நேசகுமார் இவ்வாறு விவாதம் புரிவதில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியே! அவர் எழுப்பும் கேள்விகளுக்கு விடை அறிவதற்காக வேண்டியாவது பல நூற்களை படிக்கிறேன். மார்க்க அறிஞர்களுடன் பேசி தெளிவு பெறுகிறேன். இஸ்லாம் ஒரு தெளிவான வாழ்க்கை வழிகாட்டி என்ற என் நம்பிக்கை இன்னும் வலுப்பெற்று வருகிறது.

- சலாஹ¤த்தீன் -

ஹதீஸ் - ஒரு சிறு விளக்கம்!

'திண்ணை' 20-01-05ல் வெளியான கட்டுரையின் மறுபதிவு..

நபிகள் நாயகம் அவர்கள் அன்னை ஜைனப் அவர்களை மணந்து கொண்டபோது நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றி குறிப்பிட்ட போது அபு அப்துல்லாஹ் இப்னு சாஅத் பதிவு செய்துள்ள நிகழ்வை ஆதாரமாக நேசகுமார் காட்டி இருந்தது உண்மைதான். அவர் ஆதாரம் தரவில்லை என்று சொன்னது என் தவறு.
.
பொதுவாக தான் காட்டும் ஆதாரங்களுக்கு உரிய இணைய சுட்டியையோ, குர்ஆன் வசனங்கள் / ஹதீஸ் அறிவிப்புகளின் எண்களையோ, ஆசிரியர், நூல், பக்க எண், பதிப்பாளர் போன்ற விபரங்களையோ தரும் நேசகுமார், இந்த விஷயத்தில் அபு அப்துல்லாஹ் இப்னு சாஅத் என்ற ஒரு பெயரை மட்டும்
குறிப்பிட்டிருந்தார். இந்த விபரங்களுடன் சில மார்க்க அறிஞர்களை அணுகி
விளக்கம் கேட்டபோது, அவர்கள் இந்த நூலாசிரியரை அறிந்திருந்தார்கள்.
இவர் ‘தபகாத்’ என்ற பெயரில் நூல் ஒன்று தொகுத்திருப்பதாகவும்
அறிந்திருந்தார்கள். ஆனால் இந்த நூல் மார்க்க அறிஞர்களிடையே
உபயோகப்படுத்தப்படுவதில்லை என்பதால் இந்த நூல் யாரிடமும் கைவசம் இல்லை. அதன் மூலத்தை பார்க்காமல் அவர்களால் கருத்து எதுவும் தெரிவிக்க இயலவில்லை. நேசகுமாருக்கு எப்படியோ கிடைத்திருக்கிறதே என்ற எண்ணத்தில் மனம் தளராமல் இணையத்தில் தேடியபோது... கிடைத்தே
விட்டது!. இரண்டு அல்லது மூன்று இணையத்தளங்களில் (அனைத்தும் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சார இணையத்தளங்கள்!) இந்த நூலை குறிப்பிட்டு, அதில் முஹம்மது இப்னு யஹ்யா இப்னு ஹய்யான் என்பவர் அறிவித்ததாக ஒரு சம்பவத்தை குறிப்பிடுகின்றார்கள். அதன் ஆங்கில மூலத்தை அப்படியே கீழே கொடுத்துள்ளேன். நேசகுமார் இந்த சம்பவத்தை சித்தரித்த விதம்
கிட்டத்தட்ட இந்த ஆங்கில மூலத்துடன் ஒத்துப்போவதால், அவர் இந்த
இணையத்தளங்களில் கூறப்படும் கருத்துக்களையே தனது ஆதாரமாக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது.
.
இச்சம்பவம் பலவிதமாய் புத்தகங்களில் காணப்படுகிறது என்று குறிப்பிடும்
நேசகுமார், இதன் நுணுக்கமான விளக்கங்களுக்கு செல்லாமல் அதன்
சாராம்சத்தையே பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.
நேசகுமாரின் பார்வையில் இதன் சாராம்சம்: “ஜைனப்பை அவரது கணவன்
