Tuesday, September 28, 2010

இட ஒதுக்கீடு தீர்வாகுமா?

இந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று! - சவால்களும் தீர்வுகளும்! (தொடர் - பகுதி 2)


ந்தியாவில் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் மற்ற சமுதாயத்தினரைக் காட்டிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தை முன்னேற்றுவதற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் ஆகியவை பரிந்துரைத்திருக்கின்றன.
 
சிறுபான்மையினருக்கு 15% வரை இடஒதுக்கீடு கொடுக்க இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்திலும் விதிமுறைகள் இருக்கின்றனவாம்.

கமிஷன் அறிக்கைகள் வெளியானபிறகு கிட்டத்தட்ட எல்லா இந்திய இஸ்லாமிய அமைப்புகளுமே முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், போராட்டம், பேரணி, மாநாடு என நடத்திக் கொண்டுள்ளன. குறிப்பாக தமிழக இஸ்லாமிய அமைப்புகள் இக்கோரிக்கைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்தால் சமுதாய முன்னேற்றத்திற்கு இடஒதுக்கீட்டை விட்டால் வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அரசியல்வாதிகளும் தங்கள் மனோநிலை, அரசியல் சூழல், நெருங்கி வரும் தேர்தல் போன்ற காரணிகளுக்கேற்ப ஏதாவது அறிக்கைகள் விடுவதும் ஒப்புக்குச் சப்பாணியாக சில திட்டங்களை அறிவிப்பதும் பிறகு அதை திரும்பப் பெறுவதுமாக 'அரசியல்' பண்ணிக் கொண்டுள்ளனர்.


இந்தியாவின் சுதந்திரத்திற்காக பல தலைமுறைகளாக தமது மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட அதிகமாகவே உயிர்த்தியாகம் செய்து போராடிய முஸ்லிம் சமுதாயம் இன்றைய சுதந்திர இந்தியாவில் தமக்கான சலுகைகளைக் கோர முழு உரிமையும் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. இருப்பினும் சமுதாயத்தின் விருப்பப்படி இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டு விட்டால் அது சமுதாய முன்னேற்றத்திற்கு எந்த அளவிற்கு பயனளிக்கும் என்பதை அலசி ஆராய வேண்டியதும் அவசியம்!


இடஒதுக்கீட்டினால் இஸ்லாமிய சமுதாயத்திற்குக் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?


பொறியியல், மருத்துவம் போன்ற உயர்கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவர்களுக்கு சில இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுமானால், பள்ளிப்படிப்பில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற முஸ்லிம் மாணவர்கள் அதிக போட்டி இல்லாமல் மேற்கண்ட உயர்நிலை கல்வியைத் தொடர வாய்ப்பு ஏற்படும்.


அதேபோல, அரசு சார்ந்த பணியிடங்களில் குறிப்பிட்ட சதவிகிதம் முஸ்லிம்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படுமானால் அந்தந்தப் பணிகளுக்குத் தகுதியுடைய படித்த முஸ்லிம் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது சுலபமாகி விடும். அரசாங்க வேலை கிடைப்பது சுலபம் என்றால் அது படிப்பில் ஆர்வமின்றி இருக்கும் இளைஞர்களும் பட்டப்படிப்பு வரையாவது தொடர்ந்து படிக்க தூண்டுகோலாக இருக்கும். இதனால் சமுதாயத்தில் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகும். பள்ளிப்படிப்பைக்கூட சரிவர முடிக்காமல் வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடி பயணிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை ஓரளவிற்காவது குறையலாம்.


சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இரு பேராசிரியர்கள் இந்தியாவில் நடத்திய ஒரு ஆய்வில் அதிர்ச்சி தரும் ஒரு உண்மை வெளிப்பட்டது. (
http://www.satyamargam.com/673). இந்த ஆய்வுக்குழுவினர், பத்திரிக்கைகளில் வெளியான பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு விளம்பரங்களுக்கு வெவ்வேறு பெயர்களில் சுமார் 4,800 வேலை விண்ணப்பங்களைப் பல நிறுவனங்களுக்கும் அனுப்பினர். கிட்டத்தட்ட ஒரே அளவிலான தகுதிகளை உடைய விண்ணப்பங்களைத் தயாரித்து, அவற்றிற்கு உயர் சாதி, தாழ்ந்த சாதி மற்றும் முஸ்லிம் பெயர்களை இட்டு, அவற்றை இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அவர்கள் அனுப்பினர். இவற்றிற்கு வந்த பதில்கள்தான் இந்தியத் தனியார் தொழிற்துறை நிறுவனங்களிடையே சாதி, இன பாகுபாடுகளும் பாரபட்சமான மனப்போக்கும் எந்த அளவிற்குப் புரையோடிப் போயுள்ளது என்பதை வெளிப்படுத்தியது.

இவ்வாறு 'விண்ணப்பித்த' தலித் ஒருவர் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் வாய்ப்பு, கிட்டத்தட்ட அதேத் தகுதியை உடைய ஒரு உயர்சாதியினருக்குக் கிடைத்த வாய்ப்புகளில் மூன்றில் இரண்டு பங்குதான். முஸ்லிம் 'விண்ணப்பதாரர்களின்' நிலைமையோ இன்னும் மோசம். உயர்சாதி இந்துக்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் மூன்றில் ஒரு பங்கே முஸ்லிம்களுக்குக் கிடைத்தது.


அரசு சார்ந்த பணியிடங்களில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுமானால் இந்த அவலநிலைக்கு ஒரு தீர்வு பிறக்கலாம்.


நிற்க!


மேற்கண்ட சலுகைகளால் பலனடையக்கூடியவர்கள் பள்ளிக்கல்வியை முடித்து உயர்கல்வியைத் தொடர வாய்ப்பும் வசதியும் உள்ள மாணவர்களும், உயர்கல்வியை முடித்து உள்நாட்டிலேயே வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களும்தான்! சச்சார் கமிஷன் அறிக்கையின்படி முஸ்லிம்களில் 7.2 சதவிகிதத்தினர் மட்டுமே உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார்கள். அதிலும் 4 சதவிகிதத்தினர் மட்டுமே பள்ளிப்படிப்பைத் தாண்டி கல்லூரிக்குச் செல்கிறார்கள். பட்டமேற்படிப்பு படித்தவர்கள் வெறும் 1.2 சதவிகிதத்தினர் மட்டுமே. இடஒதுக்கீடு என்பது சுமார் 95% வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் நலிவடைந்த இஸ்லாமிய சமுதாயத்தின் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே பலனளிக்கக்கூடியது! அப்படியானால் பெரும்பான்மையான மற்றவர்களின் நிலை?


