Wednesday, January 23, 2019

அசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்!

அசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது.

 கீழ்க்காணும் திருமறை வசனங்களை பார்க்கும்போது, தடுக்கப்பட்ட ஒருசிலவற்றை தவிர மற்ற உணவு வகைகள் அனைத்தையும், மாமிசம் உட்பட, இறைவன் மனிதர்களுக்கு ஆகுமானதாக ஆக்கி வைத்திருக்கிறான் என்பது தெரிகிறது.

5:1 முஃமீன்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள்; உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவற்றைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக) ஆகுமாக்கப்பட்டுள்ளன.

2:173 தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக (தடுக்கப்பட்டதாக) ஆக்கியிருக்கிறான்.

6:145 (நபியே!) நீர் கூறும்: “தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை

23:21 நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினன இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம்; இன்னும் அவற்றில் உங்களுக்கு அனேக பயன்கள் இருக்கின்றன; அவற்றி(ன் மாமிசத்திலிருந்து) நீங்கள் புசிக்கின்றீர்கள்.

16:4 நீங்கள் கடலிலிருந்து நய(மும் சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக் கூடிய ஆபரணத்தை அதிலிருந்து வெளிப்படுத்தவும் அவன்தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்.

அசைவ உணவு சாப்பிட இஸ்லாம் அனுமதிதான் அளித்திருக்கிறதே தவிர, அசைவ உணவுதான் உட்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். சைவ உணவை மட்டுமே உண்ணக்கூடிய ஒருவர் ஒரு நல்ல முஸ்லிமாகவும் இருக்க முடியும்.
2. மனிதர்கள் அசைவ உணவு சாப்பிடுவது இயற்கைக்கு மாற்றமானது அல்ல!


இயற்கைக்கு எதிரான மனிதன் செயல்படும்போது அது அவனை தண்டிக்கவே செய்கிறது என்பது நாம் கண்கூடாக கண்டு வரும் நிதர்சனமான உண்மை.  சில ஆண்டுகளுக்கு முன்பு மாட்டுத்தீவனத்தில் மாட்டு எலும்புத்தூளை கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப் பட்டது.  அந்த உணவைக் கொடுத்தால் மாடு அதிக பால் கறக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.  பால் மற்றும் இறைச்சி அதிகமாகத்தான் கிடைத்தது. ஆனால், ஒரு கட்டத்தில் மாடுகளுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. இதை “Mad Cow disease” என்றனர்.

இவ்வாறு நிகழ்ந்ததற்குக் காரணம் என்ன? ஆடு, மாடு போன்ற பிராணிகள் தாவர உண்ணிகள். இவற்றின் செரிமான அமைப்பு தாவர வகை உணவுகளை மட்டுமே செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. அது போலவே, சிங்கம், புலி போன்ற விலங்குகளின் செரிமான அமைப்பு மாமிச உணவு வகைகளை செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. அதனால்தான் ‘புலி பசித்தாலும் புல் தின்பதில்லை’. இந்த இயற்கை அமைப்பிற்கு மாற்றமான உணவு வகைகளை இந்த பிராணிகள் உட்கொள்ள நேர்ந்தால், Mad Cow Disease போன்ற வியாதிகளின் மூலம் இயற்கை தனது எதிர்ப்பைத் தெரிவிக்கிறது.

ஆனால், மனிதன் புலால் உணவு உண்பது இயற்கைக்கு மாற்றமானதல்ல என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. மனிதனின் செரிமான அமைப்பு மட்டுமே, மாமிச உணவு, தாவர உணவு என இருவகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. இந்த அமைப்பு, இருவகை உணவுகளையும் மனிதன் உட்கொள்ளலாம் என்பதற்கு இயற்கையே வழங்கியிருக்கும் அனுமதி.

மேலும், பிராணிகள் மற்றும் மனிதர்களின் பற்கள் அமைப்பிலும் இதற்கு ஒரு ஆதாரம் இருக்கிறது.  ஆடு, மாடு போன்ற தாவர உண்ணிகள், தாவர உணவு மட்டுமே உண்ணுவதற்கு ஏற்றவாறு தட்டையான பற்களை கொண்டிருக்கின்றன. இந்த பிராணிகள் இலை தழைகளை நன்கு மென்று உண்ண இந்த பற்கள் உதவுகின்றன. அது போல சிங்கம், புலி போன்ற மாமிச உண்ணிகளின் பற்கள், மாமிசத்தை கடித்து தின்பதற்கு வசதியாக கூராக அமைந்துள்ளன. ஆனால், மனிதனுக்கு மட்டுமே, மாமிச உணவு உண்ண வசதியாக கூரான முன்பற்களும், தாவர உணவுகளை மென்று உண்ண வசதியாக தட்டையான கடைவாய்ப் பற்களும் அமைந்துள்ளன. மனிதன் சைவ உணவுகளை மட்டுமே உண்ண வேண்டுமென்பது இறைவனின் சித்தமாக இருந்தால், மனிதனுக்கு கூரிய பற்களை ஏன் படைக்க வேண்டும்?

