Tuesday, September 28, 2010

இட ஒதுக்கீடு தீர்வாகுமா?

இந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று! - சவால்களும் தீர்வுகளும்! (தொடர் - பகுதி 2)


ந்தியாவில் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் மற்ற சமுதாயத்தினரைக் காட்டிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தை முன்னேற்றுவதற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் ஆகியவை பரிந்துரைத்திருக்கின்றன.
 
சிறுபான்மையினருக்கு 15% வரை இடஒதுக்கீடு கொடுக்க இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்திலும் விதிமுறைகள் இருக்கின்றனவாம்.

கமிஷன் அறிக்கைகள் வெளியானபிறகு கிட்டத்தட்ட எல்லா இந்திய இஸ்லாமிய அமைப்புகளுமே முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், போராட்டம், பேரணி, மாநாடு என நடத்திக் கொண்டுள்ளன. குறிப்பாக தமிழக இஸ்லாமிய அமைப்புகள் இக்கோரிக்கைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்தால் சமுதாய முன்னேற்றத்திற்கு இடஒதுக்கீட்டை விட்டால் வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அரசியல்வாதிகளும் தங்கள் மனோநிலை, அரசியல் சூழல், நெருங்கி வரும் தேர்தல் போன்ற காரணிகளுக்கேற்ப ஏதாவது அறிக்கைகள் விடுவதும் ஒப்புக்குச் சப்பாணியாக சில திட்டங்களை அறிவிப்பதும் பிறகு அதை திரும்பப் பெறுவதுமாக 'அரசியல்' பண்ணிக் கொண்டுள்ளனர்.


இந்தியாவின் சுதந்திரத்திற்காக பல தலைமுறைகளாக தமது மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட அதிகமாகவே உயிர்த்தியாகம் செய்து போராடிய முஸ்லிம் சமுதாயம் இன்றைய சுதந்திர இந்தியாவில் தமக்கான சலுகைகளைக் கோர முழு உரிமையும் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. இருப்பினும் சமுதாயத்தின் விருப்பப்படி இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டு விட்டால் அது சமுதாய முன்னேற்றத்திற்கு எந்த அளவிற்கு பயனளிக்கும் என்பதை அலசி ஆராய வேண்டியதும் அவசியம்!


இடஒதுக்கீட்டினால் இஸ்லாமிய சமுதாயத்திற்குக் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?


பொறியியல், மருத்துவம் போன்ற உயர்கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவர்களுக்கு சில இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுமானால், பள்ளிப்படிப்பில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற முஸ்லிம் மாணவர்கள் அதிக போட்டி இல்லாமல் மேற்கண்ட உயர்நிலை கல்வியைத் தொடர வாய்ப்பு ஏற்படும்.


அதேபோல, அரசு சார்ந்த பணியிடங்களில் குறிப்பிட்ட சதவிகிதம் முஸ்லிம்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படுமானால் அந்தந்தப் பணிகளுக்குத் தகுதியுடைய படித்த முஸ்லிம் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது சுலபமாகி விடும். அரசாங்க வேலை கிடைப்பது சுலபம் என்றால் அது படிப்பில் ஆர்வமின்றி இருக்கும் இளைஞர்களும் பட்டப்படிப்பு வரையாவது தொடர்ந்து படிக்க தூண்டுகோலாக இருக்கும். இதனால் சமுதாயத்தில் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகும். பள்ளிப்படிப்பைக்கூட சரிவர முடிக்காமல் வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடி பயணிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை ஓரளவிற்காவது குறையலாம்.


சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இரு பேராசிரியர்கள் இந்தியாவில் நடத்திய ஒரு ஆய்வில் அதிர்ச்சி தரும் ஒரு உண்மை வெளிப்பட்டது. (
http://www.satyamargam.com/673). இந்த ஆய்வுக்குழுவினர், பத்திரிக்கைகளில் வெளியான பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு விளம்பரங்களுக்கு வெவ்வேறு பெயர்களில் சுமார் 4,800 வேலை விண்ணப்பங்களைப் பல நிறுவனங்களுக்கும் அனுப்பினர். கிட்டத்தட்ட ஒரே அளவிலான தகுதிகளை உடைய விண்ணப்பங்களைத் தயாரித்து, அவற்றிற்கு உயர் சாதி, தாழ்ந்த சாதி மற்றும் முஸ்லிம் பெயர்களை இட்டு, அவற்றை இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அவர்கள் அனுப்பினர். இவற்றிற்கு வந்த பதில்கள்தான் இந்தியத் தனியார் தொழிற்துறை நிறுவனங்களிடையே சாதி, இன பாகுபாடுகளும் பாரபட்சமான மனப்போக்கும் எந்த அளவிற்குப் புரையோடிப் போயுள்ளது என்பதை வெளிப்படுத்தியது.