தொடர்ந்து அலசுவோம் இன்ஷா அல்லாஹ்.. 

Monday, September 27, 2010

இந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று! - சவால்களும் தீர்வுகளும்!

பகுதி 1 - கமிஷன் அறிக்கைகள் ஒலிக்கும் எச்சரிக்கை மணி!

வெள்ளையருக்கெதிரான சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கமாக அந்நியத்துணிகளை புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார் காந்திஜி. ஆனால் இந்திய முஸ்லிம் சமுதாயமோ அந்நியர்களின் மொழி மற்றும் அதனூடாக போதிக்கப்பட்ட கல்வியையும் புறக்கணித்து வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியது.

சுதந்திரப்போராட்ட வரலாற்றின் மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட பக்கங்களில் இதுபோன்ற இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் எண்ணற்ற தியாகங்கள் புதையுண்டிருப்பதைக் காணலாம். "இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது." என இல்லஸ்டிரேட்டட் வீக்லி 29-12-1975 தேதியிட்ட இதழில் எழுதினார் குஷ்வந்த்சிங்.

சுதந்திரம் கிடைத்து 63 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில் தியாக சமுதாயமான இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலையை ஒற்றை வார்த்தையில் சொல்வதென்றால், அவலம்! முஸ்லிம்கள் கல்வி மற்றும் பொருளாதார நிலையில் மற்ற சமூகங்களைக் காட்டிலும் மிகவும் பின்தங்கி இருப்பது அரசியல்வாதிகளுக்கும் சமுதாயத் தலைவர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் நன்கு தெரிந்த ஒன்றுதான். உதாரணத்திற்கு தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், வங்கக் கடற்கரையையொட்டிய சில மாவட்டங்களைத் தவிர மாநிலத்தின் பிறபகுதிகளில் வசிக்கும் பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கு அன்றாடம் வறுமைக் கோட்டுடன் ஒட்டி உறவாடும் வாழ்க்கைதான்! 2006-ல் ஆளூர் ஷாநவாஸ் தயாரித்த 'பிறப்புரிமை' என்ற ஆவணப்படத்தில் இந்த நிலையை தெளிவாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். [காண்க http://www.islamkalvi.com/media/pirappurimai/index.htm]

முஸ்லிம்களின் இந்த அவல நிலைக்கு புள்ளிவிவரங்களுடன் அரசாங்க முத்திரை பதித்து சான்றிதழ் வழங்கியிருக்கிறது சச்சார் கமிஷன் அறிக்கை. இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 13.4 சதவிகிதமாக இருக்கிறார்கள். ஆனால் அரசாங்கத்தின் பொறுப்பான பதவிகளில் 2 அல்லது 3 சதவிகிதத்தினர் மட்டுமே முஸ்லிம்கள். நாட்டின் நிர்வாக அமைப்பில் பங்குபெறுவதில் முஸ்லிம்கள் இவ்வாறு பின்தங்கியிருப்பதன் முக்கிய காரணம் கல்வித்துறையில் அவர்கள் வெகுவாக பின்தங்கியிருப்பதுதான் என்று சுட்டிக் காட்டுகிறது சச்சார் அறிக்கை. முஸ்லிம்களில் 7.2 சதவிகிதத்தினர் மட்டுமே உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார்கள். அதிலும் 4 சதவிகிதத்தினர் மட்டுமே பள்ளிப்படிப்பைத் தாண்டி கல்லூரிக்குச் செல்கிறார்கள். பட்டமேற்படிப்பு படித்தவர்கள் வெறும் 1.2 சதவிகிதத்தினர் மட்டுமே என அதிர்ச்சித் தகவல்களை அள்ளித் தருகிறது அவ்வறிக்கை. மேலும், கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் தலித்துகளைவிடவும் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள் என்ற குண்டையும் தூக்கிப் போடுகிறது சச்சார் அறிக்கை.

இந்திய முஸ்லிம்களில் 94.8 சதவிகிதத்தினர் வறுமைக்கோட்டுக் கீழ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் நகரங்களில் வசிக்கும் முஸ்லிம்களில் 28.3 சதவிகிதத்தினர் மிக மோசமான வறுமையில் வாழ்கிறார்கள்.. அல்ல.. வாடுகிறார்கள். நாடு முழுவதிலுமுள்ள சிறு நகரங்களில் தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் மாதவருவாயை விட முஸ்லிம்களின் மாத வருவாய் குறைவாக இருக்கிறது. நீதித்துறையில் தலித்துகளின் பங்கு 20 சதவிகிதமாக இருக்கிற போது முஸ்லிம்கள் பங்கு 7.8 சதவிகிதம் மட்டுமே. தலித்துகளில் 23 சதவிகிதத்தினருக்கு குழாய் குடிநீர் கிடைக்கையில் முஸ்லிமகளில் 19 சதவிகிதத்தினருக்கு மட்டுமே அது கிடைக்கிறது. தலித்துகளில் 32 சதவிகிதம் பேருக்கு ரேஷன் கார்டு இருக்கிறதென்றால் முஸ்லிம்களில் 22 சதவிகிதத்தினரே ரேஷன் கார்டு வைத்திருக்கின்றனர். பொதுத்துறை (7.2%) சுகாதாரத்துறை (4.4%) ரயில்வே துறை (4.5%) போன்ற பல்வேறு அரசு சார்ந்த துறைகளில் தலித்களைவிட முஸ்லிம்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது. முஸ்லிம் விவசாயிகளில் 2.1 சதவிகிதத்தினர்தான் சொந்தமாக டிராக்டர் வைத்திருக்கிறார்கள். ஒரு சதவிகிதத்தினர்தான் நிலத்திற்கு நீர்பாய்ச்ச பம்ப்செட் வைத்திருக்கிறார்கள்.