3. பூமியின் பசுமைப் பாதுகாப்பு கேடயம் அரிக்கப்படுவதற்கு புலால் உண்பவர்கள் காரணமல்ல.

“ஒரு கிலோ மாமிசம் ஒருவர் உண்ணும்போது, அது பல கிலோ பசுமையான தாவர இலைகளால் ஆனது என்பதை உணர்வதில்லை; பூமியின் பசுமைப் பாதுகாப்பு கேடயம் அரிக்கப்படுவதற்கு தான் காரணமாவதை உணர்வதில்லை.” என்ற ஒரு குற்றச்சாட்டு அசைவம் உண்பவர்கள் மீது சுமத்தப் படுகிறது. 

அதாவது, பல கிலோ பசுமையான தாவர இலைகளை உட்கொண்ட ஆடு, மாடுகளே சில கிலோ மாமிச உணவாக மாறுகிறது என்ற பொருள் தொனிக்கிறது. இருக்கலாம். ஆனால் அதற்காக மனிதர்கள் மாமிச உணவு உண்பதை நிறுத்திவிட்டால் நிலைமை இன்னும் மோசமாக அல்லவா போய்விடும்? 
 
* ஆடு, மாடுகள் அப்போதும் தாவர இலைகளைத்தான் உண்ணும்.
* கால்நடைகள் வேகமாக இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. உணவுக்காக அவை கொல்லப்படாததால் உலகில் அவற்றின் பெருக்கம் கிடுகிடுவென அதிகரிக்கும்.
* சைவ உணவு மட்டுமே உண்ணும் மனிதர்களும் தாவர உணவுவகைகளுக்காக கால்நடைகளுடன் போட்டியிட வேண்டும்.
* இந்த சூழ்நிலையில் பூமியின் பசுமைக்கவசம் வெகு சீக்கிரமே காணாமல் போகும்!

Saturday, February 19, 2011

இஸ்லாம் என்றால் என்ன?

உலகில் இன்று பரவலாகக் கடைப்பிடிக்கப்படும் மதங்களில் கிட்டத்தட்ட அனைத்துமே அதன் தலைவரின் பெயரைக் கொண்டோ, ஒரு இனத்தை அல்லது நாட்டைக் குறிப்பதாகவோதான் அமைந்திருக்கின்றன.

உதாரணமாக,

ஆனால், இஸ்லாம் மட்டும் இதில் விதி விலக்கு.  இதன் பெயர் எந்த ஒரு தலைவரையோ, இனத்தையோ, நாட்டையோ குறிப்பது அல்ல.  மாறாக,   ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டிய தன்மைகளை பிரதிபலிப்பதாகவே இதன் பெயர் அமைந்துள்ளது.

இஸ்லாம் என்ற அரபிச் சொல்லின் பொருள் 'அடிபணிதல்', 'கட்டுப்படுதல்' 'கீழ்ப்படிதல்' ஆகியவையாகும்.  படைப்பாளனாகிய இறைவனின் கட்டளைகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு அவற்றிற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதுதான் இஸ்லாம். 

இஸ்லாம் என்றச் சொல்லுக்கு 'அமைதி' என்றொரு பொருளும் உண்டு.  இறைவனின் கட்டளைகளுக்கேற்ப அமையும்  வாழ்க்கையில்தான் உடலும் உள்ளமும் அமைதி பெறும் என்பதையே இப்பெயர் குறிப்பதாகக் கொள்ளலாம்.

Tuesday, September 28, 2010

இட ஒதுக்கீடு தீர்வாகுமா?

இந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று! - சவால்களும் தீர்வுகளும்! (தொடர் - பகுதி 2)


ந்தியாவில் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் மற்ற சமுதாயத்தினரைக் காட்டிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தை முன்னேற்றுவதற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் ஆகியவை பரிந்துரைத்திருக்கின்றன.
 
சிறுபான்மையினருக்கு 15% வரை இடஒதுக்கீடு கொடுக்க இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்திலும் விதிமுறைகள் இருக்கின்றனவாம்.

