Wednesday, May 25, 2005

வணிகம் என்றொரு வணக்கம்!

மனிதர்கள் அனைவரும் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பொருளீட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தொழில், வணிகம், உத்தியோகம் ஆகியவை பொருளீட்ட நாம் மேற்கொள்ளும் சில வழிமுறைகள். இம்மூன்றில் நாம் எதை தேர்ந்தெடுத்தாலும் அதிலிருந்து நமக்கு வருமானம் கிடைக்கிறது. சிலவற்றில் அதிகம் கிடைக்கும். சிலவற்றில் குறிப்பிட்ட தொகையே கிடைக்கும். சிலவற்றில் சில நேரங்களில் நட்டம் கூட ஏற்படலாம். வருமானம் பெற்றுத்தரும் வழிமுறைகள் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்தால் இவற்றுக்கிடையில் வேறு வித்தியாசங்கள் அதிகம் இல்லை.

ஆனால் இஸ்லாத்தின் பார்வையில் இந்த வழிமுறைகள் எல்லாம் சமமானவை அல்ல. இஸ்லாம் இவற்றுள் பெரும்பாலானவற்றை ஆகுமாக்கி வைத்து, சிலவற்றை தடுத்திருக்கிறது. குர்ஆன் கூறுகிறது: "வணிகத்தை ஆகுமாக்கி வைத்த இறைவன் வட்டியை தடுத்து விட்டான்" (2:275). அதோடு மட்டுமல்லாது, இஸ்லாம் தொழில், வணிகம் ஆகியவற்றை வெறும் வருமானம் பெற்றுத்தரும் வழிமுறையாக மட்டும் பாராது, அதற்கும் அதிகமான ஒரு உயர்ந்த அந்தஸ்தை அளிக்கிறது.

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உண்மை பேசி நாணயத்துடன் நடந்து கொள்ளும் ஒரு வணிகர், மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீத் (இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தோர்) ஆகியோருடன் இருப்பார்" (அறிவிப்பாளர்: அபூஸயீத் குத்ரீ (ரலி) - நூல்: திர்மிதி)

இத்தகைய உயர்ந்த அந்தஸ்து கொடுக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது, இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் வணிகம் என்பது வெறுமனே பொருளீட்டும் வழி மட்டுமல்லாது, அதற்கும் மேலாக சமுதாயத்திற்கு மிக பயனளிக்கும் ஒரு சேவையும் கூட என்பது தெரிகிறது. இத்தகைய உயரிய அந்தஸ்திற்கு தகுதியுடையதாக ஆக வேண்டுமென்றால் அந்த வணிகம் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்ற வழிமுறைகளையும் இஸ்லாம் சொல்லித்தருகிறது.

இன்றைய சூழ்நிலையில் வணிகம் என்பது பண நிர்வாகம், பொருளாதாரம், தயாரிப்பு, சந்தைப்படுத்தல், மனிதவள மேலாண்மை, போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாக, மிக சிக்கலானதாக இருக்கிறது. தொலைத்தொடர்பு வசதிகள், கணினி போன்ற வணிக நிர்வாகத்திற்கு தேவையான துறைகள் வெகுவாக முன்னேற்றம் அடைந்துள்ளன. நிர்வாகிகளாக ஆக விரும்புபவர்கள் பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டியுள்ளது.

இங்கு சில கேள்விகள் எழலாம்.

(1) 14 நூற்றாண்டுகளுக்கு முன் கூறப்பட்ட, அதற்குப்பின் மாற்றப்படாத இஸ்லாமிய நெறிமுறைகளும் போதனைகளும் இன்றைய காலக்கட்டதிற்கும் பொருந்துமா?

(2) வணிகம் நடத்துவதற்கு தேவையான மேற்கண்ட எல்லா துறைகளிலும் இஸ்லாம் வழிகாட்டுதல்களை தந்துள்ளதா?

(3) தொழிற்துறை நிர்வாகம் குறித்து பல்கலைக்கழகங்கள் போதிக்கும் பாடங்கள் இஸ்லாத்திற்கு ஏற்புடையானவை அல்லவா?