சச்சார் அறிக்கை குறிப்பிடும் இன்னொரு முக்கியமான விஷயம் முஸ்லிம்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப அரசியல் அதிகாரத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பதாகும். தற்போதைய நாடாளுமன்றத்தில் 543 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் முஸ்லிம்களின் மக்கள் தொகையான 13.4 சதவிகிதத்திற்கு சுமார் 70 - 75 முஸ்லிம் எம்.பி-க்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய முஸ்லிம் எம் பி-க்களின் எண்ணிக்கை 33 மட்டுமே! (அதில் எத்தனை பேர் இஸ்லாமிய சமுதாய நலனில் அக்கறை கொண்டவர்கள் என்பது வேறு விஷயம்!) மின்சாரம் இல்லாத கிராமங்களில் அதிகம் வாழ்பவர்கள் முஸ்லிம்களே. அதுபோல சேரிகளில் வாழ்பவர்களிலும் முஸ்லிம்களே அதிகம். விடுதலைப் போராட்டத்தில் தமது மக்கள் தொகையைவிட கூடுதலான விகிதாச்சாரத்தில் உயிர்த்தியாகம் செய்த சமுதாயத்தின் இன்றைய நிலை இது!

போதுமா புள்ளிவிவரங்கள்? இவ்வாறு இஸ்லாமிய சமுதாயம் குறித்து எச்சரிக்கை மணி ஒலிக்கப்படுவது முதன் முறை அல்ல. 1953ல் காகா கலேல்கர் கமிஷன், 1983 கோபல் சிங் கமிஷன், 1989 மண்டல் கமிஷன், 2006 சச்சார் கமிஷன், அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் என அனைத்து கமிஷன் அறிக்கைகளிலும் தவறாது இடம் பெறும் வாசகம் 'இந்திய இஸ்லாமிய சமுதாயம் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் மற்ற சமுதாயத்தினரைக் காட்டிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது' என்பதுதான்.

இந்த நிலையில் இஸ்லாமிய சமுதாயம் செய்ய வேண்டுவது என்ன? பின்தங்கியிருக்கும் சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் செலுத்தத் தேவையான ஏற்பாடுகள் என்னென்ன? இந்தப் பிரச்னைகளுக்கு இஸ்லாம் காட்டும் தீர்வுகள் என்ன?

தொடர்ந்து அலசுவோம் இன்ஷா அல்லாஹ்...

Sunday, June 06, 2010

ஒளி வீசும் 'இருண்ட காலம்' - குறும்படம்

பள்ளிச்சிறுவர்களை அரும்பொருள் காட்சியகத்திற்கு அழைத்துச் செல்லும் வரலாற்று ஆசிரியை அவர்களை சிறு சிறு குழுக்களாக பிரித்து அவர் சொல்லும் தலைப்பிற்கேற்ற பதிலை தயாரித்துக் கொண்டு வருமாறு கூறுகிறார்.

"உங்கள் ஒவ்வொரு குழுவிற்கும் வரலாற்றின் வெவ்வேறு காலக்கட்டங்களை பிரித்துத் தரப்போகிறேன்.  கேள்வி என்னவென்றால்,  'உங்களுக்குக் கொடுக்கப்பட்ட காலக்கட்டம், இன்றைய நவீன உலகிற்கு என்ன பங்களிப்பை வழங்கியிருக்கிறது?' என்பதுதான்"  என்று சொல்லும் ஆசிரியை, கிரேக்க, ரோம காலங்களுக்குப் பிறகான 'மத்திய கால'த்தை பெறப்போகும் குழுவிடம் "உங்களுக்குக் கிடைத்திருக்கும் 'மத்திய காலம்' ஒரு சவாலான காலக்கட்டம்.  ஏனெனில் இந்தக் காலத்தை வரலாற்றில் 'இருண்ட காலம்' என்று அழைக்கிறார்கள்" என்று சொல்லி அந்த மாணவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்து அனுப்புகிறார்.

நொந்த மனதுடன் அரும்பொருள் காட்சியகத்தின் 'மத்தியக் கால'ப் பிரிவைத் தேடிச் செல்லும் மாணவர்களுக்கு அங்கே ஆச்சரியம் காத்திருக்கிறது.   அங்கே அவர்கள் ஒரு மனிதரைச் சந்திக்கிறார்கள்.  ('காந்தி' படத்தில் நடித்த பென் கிங்ஸ்லி இந்தப் பாத்திரத்தில் தோன்றுகிறார்)  அவர் 'இருண்ட காலத்தில் அப்படி என்ன முக்கியமான கண்டுபிடிப்புகள் இருக்கப் போகிறது?' என்ற அலட்சிய மனோபாவத்தில் இருக்கும் மாணவர்கள், அது உண்மையில் இருண்ட காலம் அல்ல என்பதை தெளிவு படுத்துகிறார்.

மத்தியக்காலத்தில் வாழ்ந்த விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்பாளர்களுமான அல் ஜஸாரிஅல்ஹஸன் இப்னு ஹைத்தம், அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ், அபுல்காசிம் அல் ஜஹ்ராவி, மர்யம் அல் அஸ்துர்லாபி ஆகியோர் மாணவர்களின் கண் முன்னே தோன்றி அவர்களின் கண்டுபிடிப்புகளை விளக்குகிறார்கள்.

ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியிலிருந்து ஐரோப்பிய மறுமலர்ச்சி வரையிலான காலக்கட்டத்தையே 'மத்தியக் காலம்' என்று அழைக்கிறார்கள்.  இதை சில வரலாற்றாசிரியர்கள் 'இருண்ட காலம்' என குறிப்பிட்டிருக்கிறார்கள்.  உண்மையில் அது ஐரோப்பியர்களுக்குத்தான் இருண்ட காலமாக இருந்தது.  அதே காலத்தில் இஸ்லாமிய சமூகம் விஞ்ஞானத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தது.  ஏராளமான அறிவியல் கண்டுபிடிப்புகள் அந்தக் காலத்தில்தான் முஸ்லிம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப் பட்டன.


13 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இக்குறும்படம் '1001 Inventions' என்ற அமைப்பின் சார்பில் தயாரிக்கப் பட்டுள்ளது.  இதுவரை பல சர்வதேச விருதுகளையும் இப்படம் வென்றிருக்கிறது.

Wednesday, May 12, 2010

அறிவியலும் ஆன்மீகமும்!

நாத்திக அன்பர் ஒருவருடன் சமீபத்தில் நடந்த விவாதத்தின்போது, 'இறை நம்பிக்கை உடையவர்கள், அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள், அறிவியலுக்கு எதிரானவர்கள்.  ஆனால், நாத்திகர்களோ அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டவற்றை மட்டுமே ஏற்பார்கள்' என்ற ரீதியில் தன் வாதங்களை எடுத்து வைத்திருந்தார். அவரது இந்த இரண்டு வாதங்களுமே தவறு என்று எவ்வளவோ விளக்கியும் அவர் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.