கமிஷன் அறிக்கைகள் வெளியானபிறகு கிட்டத்தட்ட எல்லா இந்திய இஸ்லாமிய அமைப்புகளுமே முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், போராட்டம், பேரணி, மாநாடு என நடத்திக் கொண்டுள்ளன. குறிப்பாக தமிழக இஸ்லாமிய அமைப்புகள் இக்கோரிக்கைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்தால் சமுதாய முன்னேற்றத்திற்கு இடஒதுக்கீட்டை விட்டால் வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அரசியல்வாதிகளும் தங்கள் மனோநிலை, அரசியல் சூழல், நெருங்கி வரும் தேர்தல் போன்ற காரணிகளுக்கேற்ப ஏதாவது அறிக்கைகள் விடுவதும் ஒப்புக்குச் சப்பாணியாக சில திட்டங்களை அறிவிப்பதும் பிறகு அதை திரும்பப் பெறுவதுமாக 'அரசியல்' பண்ணிக் கொண்டுள்ளனர்.


இந்தியாவின் சுதந்திரத்திற்காக பல தலைமுறைகளாக தமது மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட அதிகமாகவே உயிர்த்தியாகம் செய்து போராடிய முஸ்லிம் சமுதாயம் இன்றைய சுதந்திர இந்தியாவில் தமக்கான சலுகைகளைக் கோர முழு உரிமையும் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. இருப்பினும் சமுதாயத்தின் விருப்பப்படி இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டு விட்டால் அது சமுதாய முன்னேற்றத்திற்கு எந்த அளவிற்கு பயனளிக்கும் என்பதை அலசி ஆராய வேண்டியதும் அவசியம்!


இடஒதுக்கீட்டினால் இஸ்லாமிய சமுதாயத்திற்குக் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?


பொறியியல், மருத்துவம் போன்ற உயர்கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவர்களுக்கு சில இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுமானால், பள்ளிப்படிப்பில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற முஸ்லிம் மாணவர்கள் அதிக போட்டி இல்லாமல் மேற்கண்ட உயர்நிலை கல்வியைத் தொடர வாய்ப்பு ஏற்படும்.


அதேபோல, அரசு சார்ந்த பணியிடங்களில் குறிப்பிட்ட சதவிகிதம் முஸ்லிம்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படுமானால் அந்தந்தப் பணிகளுக்குத் தகுதியுடைய படித்த முஸ்லிம் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது சுலபமாகி விடும். அரசாங்க வேலை கிடைப்பது சுலபம் என்றால் அது படிப்பில் ஆர்வமின்றி இருக்கும் இளைஞர்களும் பட்டப்படிப்பு வரையாவது தொடர்ந்து படிக்க தூண்டுகோலாக இருக்கும். இதனால் சமுதாயத்தில் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகும். பள்ளிப்படிப்பைக்கூட சரிவர முடிக்காமல் வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடி பயணிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை ஓரளவிற்காவது குறையலாம்.


சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இரு பேராசிரியர்கள் இந்தியாவில் நடத்திய ஒரு ஆய்வில் அதிர்ச்சி தரும் ஒரு உண்மை வெளிப்பட்டது. (
http://www.satyamargam.com/673). இந்த ஆய்வுக்குழுவினர், பத்திரிக்கைகளில் வெளியான பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு விளம்பரங்களுக்கு வெவ்வேறு பெயர்களில் சுமார் 4,800 வேலை விண்ணப்பங்களைப் பல நிறுவனங்களுக்கும் அனுப்பினர். கிட்டத்தட்ட ஒரே அளவிலான தகுதிகளை உடைய விண்ணப்பங்களைத் தயாரித்து, அவற்றிற்கு உயர் சாதி, தாழ்ந்த சாதி மற்றும் முஸ்லிம் பெயர்களை இட்டு, அவற்றை இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அவர்கள் அனுப்பினர். இவற்றிற்கு வந்த பதில்கள்தான் இந்தியத் தனியார் தொழிற்துறை நிறுவனங்களிடையே சாதி, இன பாகுபாடுகளும் பாரபட்சமான மனப்போக்கும் எந்த அளவிற்குப் புரையோடிப் போயுள்ளது என்பதை வெளிப்படுத்தியது.

இவ்வாறு 'விண்ணப்பித்த' தலித் ஒருவர் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் வாய்ப்பு, கிட்டத்தட்ட அதேத் தகுதியை உடைய ஒரு உயர்சாதியினருக்குக் கிடைத்த வாய்ப்புகளில் மூன்றில் இரண்டு பங்குதான். முஸ்லிம் 'விண்ணப்பதாரர்களின்' நிலைமையோ இன்னும் மோசம். உயர்சாதி இந்துக்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் மூன்றில் ஒரு பங்கே முஸ்லிம்களுக்குக் கிடைத்தது.