வெளியே சென்றிருக்கும்போது சரியானபடி ஆடை அணியாத நிலையில் பார்த்த நபிகள் நாயகத்தின் இதயம் சஞ்சலமுற்றது. இதையறிந்த அவரது (வளர்ப்பு) மகன், தாமே முன்வந்து மனைவியை விட்டுக்கொடுத்து விடுகிறேன் என்று சொன்னார். ஹதீஸ்கள் மற்றும் தஃப்ஸீர் புத்தகங்களிலேயே இச்சம்பவம் காணக்கிடைக்கிறது” என்பதே.
நேசகுமார் குறிப்பிடும் அந்த நிகழ்வு அல்லது பதிவு ஒரு கட்டுக்கதையே என்பது அதை கொஞ்சம் கவனித்து படித்தாலே புரியும். அதற்கு முன் ‘ஹதீஸ்கள் மற்றும் தஃப்ஸீர் புத்தகங்களிலேயே இச்சம்பவம் காணக்கிடைக்கிறது ‘ என்று நேசகுமார் சொல்வதால் ‘ஹதீஸ் என்றால் என்ன?’ என்பதைப்பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வது இங்கு பயனளிக்கும்.
.
1) வேறு எந்த தலைவருக்கும் இல்லாத ஒரு சிறப்பாக, நபிகள் நாயகம்
அவர்களின் சொல், செயல் அங்கீகாரம் அனைத்தும், (அவர்களின் அந்தரங்க
வாழ்க்கை உட்பட) ஆதாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்றையும் ஹதீஸ்கள் என்பார்கள்.
.
2) எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக்கூடாது? என்ற
அடிப்படையில் ஹதீஸ்கள் நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது.
a. ஸஹீஹ் (ஆதாரபூர்வமானவை)
b. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)
c. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)
d. ளயீப் (பலவீனமானது)
இவற்றில் ஸஹீஹ் மட்டுமே ஆதாரப்பூர்வமான, ஏற்றுக்கொள்ளத்தக்க,
நடைமுறைப்படுத்த வேண்டிய ஹதீஸ்களாகும்.
.
3) ஒரு ஹதீஸ் ‘ஸஹீஹ்’ (ஆதாரபூர்வமானது) என்று ஒப்புக்கொள்ளப்படுவதற்கு சில தகுதிகள் உண்டு. அவற்றுள் முக்கியமானது, அறிவிப்பளரின் வரிசை. ஹிஜ்ரி இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் ஹதீஸ்களை நூல் வடிவில் தொகுக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது, நபிகள் நாயகம் தொடர்பான ஒரு செய்தியை ஒருவர் அறிவித்தால், தனக்கு அந்தச் செய்தியை கூறியது யார்? அவர் யாரிடம் கேட்டார்? அவர் இச்செய்தியை யாரிடம் கேட்டார்? என்று சங்கிலித்தொடராக கூறிக்கொண்டே நபிகள் நாயகம் வரை செல்ல வேண்டும். அதோடு,
.
a. இந்த சங்கிலித்தொடரில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும்
நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.
b. அனைவரும் உறுதியான நினைவாற்றல் உடைவயர்களாக இருக்க வேண்டும்.
c. அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
d. அவர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ
அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டிருக்க வேண்டும்.
இந்தத்தன்மைகள் ஒருங்கே அமையப்பெற்றிருந்தால் மட்டுமே அதை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று ஒப்புக்கொள்ளப்படும். அவ்வாறல்லாமல் அரபியில் எழுதப்பட்ட ஒரு நூலில் இடம் பெற்றிருப்பதால் மட்டுமே ஒரு சம்பவம் ஆதாரப்பூர்வமான ஹதீஸாக ஆக முடியாது.