"இஸ்லாம் அறிவியலுக்கு எதிரான மதமல்ல நண்பரே.  குர்ஆன் ஒரு அறிவியல் நூலல்ல என்றாலும், 'அத்தாட்சிகள்' என்ற முறையில் எத்தனையோ அறிவியல் உண்மைகள் அதில் சொல்லப்பட்டுள்ளன" என்றேன் நான்.

"உங்களைப் பற்றி தெரியாதா? எதையுமே குரானில் போட்டிருந்தால் ஏற்பீர்கள்.  குரானில் இல்லாவிட்டால் ஏற்க மாட்டீர்கள்.  இதில் என்ன அறிவியல் வாழுகிறது?" என்றார் அவர்.

"நண்பரே.  இஸ்லாம் பற்றி நீங்கள் தப்பும் தவறுமாக புரிந்து வைத்திருக்கிறீர்கள்.  இஸ்லாமியக் கொள்கைகளைப் பற்றி ஒரு முஸ்லிமின் கண்ணோட்டத்தில் விளக்கிச் சொல்ல நான் தயார். இஸ்லாமியக் கொள்கைகள் கற்பனையானவை என நீங்கள் செதுக்கி வைத்திருக்கும் மனப்பிம்பத்தினை தற்காலிகமாகவேனும் ஒதுக்கி வைத்து விட்டு, அந்த விளக்கங்களை தெரிந்துக் கொள்ள நீங்கள் தயாரா?"

"தேவையில்லை.  இஸ்லாம் குறித்து யார் எதிராக எழுதினாலும், அது இஸ்லாம் குறித்த போதிய விளக்கமின்மையால் எழுதப்பட்டது என்பது இஸ்லாமியர்களின் தட்டையான சிந்தனைகளில் ஒன்று. இதற்கு நீங்களும்  விதிவிலக்கல்ல. அதேபோல் குரான் கூறும் எதுவும் நிரூபிக்கப்பட்ட அறிவியலோடு மோதாது, அப்படி மோதியது என்றால் அது யூகமாக இருக்கும் என்பதும் உங்களின் தட்டையான சிந்தனைகளில் உள்ளது.   எனவே, உங்கள் விளக்கங்கள் தேவையில்லை.    நீங்கள் இஸ்லாமிய பிரச்சாரம் செய்வதற்கு இது இடமல்ல!"

அதோடு இந்த விவாதம் முடிவுக்கு வந்தது!

வேறு யாராவது இதுபோல எழுதியிருந்தார்களென்றால் எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டிருக்காது.  ஆனால் இந்த நாத்திக அன்பர்  'இஸ்லாமியர்களின் அடிப்படை நம்பிக்கையை தகர்ப்பதற்காகவே' தனது வலைத்தளத்தில் தொடர்க் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருப்பவர்!  அடக் கடவுளே!

இஸ்லாமியர்கள் என்றால் தட்டையான சிந்தனை உள்ளவர்கள் என்று இவரே முடிவு செய்து கொள்வாராம்.  ஒரு முஸ்லிமின் அடிப்படை நம்பிக்கை என்ன என்பதை ஒரு முஸ்லிமின் கண்ணோட்டத்தில் இவர் தெரிந்துக் கொள்ளகூட மாட்டாராம்.  ஆனால் அந்த முஸ்லிமின் அடிப்படை நம்பிக்கையை இவர் தகர்க்கப் போகிறாராம்.  எங்கே போய் முறையிடுவது?

'நீங்கள் இஸ்லாமிய பிரச்சாரம் செய்வதற்கு இது இடமல்ல' என்று அவர் முகத்திலடிப்பதுபோலச் சொன்னாலும் நான் அதை அப்படியே விட்டுவிடத் தயாராக இல்லை.  அவரது இன்னொரு பதிவில் விவாதத்தைத் தொடர்ந்தேன்.  அதைப் பற்றி அடுத்த பதிவில்..

Wednesday, January 13, 2010

இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள்: யாருக்கு யார் எதிரி?

இஸ்லாமின் அடிப்படைகளைப் பற்றிய சரியான புரிதல்கள் இல்லாமலேயே இஸ்லாமை 'அறிமுகம்' செய்ய முற்பட்ட தோழர் செங்கொடி, 'முதல் கோணல் முற்றிலும் கோணல்' என்ற பழமொழியை பத்திக்குப் பத்தி நிரூபித்து வருகிறார்.
"...மனித குலத்திற்கான அந்த இஸ்லாம் எனும் ஒரே மதம் உருவான சில கணங்களிலேயே சைத்தான் எனும் அல்லாவின் எதிரியால் சிதைவுக்கு உள்ளாக்கப்படுகிறது. பின்னர் தொடர்ந்து சைத்தானால் சிதைக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு அதனால் மனிதர்கள் மனம்போன போக்கில் பின்பற்றக்கூடிய நிலையானது. உருவாக்கித்தந்த ஆண்டவனே தான் உருவாக்கிய மதம் இப்படித்தான் அப்படி இல்லை என்று போதிப்பதற்காக இறைத்தூதர்களை அனுப்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டது. ஆனால் அவைகளும் சைத்தானின் வினையாக்கலுக்கு ஆட்பட்டு தனித்தனி மதங்களாக உருமாறி இறைத்தூதர்களையே கடவுளாக கொண்டாடும் நிலையாகி நிற்கிறது..." - செங்கொடி
படைப்பினங்கள் அனைத்தையும், சைத்தான் உட்பட, படைத்தவன் அல்லாஹ் ஒருவனே என்பது இஸ்லாமின் அடிப்படைகளுள் ஒன்று.  அல்லாஹ்வால் படைக்கப்பட்ட சைத்தான்   எப்படி அல்லாஹ்வுக்கே எதிரியாகி, அல்லாஹ் ஏற்படுத்திய மார்க்கத்தை சிதைக்க முடியும்?  

உண்மையில் ஷைத்தான் மனிதர்களுக்குத்தான் எதிரி.  குர்ஆன் இவ்வாறு சொல்கிறது:
"உண்மையில் ஷைத்தான் உங்களின் பகைவனாவான்.  ஆகையால் நீங்களும் அவனை உங்களின் பகைவனாகவே கருதுங்கள்.  அவன் தன்னைப் பின்பற்றுபவர்களைத் தனது வழியில் அழைத்துக் கொண்டிருப்பது அவர்கள் நரகவாசிகளுடன் இணைந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான்." (35:06)
 அதுபோல, 'அல்லாஹ் ஏற்படுத்திய மார்க்கங்கள் சைத்தானால் சிதைக்கப்பட்டன' என்பதும் தவறான கருத்துதான். இறைத்தூதர்களை அனுப்புதல், வேதங்களை வழங்குதல், மார்க்கத்தை ஏற்படுத்துதல், அதனை பாதுகாத்தல், அதில் மாற்றங்களை ஏற்படுத்துதல் ஆகிய அனைத்தையும் செய்யக் கூடியவன் அல்லாஹ் ஒருவனே.

”இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன், இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்” என்று குர்ஆனில் (5:3) சொல்கிறான் அல்லாஹ்.  இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன் வந்த இறைத்தூதர்களுக்கோ அவர்களுக்கு அளிக்கப்பட்ட வேதங்களிலோ இப்படி ஒரு அறிவிப்பை அல்லாஹ் செய்யவில்லை.  அப்படியென்றால், முந்தைய இறைத்தூதர்களின் காலத்தில் மார்க்கம் நிறைவு செய்யப் பட்டிருக்கவில்லை.  எனவே அடுத்தடுத்து வந்த இறைத்தூதர்களின் மூலம் இறைச் சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தன.  இறுதி வேதம் குர்ஆன் மூலம் இஸ்லாம் முழுமைப் படுத்தப் பட்டு விட்டது.

"நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை இறக்கி வைத்தோம்.  நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்" (குர்ஆன் 15:9)

இவ்வாறு, குர்ஆனை அருளிய அல்லாஹ்வே அதனை பாதுகாக்கவும் பொறுப்பேற்ற பிறகு, அல்லாஹ்வின் படைப்பான ஷைத்தானால்  அதை ஒருபோதும் சிதைக்க முடியாது.  அல்லாஹ் நாடினால், இஸ்லாம் அதன் தூய வடிவில் இறுதி நாள் வரை நிலைத்திருக்கும்.  

Sunday, January 10, 2010

இஸ்லாம்: அறிமுகம் இல்லாமல் ஒரு அறிமுகம்!

"பிரதமர் மன்மோகன் சிங்கை உங்களுக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறேன்"

"அடேடே...!  அறிமுகம் செய்து வைக்கும் அளவிற்கு உங்களுக்கு பிரதமரை தெரியுமா?"

"எனக்கு அவரைத் தெரியாது..  அவருக்கும் என்னைத் தெரியாது..  இருந்தாலும் , வாங்க அறிமுகப் படுத்தி விடுகிறேன்"

இந்த மொக்கை ஜோக்கைச் சொல்லி இந்தக் காலத்தில் ஒரு எல்.கே.ஜி குழந்தையைக் கூட சிரிக்க வைக்க முடியாது. ஆனால் இதைப்போன்ற ஒரு விஷயத்தை சீரியஸாக சொல்ல முயன்றிருக்கிறார் செங்கொடி.

கிபி ஆறாம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் மக்கா என்னும் நகரில் முகம்மது என்ற பெயர் கொண்ட உயர்குல வணிகரால் தொடங்கப்பட்ட மதம் இஸ்லாம். ஆனால் அவரைப்பின்பற்றும் இஸ்லாமியர்கள் அல்லது முஸ்லீம்கள் இதை இப்படி ஏற்றுக் கொள்வதில்லை.  அனைத்து ஆற்றல்களையும் தன்னகத்தே அடக்கிக்கொண்டுள்ள தங்களின் ஏக இறைவனான அல்லா களி மண்ணிலிருந்து முதல் மனிதனை படைத்தபோது, அந்த முதன் மனிதனிலிருந்து தொடர்ச்சியாக மனித குலத்தை உருவாக்க நினைத்தபோது, அப்படியான மனித குலத்திற்காக இறைவன் உண்டாக்கித்தந்ததுதான் இஸ்லாம் எனும் மதம் என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை. - செங்கொடி
அதாவது, முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டபோதே இஸ்லாம் தோன்றி விட்டது என்று முஸ்லிம்கள் நம்பிக் கொண்டிருப்பது உண்மையல்ல என்கிறார் செங்கொடி. 

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தன்னை ஒரு இறைத்தூதராக சொல்லிக் கொண்டது உண்மையல்ல;  மாறாக அவர்தான் இஸ்லாம் மதத்தின் ஸ்தாபகர் என்கிறார் செங்கொடி.

எனில், இறைவேதம் குர்ஆன் அல்லாஹ் அருளியது என்று முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னது உண்மையாக இருக்க முடியாது; அதை நபி (ஸல்) அவர்களே எழுதியிருக்க வேண்டும் என்பது செங்கொடியாரின் கருத்து.

கோடிக்கணக்கான முஸ்லிம்களின் நம்பிக்கையை மேற்கண்ட ஒரே வாக்கியத்தில் 'பொய்' என்று செங்கொடி மறுக்கிறார் என்றால்,
  • ஆதம் (அலை) முதல் நபி ஈசா (அலை) வரையிலான இறைத்தூதர்களின் வரலாறுகளை அவர் அறிந்திருக்கவில்லை
  • இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், குறிப்பாக, எதிரிகளால் கூட 'அவர் பொய்யர்' எனக் குற்றஞ்சாட்ட முடியாத அப்பழுக்கற்ற குணநலன்களைப் பற்றியும் செங்கொடி அறிந்திருக்கவில்லை.
  • "இது மனிதர்களால் எழுதப் பட்டிருக்கவே முடியாது" என்று சொல்லத்தக்க பல ஆதாரங்கள் குர்ஆனில் இருப்பதையும் அவர் அறிந்திருக்கவில்லை.
 இருந்தும், இஸ்லாமிய நம்பிக்கைகளின் அடிப்படையைக்கூட அறிந்திருக்காத தோழர் செங்கொடியின் பதிவின் தலைப்பு:  இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