அரசு சார்ந்த பணியிடங்களில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுமானால் இந்த அவலநிலைக்கு ஒரு தீர்வு பிறக்கலாம்.


நிற்க!


மேற்கண்ட சலுகைகளால் பலனடையக்கூடியவர்கள் பள்ளிக்கல்வியை முடித்து உயர்கல்வியைத் தொடர வாய்ப்பும் வசதியும் உள்ள மாணவர்களும், உயர்கல்வியை முடித்து உள்நாட்டிலேயே வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களும்தான்! சச்சார் கமிஷன் அறிக்கையின்படி முஸ்லிம்களில் 7.2 சதவிகிதத்தினர் மட்டுமே உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார்கள். அதிலும் 4 சதவிகிதத்தினர் மட்டுமே பள்ளிப்படிப்பைத் தாண்டி கல்லூரிக்குச் செல்கிறார்கள். பட்டமேற்படிப்பு படித்தவர்கள் வெறும் 1.2 சதவிகிதத்தினர் மட்டுமே. இடஒதுக்கீடு என்பது சுமார் 95% வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் நலிவடைந்த இஸ்லாமிய சமுதாயத்தின் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே பலனளிக்கக்கூடியது! அப்படியானால் பெரும்பான்மையான மற்றவர்களின் நிலை?


தொடர்ந்து அலசுவோம் இன்ஷா அல்லாஹ்.. 

Monday, September 27, 2010

இந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று! - சவால்களும் தீர்வுகளும்!

பகுதி 1 - கமிஷன் அறிக்கைகள் ஒலிக்கும் எச்சரிக்கை மணி!

வெள்ளையருக்கெதிரான சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கமாக அந்நியத்துணிகளை புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார் காந்திஜி. ஆனால் இந்திய முஸ்லிம் சமுதாயமோ அந்நியர்களின் மொழி மற்றும் அதனூடாக போதிக்கப்பட்ட கல்வியையும் புறக்கணித்து வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியது.

சுதந்திரப்போராட்ட வரலாற்றின் மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட பக்கங்களில் இதுபோன்ற இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் எண்ணற்ற தியாகங்கள் புதையுண்டிருப்பதைக் காணலாம். "இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது." என இல்லஸ்டிரேட்டட் வீக்லி 29-12-1975 தேதியிட்ட இதழில் எழுதினார் குஷ்வந்த்சிங்.

சுதந்திரம் கிடைத்து 63 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில் தியாக சமுதாயமான இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலையை ஒற்றை வார்த்தையில் சொல்வதென்றால், அவலம்! முஸ்லிம்கள் கல்வி மற்றும் பொருளாதார நிலையில் மற்ற சமூகங்களைக் காட்டிலும் மிகவும் பின்தங்கி இருப்பது அரசியல்வாதிகளுக்கும் சமுதாயத் தலைவர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் நன்கு தெரிந்த ஒன்றுதான். உதாரணத்திற்கு தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், வங்கக் கடற்கரையையொட்டிய சில மாவட்டங்களைத் தவிர மாநிலத்தின் பிறபகுதிகளில் வசிக்கும் பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கு அன்றாடம் வறுமைக் கோட்டுடன் ஒட்டி உறவாடும் வாழ்க்கைதான்! 2006-ல் ஆளூர் ஷாநவாஸ் தயாரித்த 'பிறப்புரிமை' என்ற ஆவணப்படத்தில் இந்த நிலையை தெளிவாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். [காண்க http://www.islamkalvi.com/media/pirappurimai/index.htm]

முஸ்லிம்களின் இந்த அவல நிலைக்கு புள்ளிவிவரங்களுடன் அரசாங்க முத்திரை பதித்து சான்றிதழ் வழங்கியிருக்கிறது சச்சார் கமிஷன் அறிக்கை. இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 13.4 சதவிகிதமாக இருக்கிறார்கள். ஆனால் அரசாங்கத்தின் பொறுப்பான பதவிகளில் 2 அல்லது 3 சதவிகிதத்தினர் மட்டுமே முஸ்லிம்கள். நாட்டின் நிர்வாக அமைப்பில் பங்குபெறுவதில் முஸ்லிம்கள் இவ்வாறு பின்தங்கியிருப்பதன் முக்கிய காரணம் கல்வித்துறையில் அவர்கள் வெகுவாக பின்தங்கியிருப்பதுதான் என்று சுட்டிக் காட்டுகிறது சச்சார் அறிக்கை. முஸ்லிம்களில் 7.2 சதவிகிதத்தினர் மட்டுமே உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார்கள். அதிலும் 4 சதவிகிதத்தினர் மட்டுமே பள்ளிப்படிப்பைத் தாண்டி கல்லூரிக்குச் செல்கிறார்கள். பட்டமேற்படிப்பு படித்தவர்கள் வெறும் 1.2 சதவிகிதத்தினர் மட்டுமே என அதிர்ச்சித் தகவல்களை அள்ளித் தருகிறது அவ்வறிக்கை. மேலும், கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் தலித்துகளைவிடவும் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள் என்ற குண்டையும் தூக்கிப் போடுகிறது சச்சார் அறிக்கை.