இவ்வாறு 'விண்ணப்பித்த' தலித் ஒருவர் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் வாய்ப்பு, கிட்டத்தட்ட அதேத் தகுதியை உடைய ஒரு உயர்சாதியினருக்குக் கிடைத்த வாய்ப்புகளில் மூன்றில் இரண்டு பங்குதான். முஸ்லிம் 'விண்ணப்பதாரர்களின்' நிலைமையோ இன்னும் மோசம். உயர்சாதி இந்துக்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் மூன்றில் ஒரு பங்கே முஸ்லிம்களுக்குக் கிடைத்தது.


அரசு சார்ந்த பணியிடங்களில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுமானால் இந்த அவலநிலைக்கு ஒரு தீர்வு பிறக்கலாம்.


நிற்க!


மேற்கண்ட சலுகைகளால் பலனடையக்கூடியவர்கள் பள்ளிக்கல்வியை முடித்து உயர்கல்வியைத் தொடர வாய்ப்பும் வசதியும் உள்ள மாணவர்களும், உயர்கல்வியை முடித்து உள்நாட்டிலேயே வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களும்தான்! சச்சார் கமிஷன் அறிக்கையின்படி முஸ்லிம்களில் 7.2 சதவிகிதத்தினர் மட்டுமே உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார்கள். அதிலும் 4 சதவிகிதத்தினர் மட்டுமே பள்ளிப்படிப்பைத் தாண்டி கல்லூரிக்குச் செல்கிறார்கள். பட்டமேற்படிப்பு படித்தவர்கள் வெறும் 1.2 சதவிகிதத்தினர் மட்டுமே. இடஒதுக்கீடு என்பது சுமார் 95% வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் நலிவடைந்த இஸ்லாமிய சமுதாயத்தின் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே பலனளிக்கக்கூடியது! அப்படியானால் பெரும்பான்மையான மற்றவர்களின் நிலை?


தொடர்ந்து அலசுவோம் இன்ஷா அல்லாஹ்.. 

Monday, September 27, 2010

இந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று! - சவால்களும் தீர்வுகளும்!

பகுதி 1 - கமிஷன் அறிக்கைகள் ஒலிக்கும் எச்சரிக்கை மணி!

வெள்ளையருக்கெதிரான சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கமாக அந்நியத்துணிகளை புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார் காந்திஜி. ஆனால் இந்திய முஸ்லிம் சமுதாயமோ அந்நியர்களின் மொழி மற்றும் அதனூடாக போதிக்கப்பட்ட கல்வியையும் புறக்கணித்து வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியது.

சுதந்திரப்போராட்ட வரலாற்றின் மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட பக்கங்களில் இதுபோன்ற இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் எண்ணற்ற தியாகங்கள் புதையுண்டிருப்பதைக் காணலாம். "இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது." என இல்லஸ்டிரேட்டட் வீக்லி 29-12-1975 தேதியிட்ட இதழில் எழுதினார் குஷ்வந்த்சிங்.

சுதந்திரம் கிடைத்து 63 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில் தியாக சமுதாயமான இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலையை ஒற்றை வார்த்தையில் சொல்வதென்றால், அவலம்! முஸ்லிம்கள் கல்வி மற்றும் பொருளாதார நிலையில் மற்ற சமூகங்களைக் காட்டிலும் மிகவும் பின்தங்கி இருப்பது அரசியல்வாதிகளுக்கும் சமுதாயத் தலைவர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் நன்கு தெரிந்த ஒன்றுதான். உதாரணத்திற்கு தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், வங்கக் கடற்கரையையொட்டிய சில மாவட்டங்களைத் தவிர மாநிலத்தின் பிறபகுதிகளில் வசிக்கும் பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கு அன்றாடம் வறுமைக் கோட்டுடன் ஒட்டி உறவாடும் வாழ்க்கைதான்! 2006-ல் ஆளூர் ஷாநவாஸ் தயாரித்த 'பிறப்புரிமை' என்ற ஆவணப்படத்தில் இந்த நிலையை தெளிவாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். [காண்க http://www.islamkalvi.com/media/pirappurimai/index.htm]

முஸ்லிம்களின் இந்த அவல நிலைக்கு புள்ளிவிவரங்களுடன் அரசாங்க முத்திரை பதித்து சான்றிதழ் வழங்கியிருக்கிறது சச்சார் கமிஷன் அறிக்கை. இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 13.4 சதவிகிதமாக இருக்கிறார்கள். ஆனால் அரசாங்கத்தின் பொறுப்பான பதவிகளில் 2 அல்லது 3 சதவிகிதத்தினர் மட்டுமே முஸ்லிம்கள். நாட்டின் நிர்வாக அமைப்பில் பங்குபெறுவதில் முஸ்லிம்கள் இவ்வாறு பின்தங்கியிருப்பதன் முக்கிய காரணம் கல்வித்துறையில் அவர்கள் வெகுவாக பின்தங்கியிருப்பதுதான் என்று சுட்டிக் காட்டுகிறது சச்சார் அறிக்கை. முஸ்லிம்களில் 7.2 சதவிகிதத்தினர் மட்டுமே உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார்கள். அதிலும் 4 சதவிகிதத்தினர் மட்டுமே பள்ளிப்படிப்பைத் தாண்டி கல்லூரிக்குச் செல்கிறார்கள். பட்டமேற்படிப்பு படித்தவர்கள் வெறும் 1.2 சதவிகிதத்தினர் மட்டுமே என அதிர்ச்சித் தகவல்களை அள்ளித் தருகிறது அவ்வறிக்கை. மேலும், கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் தலித்துகளைவிடவும் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள் என்ற குண்டையும் தூக்கிப் போடுகிறது சச்சார் அறிக்கை.