கிபி ஆறாம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் மக்கா என்னும் நகரில் முகம்மது என்ற பெயர் கொண்ட உயர்குல வணிகரால் தொடங்கப்பட்ட மதம் இஸ்லாம். ஆனால் அவரைப்பின்பற்றும் இஸ்லாமியர்கள் அல்லது முஸ்லீம்கள் இதை இப்படி ஏற்றுக்கொள்வதில்லை. அனைத்து ஆற்றல்களையும் தன்னகத்தே அடக்கிக்கொண்டுள்ள தங்களின் ஏக இறைவனான அல்லா களிமண்ணிலிருந்து முதல் மனிதனை படைத்தபோது, அந்த முதன் மனிதனிலிருந்து தொடர்ச்சியாக மனித குலத்தை உருவாக்க நினைத்தபோது, அப்படியான மனித குலத்திற்காக இறைவன் உண்டாக்கித்தந்ததுதான் இஸ்லாம் எனும் மதம் என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை.
மனித குலத்திற்கான அந்த இஸ்லாம் எனும் ஒரே மதம் உருவான சில கணங்களிலேயே சைத்தான் எனும் அல்லாவின் எதிரியால் சிதைவுக்கு உள்ளாக்கப்படுகிறது. பின்னர் தொடர்ந்து சைத்தானால் சிதைக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு அதனால் மனிதர்கள் மனம்போன போக்கில் பின்பற்றக்கூடிய நிலையானது. உருவாக்கித்தந்த ஆண்டவனே தான் உருவாக்கிய மதம் இப்படித்தான் அப்படி இல்லை என்று போதிப்பதற்காக இறைத்தூதர்களை அனுப்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டது. ஆனால் அவைகளும் சைத்தானின் வினையாக்கலுக்கு ஆட்பட்டு தனித்தனி மதங்களாக உருமாறி இறைத்தூதர்களையே கடவுளாக கொண்டாடும் நிலையாகி நிற்கிறது. இப்படி அனுப்பப்பட்ட  அனேகம் அனேகம் தூதர்களில் முகம்மது தான் கடைசியாக வந்த தூதர் அதாவது நபி. இனி உலகம் உள்ளளவும் மனித குலம் வாழும் வரையிலும் அந்த முகம்மது நபி தான் இறுதித்தூதர், அவர் சொன்னதும் செய்ததும் தான் இஸ்லாமின் வேதமும் வழிகாட்டுதலும். இதுவும் முஸ்லீம்களின் நம்பிக்கை.
முஸ்லீம்களின் இந்த நம்பிக்கை வேதம் படித்த, மத ஆச்சாரங்களின்படி ஒழுகும் சில மேல்மட்ட முஸ்லீம்களிடம் மட்டும் இருப்பது, ஏனைய சாதாரணமானவர்களுக்கு இதெல்லாம் தெரியாது என்று யாரும் கருதிக்கொள்ளலாகாது. அடிமுதல் முடி வரை, ஏழையானாலும் பணக்காரனானாலும், நல்லவன் கெட்டவன் எனும் பேதமின்றி முஸ்லீம்கள் அனைவரிடமும் இந்த நம்பிக்கை நிலை கொண்டிருக்கும். இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கும் சமூகவியல் ஒழுங்குகளை முஸ்லீம்கள் எல்லோரும் கடைப்பிடிப்பார்கள் என்று சொல்லமுடியாது. இஸ்லாம் கூறும் மதச்சடங்குகளை எல்லோரும் ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால் முஸ்லீமாக இருப்பவர்கள் அனைவரும் மேற்கண்ட நம்பிக்கையை தவறாமல் கொண்டிருப்பார்கள் என அறுதியிட்டு சொல்லிவிடலாம். ஏனென்றால் இது தான் அந்த மதத்தின் அடிப்படை.
பிற மதங்களில் வேறொன்றிலிருந்து தங்களின் மதத்திற்கு மாறுபவர்களை அடையாளப்படுத்த சில சடங்குகளை செயல் வடிவங்களை கொண்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைப் பொருத்தவரை மேற்கண்ட நம்பிக்கைதான் வழிமுறை. அதை கண்டிப்பாக நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும், அப்படி ஏற்றுக்கொள்ளாதவரை ஒருவனை முஸ்லீமாக கருத மாட்டார்கள். “அல்லாவை தவிர வேறு ஆண்டவன் யாருமில்லை. முகம்மது நபி அல்லாவின் தூதர் தான்” இப்படி ஒருவன் நம்பிவிட்டால் போதும் அவன் முஸ்லீமாக ஆகிவிடுவான். இதனைத்தொடர்ந்து இன்னும் சில நம்பிக்கைகள் வருகின்றன. சொல்லப்போனால் தொடர்ந்து வரும் இந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் தான் மேற்கண்ட சூத்திரமே வடிவமைக்கப்பட்டுள்ளது.
௧) இதில் முதலில் வருவது ஆண்டவனின் சக்தி அல்லது அதிகாரம். ஆண்டவன் யாராலும் பெறப்படவில்லை, சுயம்பு என்பது எல்லோருக்கும் தெரியும், சுற்றிவழைத்து எல்லா மதங்களும் சொல்வது தான். ஆனால் இஸ்லாத்தின் விளக்கம் வேறானது, ஆண்டவனான அல்லாவைத்தவிர வேறு யாருக்கும் எதற்கும் எந்த சக்தியும் இல்லை என்பதுதான். ஒரு பொருளுக்கு ஒரு குறிப்பிட்ட ஆற்றல் இருக்கிறது என்றால் அது அல்லாவைத்தவிர வேறு எவற்றினாலும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அல்லாவின் உத்திரவை மீறி அது செயல்படவும் முடியாது. பிரபஞ்சம் முழுக்க நாம் காணும், காணாத; அறிந்த , அறியாத அனைத்தும் அல்லாவின் கட்டளையை ஏற்று செயல்படுத்தும் விதத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.