இந்திய முஸ்லிம்களில் 94.8 சதவிகிதத்தினர் வறுமைக்கோட்டுக் கீழ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் நகரங்களில் வசிக்கும் முஸ்லிம்களில் 28.3 சதவிகிதத்தினர் மிக மோசமான வறுமையில் வாழ்கிறார்கள்.. அல்ல.. வாடுகிறார்கள். நாடு முழுவதிலுமுள்ள சிறு நகரங்களில் தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் மாதவருவாயை விட முஸ்லிம்களின் மாத வருவாய் குறைவாக இருக்கிறது. நீதித்துறையில் தலித்துகளின் பங்கு 20 சதவிகிதமாக இருக்கிற போது முஸ்லிம்கள் பங்கு 7.8 சதவிகிதம் மட்டுமே. தலித்துகளில் 23 சதவிகிதத்தினருக்கு குழாய் குடிநீர் கிடைக்கையில் முஸ்லிமகளில் 19 சதவிகிதத்தினருக்கு மட்டுமே அது கிடைக்கிறது. தலித்துகளில் 32 சதவிகிதம் பேருக்கு ரேஷன் கார்டு இருக்கிறதென்றால் முஸ்லிம்களில் 22 சதவிகிதத்தினரே ரேஷன் கார்டு வைத்திருக்கின்றனர். பொதுத்துறை (7.2%) சுகாதாரத்துறை (4.4%) ரயில்வே துறை (4.5%) போன்ற பல்வேறு அரசு சார்ந்த துறைகளில் தலித்களைவிட முஸ்லிம்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது. முஸ்லிம் விவசாயிகளில் 2.1 சதவிகிதத்தினர்தான் சொந்தமாக டிராக்டர் வைத்திருக்கிறார்கள். ஒரு சதவிகிதத்தினர்தான் நிலத்திற்கு நீர்பாய்ச்ச பம்ப்செட் வைத்திருக்கிறார்கள்.

சச்சார் அறிக்கை குறிப்பிடும் இன்னொரு முக்கியமான விஷயம் முஸ்லிம்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப அரசியல் அதிகாரத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பதாகும். தற்போதைய நாடாளுமன்றத்தில் 543 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் முஸ்லிம்களின் மக்கள் தொகையான 13.4 சதவிகிதத்திற்கு சுமார் 70 - 75 முஸ்லிம் எம்.பி-க்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய முஸ்லிம் எம் பி-க்களின் எண்ணிக்கை 33 மட்டுமே! (அதில் எத்தனை பேர் இஸ்லாமிய சமுதாய நலனில் அக்கறை கொண்டவர்கள் என்பது வேறு விஷயம்!) மின்சாரம் இல்லாத கிராமங்களில் அதிகம் வாழ்பவர்கள் முஸ்லிம்களே. அதுபோல சேரிகளில் வாழ்பவர்களிலும் முஸ்லிம்களே அதிகம். விடுதலைப் போராட்டத்தில் தமது மக்கள் தொகையைவிட கூடுதலான விகிதாச்சாரத்தில் உயிர்த்தியாகம் செய்த சமுதாயத்தின் இன்றைய நிலை இது!

போதுமா புள்ளிவிவரங்கள்? இவ்வாறு இஸ்லாமிய சமுதாயம் குறித்து எச்சரிக்கை மணி ஒலிக்கப்படுவது முதன் முறை அல்ல. 1953ல் காகா கலேல்கர் கமிஷன், 1983 கோபல் சிங் கமிஷன், 1989 மண்டல் கமிஷன், 2006 சச்சார் கமிஷன், அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் என அனைத்து கமிஷன் அறிக்கைகளிலும் தவறாது இடம் பெறும் வாசகம் 'இந்திய இஸ்லாமிய சமுதாயம் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் மற்ற சமுதாயத்தினரைக் காட்டிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது' என்பதுதான்.