இந்திய முஸ்லிம்களில் 94.8 சதவிகிதத்தினர் வறுமைக்கோட்டுக் கீழ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் நகரங்களில் வசிக்கும் முஸ்லிம்களில் 28.3 சதவிகிதத்தினர் மிக மோசமான வறுமையில் வாழ்கிறார்கள்.. அல்ல.. வாடுகிறார்கள். நாடு முழுவதிலுமுள்ள சிறு நகரங்களில் தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் மாதவருவாயை விட முஸ்லிம்களின் மாத வருவாய் குறைவாக இருக்கிறது. நீதித்துறையில் தலித்துகளின் பங்கு 20 சதவிகிதமாக இருக்கிற போது முஸ்லிம்கள் பங்கு 7.8 சதவிகிதம் மட்டுமே. தலித்துகளில் 23 சதவிகிதத்தினருக்கு குழாய் குடிநீர் கிடைக்கையில் முஸ்லிமகளில் 19 சதவிகிதத்தினருக்கு மட்டுமே அது கிடைக்கிறது. தலித்துகளில் 32 சதவிகிதம் பேருக்கு ரேஷன் கார்டு இருக்கிறதென்றால் முஸ்லிம்களில் 22 சதவிகிதத்தினரே ரேஷன் கார்டு வைத்திருக்கின்றனர். பொதுத்துறை (7.2%) சுகாதாரத்துறை (4.4%) ரயில்வே துறை (4.5%) போன்ற பல்வேறு அரசு சார்ந்த துறைகளில் தலித்களைவிட முஸ்லிம்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது. முஸ்லிம் விவசாயிகளில் 2.1 சதவிகிதத்தினர்தான் சொந்தமாக டிராக்டர் வைத்திருக்கிறார்கள். ஒரு சதவிகிதத்தினர்தான் நிலத்திற்கு நீர்பாய்ச்ச பம்ப்செட் வைத்திருக்கிறார்கள்.

சச்சார் அறிக்கை குறிப்பிடும் இன்னொரு முக்கியமான விஷயம் முஸ்லிம்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப அரசியல் அதிகாரத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பதாகும். தற்போதைய நாடாளுமன்றத்தில் 543 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் முஸ்லிம்களின் மக்கள் தொகையான 13.4 சதவிகிதத்திற்கு சுமார் 70 - 75 முஸ்லிம் எம்.பி-க்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய முஸ்லிம் எம் பி-க்களின் எண்ணிக்கை 33 மட்டுமே! (அதில் எத்தனை பேர் இஸ்லாமிய சமுதாய நலனில் அக்கறை கொண்டவர்கள் என்பது வேறு விஷயம்!) மின்சாரம் இல்லாத கிராமங்களில் அதிகம் வாழ்பவர்கள் முஸ்லிம்களே. அதுபோல சேரிகளில் வாழ்பவர்களிலும் முஸ்லிம்களே அதிகம். விடுதலைப் போராட்டத்தில் தமது மக்கள் தொகையைவிட கூடுதலான விகிதாச்சாரத்தில் உயிர்த்தியாகம் செய்த சமுதாயத்தின் இன்றைய நிலை இது!

போதுமா புள்ளிவிவரங்கள்? இவ்வாறு இஸ்லாமிய சமுதாயம் குறித்து எச்சரிக்கை மணி ஒலிக்கப்படுவது முதன் முறை அல்ல. 1953ல் காகா கலேல்கர் கமிஷன், 1983 கோபல் சிங் கமிஷன், 1989 மண்டல் கமிஷன், 2006 சச்சார் கமிஷன், அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் என அனைத்து கமிஷன் அறிக்கைகளிலும் தவறாது இடம் பெறும் வாசகம் 'இந்திய இஸ்லாமிய சமுதாயம் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் மற்ற சமுதாயத்தினரைக் காட்டிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது' என்பதுதான்.

இந்த நிலையில் இஸ்லாமிய சமுதாயம் செய்ய வேண்டுவது என்ன? பின்தங்கியிருக்கும் சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் செலுத்தத் தேவையான ஏற்பாடுகள் என்னென்ன? இந்தப் பிரச்னைகளுக்கு இஸ்லாம் காட்டும் தீர்வுகள் என்ன?

தொடர்ந்து அலசுவோம் இன்ஷா அல்லாஹ்...

அசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்!

அசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது.  கீழ்க்காணும் திருமறை வசனங்களை...