ஹதீஸ் தொகுப்புகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு, கீழ்க்கண்ட
இணையத்தளங்களை பார்வையிடலாம்.

http://www.tamililquran.com/hadeeth.asp?file=hadith_art_1.html

இஸ்லாமிய எதிர்ப்புப்பிரச்சார இணையத்தளங்களிலும், நேசகுமாராலும்
சுட்டிக்காட்டப்படும் அந்த ‘நிகழ்விற்கு’ மேலே கூறப்பட்ட ஒரு ஸஹீஹான
ஹதீஸிற்குறிய எந்த தகுதியும் இல்லை என்பது தௌ¤வாக தெரிகிறது.
.
1. இது ஒரு சம்பவத்தை பற்றி விவரிப்பதற்கு மாறாக, ஒரு கதையையே
உள்ளடக்கி இருக்கிறது. ஜைதை தேடி நபிகளார் அவர் வீட்டிற்கு செல்வதில்
தொடங்கி, ஜைது தன் மனைவியை விவாகரத்து செய்தல், ஜைனப் இத்தா
இருத்தல், நபிகளாருடன் அவரது திருமணம் தொடர்பாக இறைக்கட்டளை வருதல், நபிகளாரின் அடிமைப்பெண் இச்செய்தியை ஜைனப்பிடம் தெரிவித்து பரிசு பெறுதல் என பல சம்பவங்களை உள்ளடக்கியதாக இந்த நிகழ்வு இருக்கிறது.
.
2. முஹம்மது இப்னு யஹ்யா இப்னு ஹய்யான் என்பவர் அறிவித்ததாக இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பாளர், சங்கிலித்தொடரில் முதல் அறிவிப்பாளரா அல்லது கடைசி அறிவிப்பாளரா என்ற விபரம் தெரியவில்லை. இவர் கடைசி அறிவிப்பாளர் என்றால், முதல்
அறிவிப்பாளர் யார்? இவர்தான் முதல் அறிவிப்பாளர் என்றாலும் அது
சாத்தியமில்லை. ஏனெனில் இந்த அறிவிப்பில் பல சம்பவங்கள் கலந்து
இருப்பதால், ஒருவரே இந்த சம்பவங்கள் அனைத்திலும் நேரடியாக பங்கு
பெற்றிருக்க முடியாது.
.
3. நபிகளாரை வீட்டுடையில் இருந்த ஜைனப் அவர்கள் வரவேற்றதாக
சொல்லப்படும் சம்பவத்தில் பங்கு பெற்றவர்கள், நபிகளாரும், ஜைனப் அவர்கள் மட்டுமே. இது ஒரு ஹதீஸாக அறிவிக்கப்பட்டிருந்தால், இந்த இருவரில் ஒருவர்தான் முதல் அறிவிப்பாளராக (றாவீ என்று அரபியில் சொல்வார்கள்) இருந்திருக்க வேண்டும்.
.
4. ஜைனப் அவர்கள் அவசரமாக திரைச்சீலையை விலக்கி நபிகளாரை
வரவேற்றபோது, நபிகளார் அதை விரும்பினார்கள் என்று இங்கு கூறப்படுகிறது. (..so she leapt in a hurry, and the Messenger of God
liked her when she did that) இது நபிகளாரின் மனதிற்குள் தோன்றிய எண்ணமாக இருப்பதால், நபிகளார் மட்டுமே இதை அறிவித்திருக்க முடியும். மேலே கூறப்பட்ட அறிவிப்பாளரான இப்னு ஹய்யான் இதை அறிய வேறு
வழியே இல்லை.
.
இந்த நிகழ்வு கட்டுக்கதையைத்தவிர வேறில்லை என்பதற்கு, மேலும் பல
ஆதாரங்களை கூறிக்கொண்டேபோகலாம். சகோதரர் அபூமுஹையின்
வலைப்பதிவிலும் இத்தகைய ஆதாரங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.
மௌலானா மௌதூதி அவர்களின் குர்ஆன் தஃப்ஸீரிலும், ‘ரஹீக்’ என்னும்
நபிகளாரின் வாழ்க்கை வரலாற்று நூலிலும் இந்தச் சம்பவம் ஒரு கட்டுக்கதை என்பதாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதற்கு மேலும், இந்த நிகழ்வு ஒரு ஆதாரபூர்வமான ஹதீஸ் என்பதற்கு நண்பர் நேசகுமார் வசம் ஆதாரங்கள் ஏதுமிருப்பின் தாரளமாக அவற்றை அவர் முன் வைக்கலாம். இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சார இணையத் தளங்களிலிருந்து அல்லாமல், அவர் நேரடியாக ‘தபகாத்’ என்னும் நூலிலிருந்தோ அதன் மொழிபெயர்ப்புகளிலிருந்தோ இந்த சம்பவத்தை எடுத்திருந்தாரென்றால், அந்த குறிப்பிட்ட பக்கங்களை தயவு செய்து scan செய்து அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். அல்லது வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூற்களிலோ, தஃப்ஸீர்களிலோ (குர்ஆன் விளக்கஉரை) இச்சம்பவம் நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த ஆதாரங்களை தரும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.

========================

இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சார இணையத் தளங்களில் காணப்படும் text
அப்படியே:

Muhammad Ibn Yahya Ibn Hayyan narrated, "The Messenger
of God came to Zaid Ibn Haritha's house seeking him.
Perhaps the Messenger of God missed him at that time,
that is why he said, 'Where is Zaid?' He went to his
house seeking him and, when he did not find him,
Zainab Bint Jahsh stood up to [meet] him in a house
dress, but the Messenger of God turned away from her.
She said, 'He is not here, Messenger of God, so please
come in; my father and mother are your ransom.' The
Messenger of God refused to come in. Zainab had
hurried to dress herself when she heard that the
Messenger of God was at her door, so she leapt in a
hurry, and the Messenger of God liked her when she did
that. He went away muttering something that was hardly
understandable but for this sentence: 'Praise be to
God who disposes the hearts.' When Zaid came back
home, she told him that the Messenger of God came.
Zaid asked, 'You asked him to come in, didn't you?'
She replied, 'I bade him to, but he refused.' He said,
'Have you heard [him say] anything?' She answered,
'When he had turned away, I heard him say something
that I could hardly understand. I heard him say,
"Praise be to God who disposes the hearts." ' Zaid
went out to the Messenger of God and said, 'O
Messenger of God, I learned that you came to my house.
Did you come in? O Messenger of God, my father and
mother are your ransom. Perhaps you liked Zainab. I
can leave her.' The Messenger of God said, 'Hold on to
your wife.' Zaid said, 'O Messenger of God, I will
leave her.' The Messenger of God said, 'Keep your
wife.' So when Zaid left her, she finished her legal
period after she had isolated herself from Zaid. While
the Messenger of God was sitting and talking with
`Aஒisha, he was taken in a trance, and when it lifted,
he smiled and said, 'Who will go to Zainab to tell her
that God wedded her to me from heaven?' The Messenger
of God recited, 'Thus you told someone whom God had
favoured and whom you yourself have favoured: "Hold on
to your wife." ' `Aஒisha said, 'I heard much about her
beauty and, moreover, about how God wedded her from
heaven, and I said, "For sure she will boast over this
with us." ' Salama, the slave of the Messenger of God,
hurried to tell her about that. She gave her some
silver jewellery that she was wearing."

அசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்!

அசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது.  கீழ்க்காணும் திருமறை வசனங்களை...