இந்த நிலையில் இஸ்லாமிய சமுதாயம் செய்ய வேண்டுவது என்ன? பின்தங்கியிருக்கும் சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் செலுத்தத் தேவையான ஏற்பாடுகள் என்னென்ன? இந்தப் பிரச்னைகளுக்கு இஸ்லாம் காட்டும் தீர்வுகள் என்ன?

தொடர்ந்து அலசுவோம் இன்ஷா அல்லாஹ்...

Sunday, June 06, 2010

ஒளி வீசும் 'இருண்ட காலம்' - குறும்படம்

பள்ளிச்சிறுவர்களை அரும்பொருள் காட்சியகத்திற்கு அழைத்துச் செல்லும் வரலாற்று ஆசிரியை அவர்களை சிறு சிறு குழுக்களாக பிரித்து அவர் சொல்லும் தலைப்பிற்கேற்ற பதிலை தயாரித்துக் கொண்டு வருமாறு கூறுகிறார்.

"உங்கள் ஒவ்வொரு குழுவிற்கும் வரலாற்றின் வெவ்வேறு காலக்கட்டங்களை பிரித்துத் தரப்போகிறேன்.  கேள்வி என்னவென்றால்,  'உங்களுக்குக் கொடுக்கப்பட்ட காலக்கட்டம், இன்றைய நவீன உலகிற்கு என்ன பங்களிப்பை வழங்கியிருக்கிறது?' என்பதுதான்"  என்று சொல்லும் ஆசிரியை, கிரேக்க, ரோம காலங்களுக்குப் பிறகான 'மத்திய கால'த்தை பெறப்போகும் குழுவிடம் "உங்களுக்குக் கிடைத்திருக்கும் 'மத்திய காலம்' ஒரு சவாலான காலக்கட்டம்.  ஏனெனில் இந்தக் காலத்தை வரலாற்றில் 'இருண்ட காலம்' என்று அழைக்கிறார்கள்" என்று சொல்லி அந்த மாணவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்து அனுப்புகிறார்.

நொந்த மனதுடன் அரும்பொருள் காட்சியகத்தின் 'மத்தியக் கால'ப் பிரிவைத் தேடிச் செல்லும் மாணவர்களுக்கு அங்கே ஆச்சரியம் காத்திருக்கிறது.   அங்கே அவர்கள் ஒரு மனிதரைச் சந்திக்கிறார்கள்.  ('காந்தி' படத்தில் நடித்த பென் கிங்ஸ்லி இந்தப் பாத்திரத்தில் தோன்றுகிறார்)  அவர் 'இருண்ட காலத்தில் அப்படி என்ன முக்கியமான கண்டுபிடிப்புகள் இருக்கப் போகிறது?' என்ற அலட்சிய மனோபாவத்தில் இருக்கும் மாணவர்கள், அது உண்மையில் இருண்ட காலம் அல்ல என்பதை தெளிவு படுத்துகிறார்.

மத்தியக்காலத்தில் வாழ்ந்த விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்பாளர்களுமான அல் ஜஸாரிஅல்ஹஸன் இப்னு ஹைத்தம், அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ், அபுல்காசிம் அல் ஜஹ்ராவி, மர்யம் அல் அஸ்துர்லாபி ஆகியோர் மாணவர்களின் கண் முன்னே தோன்றி அவர்களின் கண்டுபிடிப்புகளை விளக்குகிறார்கள்.

ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியிலிருந்து ஐரோப்பிய மறுமலர்ச்சி வரையிலான காலக்கட்டத்தையே 'மத்தியக் காலம்' என்று அழைக்கிறார்கள்.  இதை சில வரலாற்றாசிரியர்கள் 'இருண்ட காலம்' என குறிப்பிட்டிருக்கிறார்கள்.  உண்மையில் அது ஐரோப்பியர்களுக்குத்தான் இருண்ட காலமாக இருந்தது.  அதே காலத்தில் இஸ்லாமிய சமூகம் விஞ்ஞானத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தது.  ஏராளமான அறிவியல் கண்டுபிடிப்புகள் அந்தக் காலத்தில்தான் முஸ்லிம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப் பட்டன.


13 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இக்குறும்படம் '1001 Inventions' என்ற அமைப்பின் சார்பில் தயாரிக்கப் பட்டுள்ளது.  இதுவரை பல சர்வதேச விருதுகளையும் இப்படம் வென்றிருக்கிறது.

Wednesday, May 12, 2010

அறிவியலும் ஆன்மீகமும்!