௨) மறைவானவற்றின் ஞானம். அதாவது இந்த உலகத்திலோ அல்லது பிரபஞ்சத்திலோ ஏதோ ஒன்று அல்லது அதைப்பற்றிய ஞானம் மனிதனுக்கு தெரியவில்லை என்றால் அது இல்லை என்று கூற முற்படுவதோ, ஆதாரம் உண்டா எனக்கேள்வி கேட்பதோ அல்லாவின் சமஸ்தானத்தில் மிக மிகக்கடுமையான தண்டனைக்குறிய குற்றமாகும். உதாரணமாக எதிர்காலத்தில் பூமியிலிருந்து ஒரு மிருகம் வெளிப்பட்டு மக்களுடன் பேசும் என்றால் அதை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஒரு மிருகம் வருமா? பரிணாமத்தில் அதற்கு வாய்ப்பிருக்கிறதா? பேசும் மிருகம் என்றால் அது சமூக வயப்பட்டிருக்கவேண்டுமே என்பன போன்ற சிந்தனைகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் அல்லாவைப்பற்றிய பயமற்ற காபீராக இருக்கவேண்டும். ஏனென்றால் அனைத்து ஞானங்களும் அறிந்தவன் அல்லா ஒருவனே. அல்லா இப்படிக்கூறியிருக்கிறான் என்று யாரேனும் கூறினால் அல்லா அப்படி கூறியிருக்கிறானா? என்று குரானின் பக்கங்களை நீங்கள் புறட்டிப்பார்க்கலாமே தவிர அதற்கு சாத்தியமிருக்கிறதா என்று நீங்கள் சிந்திக்கக்கூடாது. மொத்தத்தில் அல்லாவின் இருப்பையோ, ஆற்றலையோ நீங்கள் சந்தேகிக்கவே கூடாது.
௩) குரான். இது ஆண்டவனால் முகம்மதுக்கு வழங்கப்பட்ட வேதம். இதை நீங்கள் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். இதில் எந்த ஒரு முரண்பாட்டையும் நீங்கள் காணமுடியாது.  இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் மனிதன் வாழ்ந்தாலும் தங்களின் ஐயங்களை இதிலிருக்கும் ஆறாயிரத்துச் சொச்ச வாக்கியங்களுக்குள்ளிருந்துதான் தீர்த்துக்கொள்ளவேண்டும். இதற்கு வெளியே மனிதனுக்கு எந்த ஒரு தீர்வும் இல்லை. இதிலிருக்கும் எதிர்காலக் கணிப்புகள் அப்படியே புள்ளி மாறாமல் நிகழும். இதில் கூறப்பட்டிருக்கும் வரலாறுகள் அத்தனையும் அப்படியே நடந்தவை. எந்த மாறுதலோ திருத்தமோ தேவையில்லாத, அல்லா கூறியது போன்றே அப்படியே பாதுகாக்கப்படும் அதி அற்புத வேதம் திருக் குரான்.
மேலே கூறப்பட்ட நம்பிக்கைகள் அனைத்தும் ஒரு முஸ்லீமுக்கு கட்டாய அவசியமாகும். இதனால் தான் முஸ்லீம்கள் ஏனைய மதங்களை பின்பற்றுபவர்களை விட அதிகமான பற்றும் பிடிப்பும் நம்பிக்கையையும் தங்கள் மதத்தின் மீது கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கைகள் அவர்களுக்குள் ஆழமாக வேரோடியிருப்பதால் தான் இஸ்லாம் கூறும் ஒரு செய்திக்கு மாறாக ஒன்றை எவ்வளவு ஆதாரங்களுடன் நிரூபணமாக விளக்கினாலும் ஏற்றுக்கொள்ள பிடிவாதமாக மறுக்கிறார்கள். காரணம் அவர்கள் மனதில் சரியாக இருக்குமோ என்று சிறிய ஐயம் வந்தாலும் செத்த பிறகு ஆண்டாண்டு காலத்திற்கும் எண்ணெய்க்கொப்பரையில் வறுபட வேண்டியதிருக்கும். மறுபரிசீலனை என்ற வார்த்தையே இஸ்லாத்தின் அகராதியில் கிடையாது.
ஆனால், எந்த நம்பிக்கைகள் அவர்களின் மதத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பை ஏற்படுத்துகிறதோ அந்த நம்பிக்கைகள் முரண்பாடுகளின் தொடக்கமாகவும் இருக்கின்றன என்பது அவர்களுக்கு விளங்குவதில்லை. காரணம் எந்த முஸ்லீமும் அந்த நம்பிக்கைகளை உரசிப்பார்த்ததில்லை. அந்த நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்தியதில்லை. எல்லாவற்றையும் சிந்திப்பது இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டுள்ளது என்பவர்கள் கூட தங்கள் சிந்தனையை உள்வசமாய் இஸ்லாத்தை நோக்கி திருப்புவதில்லை. திருப்பினால் அவன் முஸ்லீமல்ல என இஸ்லாமியர்களால் தீர்ப்பளிக்கப்படுவது மட்டுமல்ல, ஊர்விலக்கம், சமூகப்புறக்கணிப்பு, பொருளாதாரத் தனிமைப்படுத்துதல் என்பவை தொடங்கி கொலை மிரட்டல் வரை எதிர்கொள்ள நேரிடும். சிலர் கொலை செய்யப்பட்டதும் உண்டு. அமெரிக்காவின் ஆமினா வதூத், கனடாவின் இர்ஷாத் மஞ்சி, எகிப்தின் நவ்வல் சதாவி, லெபனானில் சாதிக் ஜலால் அல் அஸ்ம், மஹ்தி அமில், பாகிஸ்தானின் தாரிக் அலி, சோமாலியாவின் ஹிர்ஸ் அலி இவர்களெல்லாம் இஸ்லாம் பற்றிய தங்களின் மாற்றுக்கருத்துகளால் கடுந்துன்பங்களுக்கு ஆளானவர்களில் சிலர். இவர்கலெல்லாம் இஸ்லாத்தை விட்டு விலகியவர்கலல்ல. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டே அதன் கொள்கைகளைப்பற்றிய தங்கள் ஐயங்களை வெளியிட்டவர்கள்.  தமிழகத்தில் தக்கலையில் கவிஞர் ரசூல் கடந்த சில ஆண்டுகளாக ஊர் விலக்கம் செய்யப்பட்டு சொந்தக்காரரின் மரணத்தில் கூட கலந்து கொள்ள இயலாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இவைகளெல்லாம் இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை பரிசீலிப்பதில்லை என்பதோடு மட்டுமல்லாது அப்படி பரிசீலிப்பவர்களையும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதற்கான எடுத்துக்காட்டுகள். ஆனாலும் மாற்றுக்கருத்துகளை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்பதாலேயே அவர்கள் சரியான இடத்தில் இருப்பதாகப் பொருளாகாது. சரியானதிலேயே தாங்கள் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் முஸ்லீம்களை நோக்கி கேள்விகள் தொடரும்….