இந்த கேள்விகளுக்கு விடை அறிவதற்கு இஸ்லாமிய கொள்கைகள் குறித்த சில அடிப்படையான கருத்துக்களை புரிந்து கொள்வது நல்லது.

முதலாவதாக, இஸ்லாமின் கொள்கைகள் அனைத்துமே ஒரு மனிதனை நல்லொழுக்கங்களைக் கொண்ட ஒரு சிறந்த மனிதனாக ஆக்கும் நோக்கம் கொண்டவை. இறுதித்தூதர் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் "நல்ல ஒழுக்கங்களை பரிபூரணமாக்குவதற்காகவே நான் அனுப்பப்பட்டேன்." தொழுகை முதற்கொண்ட எல்லா இஸ்லாமிய கடமைகளும்கூட மனிதர்களை நல்ல ஒழுக்கத்தின்பால் இட்டுச் செல்லும் பயிற்சிகளே.

இஸ்லாம் கற்றுத்தரும் இத்தகைய நற்பண்புகளைப் பெற்ற ஒரு சிறந்த மனிதர், ஒரு சிறந்த வணிகராகவும் திகழ்வதில் வியப்பேதும் இல்லை. இந்த வணிகர்,
- நாணயமிக்கவராக இருப்பார்.
- பொய் சொல்ல மாட்டார். மோசடி செய்ய மாட்டார்.
- தான் தொடர்பு கொள்பவர்களுடன் மென்மையுடனும் நற்பண்புகளுடனும் நடந்து கொள்வார்.
- அளவையிலும் நிறுத்தலிலும் நேர்மையுடன் நடந்து கொள்வார்.
- தான் விற்கும் பொருளில் குறைகள் ஏதேனும் இருந்தால் அதை மறைக்காமல் தெளிவாக எடுத்துரைத்து விற்பார்.
- மக்களுக்கு தேவைப்படும் பொருட்களை பதுக்கி வைக்க மாட்டார்.

இத்தகைய வணிகருடன் வியாபாரம் செய்ய யார்தான் விரும்ப மாட்டார்கள்? வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் ஒரு வணிகர் தனது தொழிலில் வெற்றியடைய தடையென்ன இருக்கப் போகிறது? இஸ்லாம் சொல்லித்தரும் இந்த நெறிமுறைகள் 14 நூற்றாண்டுகளுக்கு முன் சொல்லப்பட்டதாக இருந்தாலும் எல்லா காலக்கட்டத்திற்கும் பொருந்துபவையே!

இரண்டாவதாக, மார்க்க அறிஞர்கள் இஸ்லாமின் கொள்கைகளை ஒரு கட்டிட வரைபடத்திற்கு ஒப்பிடுகிறார்கள். வரைபடத்தை அடிப்படையாக கொண்டு கட்டிடம் எழுப்பப்படுகிறது. ஆனால் வரைபடமே கட்டிடமல்ல. அதுபோல, இஸ்லாமின் கொள்கைகள் முஸ்லிம்கள் தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் தேவையான ஒரு அடிப்படைத்திட்டம்.

வணிகம் நடத்துவதற்கு தேவையான எல்லா துறைகளிலும் இஸ்லாம் வழிகாட்டுதல்களை தந்துள்ளதா? என்ற கேள்விக்கு மௌலானா சையித் அபுல் அ'லா மௌதூதி (ரஹ்) அவர்கள் திருமறையைப்பற்றி கூறிய ஒரு கருத்து, பொருத்தமான பதிலாக இருக்கிறது. "குர்ஆன் மனிதனுக்கு வழிகாட்டுகிறது என்பதன் பொருள், இஸ்லாமிய வாழ்க்கை முறையைச் செயல்படுத்துவதற்காக வாழ்வின் ஒவ்வொரு சின்னஞ்சிறு அம்சம் குறித்தும் விரிவான சட்ட திட்டங்களையும் விதிமுறைகளையும் வகுத்துத் தருகிறது என்பதல்ல. மாறாக வாழ்க்கையின் ஒவ்வொரு துறை குறித்தும் அதற்குள்ள எல்லைகளையும் வரம்புகளையும் நிர்ணயித்து, இறைவனின் விருப்பத்துக்கு இசைவாக அத்துறைகளை எவ்வாறு அமைக்க வேண்டும், எவ்வாறு நிர்மாணிக்க வேண்டும் என்று அறிவிக்கக் கூடிய கைகாட்டிகளை ஆங்காங்கே அது ஊன்றி வைக்கிறது"