நாத்திக அன்பர் ஒருவருடன் சமீபத்தில் நடந்த விவாதத்தின்போது, 'இறை நம்பிக்கை உடையவர்கள், அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள், அறிவியலுக்கு எதிரானவர்கள்.  ஆனால், நாத்திகர்களோ அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டவற்றை மட்டுமே ஏற்பார்கள்' என்ற ரீதியில் தன் வாதங்களை எடுத்து வைத்திருந்தார். அவரது இந்த இரண்டு வாதங்களுமே தவறு என்று எவ்வளவோ விளக்கியும் அவர் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.

"இஸ்லாம் அறிவியலுக்கு எதிரான மதமல்ல நண்பரே.  குர்ஆன் ஒரு அறிவியல் நூலல்ல என்றாலும், 'அத்தாட்சிகள்' என்ற முறையில் எத்தனையோ அறிவியல் உண்மைகள் அதில் சொல்லப்பட்டுள்ளன" என்றேன் நான்.

"உங்களைப் பற்றி தெரியாதா? எதையுமே குரானில் போட்டிருந்தால் ஏற்பீர்கள்.  குரானில் இல்லாவிட்டால் ஏற்க மாட்டீர்கள்.  இதில் என்ன அறிவியல் வாழுகிறது?" என்றார் அவர்.

"நண்பரே.  இஸ்லாம் பற்றி நீங்கள் தப்பும் தவறுமாக புரிந்து வைத்திருக்கிறீர்கள்.  இஸ்லாமியக் கொள்கைகளைப் பற்றி ஒரு முஸ்லிமின் கண்ணோட்டத்தில் விளக்கிச் சொல்ல நான் தயார். இஸ்லாமியக் கொள்கைகள் கற்பனையானவை என நீங்கள் செதுக்கி வைத்திருக்கும் மனப்பிம்பத்தினை தற்காலிகமாகவேனும் ஒதுக்கி வைத்து விட்டு, அந்த விளக்கங்களை தெரிந்துக் கொள்ள நீங்கள் தயாரா?"

"தேவையில்லை.  இஸ்லாம் குறித்து யார் எதிராக எழுதினாலும், அது இஸ்லாம் குறித்த போதிய விளக்கமின்மையால் எழுதப்பட்டது என்பது இஸ்லாமியர்களின் தட்டையான சிந்தனைகளில் ஒன்று. இதற்கு நீங்களும்  விதிவிலக்கல்ல. அதேபோல் குரான் கூறும் எதுவும் நிரூபிக்கப்பட்ட அறிவியலோடு மோதாது, அப்படி மோதியது என்றால் அது யூகமாக இருக்கும் என்பதும் உங்களின் தட்டையான சிந்தனைகளில் உள்ளது.   எனவே, உங்கள் விளக்கங்கள் தேவையில்லை.    நீங்கள் இஸ்லாமிய பிரச்சாரம் செய்வதற்கு இது இடமல்ல!"

அதோடு இந்த விவாதம் முடிவுக்கு வந்தது!

வேறு யாராவது இதுபோல எழுதியிருந்தார்களென்றால் எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டிருக்காது.  ஆனால் இந்த நாத்திக அன்பர்  'இஸ்லாமியர்களின் அடிப்படை நம்பிக்கையை தகர்ப்பதற்காகவே' தனது வலைத்தளத்தில் தொடர்க் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருப்பவர்!  அடக் கடவுளே!

இஸ்லாமியர்கள் என்றால் தட்டையான சிந்தனை உள்ளவர்கள் என்று இவரே முடிவு செய்து கொள்வாராம்.  ஒரு முஸ்லிமின் அடிப்படை நம்பிக்கை என்ன என்பதை ஒரு முஸ்லிமின் கண்ணோட்டத்தில் இவர் தெரிந்துக் கொள்ளகூட மாட்டாராம்.  ஆனால் அந்த முஸ்லிமின் அடிப்படை நம்பிக்கையை இவர் தகர்க்கப் போகிறாராம்.  எங்கே போய் முறையிடுவது?

'நீங்கள் இஸ்லாமிய பிரச்சாரம் செய்வதற்கு இது இடமல்ல' என்று அவர் முகத்திலடிப்பதுபோலச் சொன்னாலும் நான் அதை அப்படியே விட்டுவிடத் தயாராக இல்லை.  அவரது இன்னொரு பதிவில் விவாதத்தைத் தொடர்ந்தேன்.  அதைப் பற்றி அடுத்த பதிவில்..

Wednesday, January 13, 2010

இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள்: யாருக்கு யார் எதிரி?

