Wednesday, January 13, 2010

இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள்: யாருக்கு யார் எதிரி?

இஸ்லாமின் அடிப்படைகளைப் பற்றிய சரியான புரிதல்கள் இல்லாமலேயே இஸ்லாமை 'அறிமுகம்' செய்ய முற்பட்ட தோழர் செங்கொடி, 'முதல் கோணல் முற்றிலும் கோணல்' என்ற பழமொழியை பத்திக்குப் பத்தி நிரூபித்து வருகிறார்.
"...மனித குலத்திற்கான அந்த இஸ்லாம் எனும் ஒரே மதம் உருவான சில கணங்களிலேயே சைத்தான் எனும் அல்லாவின் எதிரியால் சிதைவுக்கு உள்ளாக்கப்படுகிறது. பின்னர் தொடர்ந்து சைத்தானால் சிதைக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு அதனால் மனிதர்கள் மனம்போன போக்கில் பின்பற்றக்கூடிய நிலையானது. உருவாக்கித்தந்த ஆண்டவனே தான் உருவாக்கிய மதம் இப்படித்தான் அப்படி இல்லை என்று போதிப்பதற்காக இறைத்தூதர்களை அனுப்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டது. ஆனால் அவைகளும் சைத்தானின் வினையாக்கலுக்கு ஆட்பட்டு தனித்தனி மதங்களாக உருமாறி இறைத்தூதர்களையே கடவுளாக கொண்டாடும் நிலையாகி நிற்கிறது..." - செங்கொடி
படைப்பினங்கள் அனைத்தையும், சைத்தான் உட்பட, படைத்தவன் அல்லாஹ் ஒருவனே என்பது இஸ்லாமின் அடிப்படைகளுள் ஒன்று.  அல்லாஹ்வால் படைக்கப்பட்ட சைத்தான்   எப்படி அல்லாஹ்வுக்கே எதிரியாகி, அல்லாஹ் ஏற்படுத்திய மார்க்கத்தை சிதைக்க முடியும்?  

உண்மையில் ஷைத்தான் மனிதர்களுக்குத்தான் எதிரி.  குர்ஆன் இவ்வாறு சொல்கிறது:
"உண்மையில் ஷைத்தான் உங்களின் பகைவனாவான்.  ஆகையால் நீங்களும் அவனை உங்களின் பகைவனாகவே கருதுங்கள்.  அவன் தன்னைப் பின்பற்றுபவர்களைத் தனது வழியில் அழைத்துக் கொண்டிருப்பது அவர்கள் நரகவாசிகளுடன் இணைந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான்." (35:06)
 அதுபோல, 'அல்லாஹ் ஏற்படுத்திய மார்க்கங்கள் சைத்தானால் சிதைக்கப்பட்டன' என்பதும் தவறான கருத்துதான். இறைத்தூதர்களை அனுப்புதல், வேதங்களை வழங்குதல், மார்க்கத்தை ஏற்படுத்துதல், அதனை பாதுகாத்தல், அதில் மாற்றங்களை ஏற்படுத்துதல் ஆகிய அனைத்தையும் செய்யக் கூடியவன் அல்லாஹ் ஒருவனே.

”இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன், இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்” என்று குர்ஆனில் (5:3) சொல்கிறான் அல்லாஹ்.  இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன் வந்த இறைத்தூதர்களுக்கோ அவர்களுக்கு அளிக்கப்பட்ட வேதங்களிலோ இப்படி ஒரு அறிவிப்பை அல்லாஹ் செய்யவில்லை.  அப்படியென்றால், முந்தைய இறைத்தூதர்களின் காலத்தில் மார்க்கம் நிறைவு செய்யப் பட்டிருக்கவில்லை.  எனவே அடுத்தடுத்து வந்த இறைத்தூதர்களின் மூலம் இறைச் சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தன.  இறுதி வேதம் குர்ஆன் மூலம் இஸ்லாம் முழுமைப் படுத்தப் பட்டு விட்டது.

"நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை இறக்கி வைத்தோம்.  நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்" (குர்ஆன் 15:9)

இவ்வாறு, குர்ஆனை அருளிய அல்லாஹ்வே அதனை பாதுகாக்கவும் பொறுப்பேற்ற பிறகு, அல்லாஹ்வின் படைப்பான ஷைத்தானால்  அதை ஒருபோதும் சிதைக்க முடியாது.  அல்லாஹ் நாடினால், இஸ்லாம் அதன் தூய வடிவில் இறுதி நாள் வரை நிலைத்திருக்கும்.  

1 comment:

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பு சகோதரர் சலாஹுத்தின் தங்களுடைய வாதங்களை சமீபத்தில் செங்கொடி தளத்தில் படித்தேன். மிக அழகாகவும் மற்றும் பொறுமையாகவும் தங்களின் வாதங்களை எடுத்து வைக்கின்றீர்கள் அல்ஹம்துலில்லாஹ். தொடர வேண்டும் தங்களின் பணி. தங்களை மட்டுமே மேதாவியாக நினைத்து கொண்டிருக்கும் செங்கொடி போன்றவர்கள் கூடிய விரைவில் மக்கள் முன் பொது விவாதத்தில் அம்பலப்படத்தான் போகின்றார்கள் இன்ஷா அல்லாஹ்.

அசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்!

அசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது.  கீழ்க்காணும் திருமறை வசனங்களை...