மூன்றாவதாக, நல்லொழுக்க போதனைகள் இரண்டு வகைப்படும். செய்யவேண்டியவற்றை பட்டியலிட்டு அவற்றை மட்டுமே செய்யும்படி போதிப்பது, அல்லது செய்யக்கூடாதவற்றை பட்டியலிட்டு அவற்றிலிருந்து விலகி இருக்கும்படி அறிவுறுத்துவது ஆகியவையே அவை. இஸ்லாம் இந்த இரண்டு வகை போதனைகளை செய்திருந்தாலும், செய்யக்கூடாதவற்றை அது தெளிவாக வரையறுத்துள்ளதுபோல் செய்யவேண்டிய அனைத்து விஷயங்களையும் அது பட்டியலிடவில்லை என்றே மார்க்க அறிஞர்கள் கருதுகின்றனர். இதன் பொருள் என்னவெனில், எவையெல்லாம் இஸ்லாமில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ தடுக்கப்படவில்லையோ அத்தகைய செயல்களில் ஈடுபடுவது குற்றமல்ல என்பதே.

இதை ஒரு சிறிய உதாரணம் மூலமாக விளக்கலாம். சில நாடுகளில் வாகனமோட்டிகள் சாலைகளில் "U" போல திரும்புவதற்கு உரிய இடங்களில் அதற்கான சாலைக்குறியீட்டு பலகைகள் வைத்திருப்பார்கள். அந்த இடங்களில் மட்டுமே "U" போல திரும்ப முடியும். வேறு சில நாடுகளில் சாலைகளில் எங்கெல்லாம் "U" போல திரும்ப அனுமதி இல்லையோ அந்த இடங்களில் அதற்கான குறியீட்டு பலகைகள் வைத்திருப்பார்கள். அந்த குறிப்பிட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் "U" போல திரும்பலாம் என்பதுதான் இதன் பொருள். இஸ்லாமிய கொள்கைகள் இந்த இரண்டாம் வகையைப் போன்றவை.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்த்தால், இஸ்லாம் மனித வாழ்வுக்கு தேவையான அடிப்படையான நெறிமுறைகளை சொல்லித்தருவதோடு நின்று விடாமல், தனி மனிதருக்கும் சமுதாயத்திற்கும் தீமை தருபவை என விலக்கி வைக்கப்பட்டவைகளை தவிர மற்ற காரியங்களெல்லாம் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையே என்ற பரந்த கண்ணோட்டத்தையும் வழங்குகிறது. எனவே, இஸ்லாமிய கொள்கைகளுக்கு முரண்படாத தொழில் நிர்வாக நுணுக்கங்களை பல்கலைக்கழகங்களில் பயிலுவதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதும் இஸ்லாத்திற்கு ஏற்புடையதே!

மேலும், திருமறையும், இறைத்தூதரும் காட்டித்தந்த வழியில் தமது வணிகத்தை நடத்திவரும் ஒரு வணிகர் மனதில் இறையச்சம் எப்போதும் நிரம்பி இருக்கும். எந்த ஒரு செயலையும் துவங்குமுன் "இது இறைக்கட்டளைக்கு ஏற்புடையதா, மாற்றமானதா" என கண்டறிய அவரது மனம் விழையும். "வியாபாரமோ, கொடுக்கல் வாங்கலோ அல்லாஹ்வை திக்ரு செய்வதைவிட்டும் (ஈமான் உள்ள) அம்மனிதர்களை திருப்பி விடா" (24:37) என்ற திருமறை வசனத்திற்கு இலக்கணமாக அவர் திகழ்வார். இந்த சூழ்நிலையில் வணிகமும் ஒரு வணக்கமாகவே ஆகிவிடுகிறது.

-----
"நம்பிக்கை" மே 2005 இதழில் வெளியான கட்டுரை..

No comments:

அசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்!

அசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது.  கீழ்க்காணும் திருமறை வசனங்களை...