இப்பதிவின் தொடக்கத்தில் உள்ள ஜோக்கை மீண்டும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள்!

Saturday, January 09, 2010

இஸ்லாமிய ஒருங்கிணைவை தடுக்க விரும்பும் பொதுவுடைமைவாதி!

செங்கொடி என்ற பொதுவுடைமைவாதி, இஸ்லாமியக் கொள்கைகளை பரிசீலனைச் செய்து எழுதும் பதிவுகளைப் பார்க்க நேர்ந்தது.

இந்தத்தொடர் இஸ்லாமியர்களின் மதச்சடங்குகளை, சட்டங்களை, வேத வசனங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு அதற்கு அவர்கள் தரும் விஞ்ஞான விளக்கங்கள் எப்படி போலியாக இருக்கின்றன என்பனவற்றை யும், இஸ்லாம் தோன்றிய அன்றைய அராபியாவின் அரசியல், சமூக, பொருளாதார, இறையியல் சூழல்களையும் பேசுவதன் மூலம் இஸ்லாம் என்ற மதத்தின் புனித சட்டகங்களை நீக்கி அதன் மெய்யான இருப்பை, உள்ளடக்கத்தை அடையாளப்படுத்தும் ஒரு முயற்சிதானேயன்றி வேறில்லை.
 என்கிறார் செங்கொடி.  இதை இவர் ஏன் செய்கிறாராம்?  அதற்கும் அவரே பதிலளிக்கிறார்.
இந்தியாவில் இந்துப்பாசிச வெறிக்கு அதிகம் பலியாவது இஸ்லாமியர்கள் தாம். அரசு பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படும்போதும் அவர்களின் மத அடையாளமே முன்னிருத்தப்படுகிறது. இதனாலும் அவர்கள் மதத்தின் தழுவலில் கட்டுண்டு கிடக்க ஏதுவாகிறது. இதனடிப்படையில் அரசியல் விழிப்புணர்வு என்ற பெயரில் மதரீதியில் ஆன்மீக இயக்கங்களின் பின்னால் அணிதிரள்வது அதிகரிக்கிறது. ஒரு வகையில் இது இந்துபாசிசங்களுக்கும் தேவையாகவும் உதவியாகவும் இருக்கிறது. அந்த வகையில் இந்துபாசிசங்களுக்கு உதவும் இஸ்லாமிய ஒருங்கிணைவை தடுத்து வர்க்க அடிப்படையில் சமூக போராட்டங்களில் அவர்களையும் இணைத்து முன்செல்லவேண்டிய அவசியமிருக்கிறது. அதற்கு அவர்களின் மத நம்பிக்கையை மதப்பிடிப்பை கேள்விக்குள்ளாக்குவது முன்நிபந்தனையாகிறது.
அதாவது, இஸ்லாமியர்கள் மத அடிப்படையில் ஒருங்கிணைந்து இருப்பதால்தான் இந்துப்பாசிச வெறிக்கு பலியாகிறார்களாம்.  இந்துப்பாசிச வெறியைத் தடுக்க வேண்டுமென்றால் இஸ்லாமியர்களின் ஒருங்கிணைப்பைத் தகர்த்து விட வேண்டுமாம். 

அதாவது, 'மாமரத்தில் மாம்பழம் காய்த்துத் தொங்குவதால்தான் போக்கிரிப்பசங்க அதன் மேல் கல்லெறிகிறார்கள்.  எனவே, அவர்கள் கல்லெறிவதைத் தடுக்க வேண்டுமென்றால் மாமரத்தை வெட்டி விட வேண்டும்' என்ற யோசனையை முன்வைத்திருக்கிறார் தோழர் செங்கொடி.

இது அவரது கட்டுரைத் தொடரின் 'நுழைவாயில்' பதிவில் கண்ட யோசனை.  தொடரின் மற்ற பதிவுகளிலும் இதுபோன்ற பல சுவாரஸ்யமான யோசனைகளை அவர் வெளிப்படுத்தியிருக்கக் கூடும்.  படித்து விட்டு சொல்கிறேன், இன்ஷா அல்லாஹ்.

Tuesday, January 05, 2010

இஸ்லாம் எதிர் கொள்ளும் விமர்சனங்கள்!

தமிழில் வலைப்பதிவுகள் வரத்தொடங்கிய ஆரம்பக் காலத்திலேயே 'இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சார' வலைப்பதிவுகளும் முளைத்து விட்டன.  இந்த இஸ்லாமிய விமர்சகர்களில் பிரதான இடத்தை வகிப்பவர்கள் பார்ப்பனீய / இந்துத்துவ ஆதரவாளர்கள்.  அதற்கடுத்த இடங்களில் இருப்பவர்கள் கிருஸ்துவ பதிவர்கள், கம்யூனிஸ்டுகள், நாத்திகவாதிகள், பெண்ணுரிமைவாதிகள் போன்றோர்.

ஆனால், இவர்கள் வெளிப்படுத்தும் தங்களைப் பற்றிய அடையாளங்கள் உண்மையானதாகத் தான் இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.  நாத்திகப் போர்வையிலோ,  கிருஸ்துவப் பெயரிலோ எழுதுபவர் உண்மையில் இந்துத்துவவாதியாக இருக்கலாம். 

விமர்சகர்களின் பிண்ணனி எதுவாக இருந்தாலும் இஸ்லாம் பற்றிய அவர்களின் விமர்சனங்களில் ஒரு பொதுத் தன்மையைக் காணலாம்.  இஸ்லாமிலுள்ள குறைபாடுகள் என இவர்கள் கருதும் விஷயங்களைப் பற்றி பக்கம் பக்கமாக எழுத சளைக்காத இவர்கள், அந்தக் குறைகளைக் களைய அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் மதம் அல்லது கொள்கை என்ன வழி காட்டுகிறது என்பதைச் சொல்வதேயில்லை.

கடைவீதியில் இரண்டு பேர் மருந்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  முதலாமவர் 'இன்னின்ன வியாதிகளை எனது மருந்து குணப் படுத்தும்' என்று சொல்லி விற்பனை செய்கிறார்.  இன்னொருவரோ, 'அய்யய்யோ,  அந்த ஆளோட மருந்தை வாங்காதீங்க.  அதுல அந்த குறை இருக்கிறது.. இந்த குறை இருக்கிறது..  அதனால என்னோட மருந்தை வாங்கிட்டுப் போங்க' என்று சொன்னால் அதில் நேர்மை இல்லை.  முதலாமவரின் மருந்து குறைபாடுடையது என்பதால் மட்டுமே இரண்டாமவரின் மருந்து சிறந்ததாக ஆகி விடாது.  முதலாம் மருந்தை விட தனது மருந்தில் என்ன சிறப்புத் தன்மைகள் இருக்கின்றனவோ அவற்றை எடுத்துச் சொல்லி விற்பதே முறை.

இஸ்லாமை விமர்சிக்கும் பெரும்பாலானோர் இந்த இரண்டாம் (தர) மருந்து வியாபாரியாகவே இருக்கின்றனர்.

அசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்!

அசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது.  கீழ்க்காணும் திருமறை வசனங்களை...