இஸ்லாமின் அடிப்படைகளைப் பற்றிய சரியான புரிதல்கள் இல்லாமலேயே இஸ்லாமை 'அறிமுகம்' செய்ய முற்பட்ட தோழர் செங்கொடி, 'முதல் கோணல் முற்றிலும் கோணல்' என்ற பழமொழியை பத்திக்குப் பத்தி நிரூபித்து வருகிறார்.
"...மனித குலத்திற்கான அந்த இஸ்லாம் எனும் ஒரே மதம் உருவான சில கணங்களிலேயே சைத்தான் எனும் அல்லாவின் எதிரியால் சிதைவுக்கு உள்ளாக்கப்படுகிறது. பின்னர் தொடர்ந்து சைத்தானால் சிதைக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு அதனால் மனிதர்கள் மனம்போன போக்கில் பின்பற்றக்கூடிய நிலையானது. உருவாக்கித்தந்த ஆண்டவனே தான் உருவாக்கிய மதம் இப்படித்தான் அப்படி இல்லை என்று போதிப்பதற்காக இறைத்தூதர்களை அனுப்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டது. ஆனால் அவைகளும் சைத்தானின் வினையாக்கலுக்கு ஆட்பட்டு தனித்தனி மதங்களாக உருமாறி இறைத்தூதர்களையே கடவுளாக கொண்டாடும் நிலையாகி நிற்கிறது..." - செங்கொடி
படைப்பினங்கள் அனைத்தையும், சைத்தான் உட்பட, படைத்தவன் அல்லாஹ் ஒருவனே என்பது இஸ்லாமின் அடிப்படைகளுள் ஒன்று.  அல்லாஹ்வால் படைக்கப்பட்ட சைத்தான்   எப்படி அல்லாஹ்வுக்கே எதிரியாகி, அல்லாஹ் ஏற்படுத்திய மார்க்கத்தை சிதைக்க முடியும்?  

உண்மையில் ஷைத்தான் மனிதர்களுக்குத்தான் எதிரி.  குர்ஆன் இவ்வாறு சொல்கிறது:
"உண்மையில் ஷைத்தான் உங்களின் பகைவனாவான்.  ஆகையால் நீங்களும் அவனை உங்களின் பகைவனாகவே கருதுங்கள்.  அவன் தன்னைப் பின்பற்றுபவர்களைத் தனது வழியில் அழைத்துக் கொண்டிருப்பது அவர்கள் நரகவாசிகளுடன் இணைந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான்." (35:06)
 அதுபோல, 'அல்லாஹ் ஏற்படுத்திய மார்க்கங்கள் சைத்தானால் சிதைக்கப்பட்டன' என்பதும் தவறான கருத்துதான். இறைத்தூதர்களை அனுப்புதல், வேதங்களை வழங்குதல், மார்க்கத்தை ஏற்படுத்துதல், அதனை பாதுகாத்தல், அதில் மாற்றங்களை ஏற்படுத்துதல் ஆகிய அனைத்தையும் செய்யக் கூடியவன் அல்லாஹ் ஒருவனே.

”இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன், இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்” என்று குர்ஆனில் (5:3) சொல்கிறான் அல்லாஹ்.  இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன் வந்த இறைத்தூதர்களுக்கோ அவர்களுக்கு அளிக்கப்பட்ட வேதங்களிலோ இப்படி ஒரு அறிவிப்பை அல்லாஹ் செய்யவில்லை.  அப்படியென்றால், முந்தைய இறைத்தூதர்களின் காலத்தில் மார்க்கம் நிறைவு செய்யப் பட்டிருக்கவில்லை.  எனவே அடுத்தடுத்து வந்த இறைத்தூதர்களின் மூலம் இறைச் சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தன.  இறுதி வேதம் குர்ஆன் மூலம் இஸ்லாம் முழுமைப் படுத்தப் பட்டு விட்டது.

"நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை இறக்கி வைத்தோம்.  நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்" (குர்ஆன் 15:9)

இவ்வாறு, குர்ஆனை அருளிய அல்லாஹ்வே அதனை பாதுகாக்கவும் பொறுப்பேற்ற பிறகு, அல்லாஹ்வின் படைப்பான ஷைத்தானால்  அதை ஒருபோதும் சிதைக்க முடியாது.  அல்லாஹ் நாடினால், இஸ்லாம் அதன் தூய வடிவில் இறுதி நாள் வரை நிலைத்திருக்கும்.  

அசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்!

அசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது.  கீழ்க்காணும் திருமறை வசனங்களை...