Thursday, July 14, 2005

குண்டு மனிதருக்கு வந்த கோபம்!

'விர்'ரென்று வேகமாக வந்து வளாகத்துக்குள் நுழைந்து 'கிரீச்'சென்று நின்றது அந்த கருப்பு வண்ணக் கார்.

ஓட்டுனர் இருக்கையிலிருந்து இறங்கிய அந்தக் குண்டுப்பிறவி படாரென்று கதவை மூடிவிட்டு இரண்டு இரண்டு படிக்கட்டுகளாக தாவி நான்கே எட்டில் முதன்மை வாயிலை அடைந்தது. அரங்குக்குள் நுழைந்து மூச்சிரைக்க, கோபம் கொப்புளிக்கும் கண்களால் இங்குமங்கும் துழாவி, மேற்கே முகம் பார்த்து நின்றிருந்த டிஷர்ட் ஆசாமியை நெருங்கி, 'மொத்'தென்று விட்டார் ஒரு குத்து.

டிஷர்ட் ஆசாமியின் உதட்டோரத்தில் இரத்தம்...!

'உனக்கு என்ன துணிச்சல்?' என ஆவேசமாக கத்தினார். சுற்றி இருந்தவர்கள் குண்டு மனிதரையும் டிஷர்ட் ஆசாமியையும் பிரித்து குண்டு மனிதரை குண்டுகட்டாக வெளியே தூக்கிச்சென்றனர். மீடியாவையும் பத்திரிக்கையாளர்களையும் சகட்டுமேனிக்கு திட்டிக்கொண்டே சென்றார் குண்டு மனிதர்.

திடீரென்று தன்னைப்பிடித்திருந்தவர்களை உதறித்தள்ளி டிஷர்ட் ஆசாமியை மறுபடியும் நெருங்கிய குண்டு மனிதர், 'இனிமேல் என் மனைவியைப்பற்றி ஒரு வார்த்தை எழுதினே... நடக்கிறதே வேறே..' என சுட்டு விரலை ஆட்டி மிரட்டினார்.

ஏன் இந்த ஆவேசம்? டிஷர்ட் ஆசாமி திரைப்பட நிருபராம். குண்டு மனிதரின் மனைவி ஒரு மாடலிங் நடிகையாம். இந்த மாதிரி நடிகைகளைக் குறித்து பொதுவாக எப்படி எழுதுவார்களோ, அப்படி அந்த மாடலிங் பெண்ணைப்பற்றியும் டிஷர்ட் ஆசாமி எழுதினாராம். இதனைப்படித்த குண்டு மனிதரின் மனம் புண்பட்டு விட்டதாம். ஆவேசத்துக்கு அதுதான் காரணமாம்.
அந்தக் குண்டு மனிதர் யார் தெரியுமா?

ஸல்மான் ருஷ்தி!

ஆம், 'சாத்தானிய வசனங்கள்' நாவலை எழுதி கோடிக்கணக்கான முஸ்லிம்களின் இதயத்தை காயப்படுத்திய அதே ருஷ்திதான்.
தன்னுடைய லேட்டஸ்ட் நடிகை மனைவி குறித்து ஆபாசமாக எழுதிவிட்டானே என இந்தளவுக்கு ஆவேசப்பட்ட ருஷ்திக்கு, தன் 'சாத்தானிய வசனங்கள்' நாவலால் முஸ்லிம்கள் எந்தளவுக்கு துடித்திருப்பார்கள் என்பது புரிந்திருக்குமா? அறுபது வயது ருஷ்திக்கு 35 வயது மனைவி மீது இருக்கும் அன்பை விட கோடிக்கணக்கான மடங்கு அதிகமான இன்னும் சொல்லப்போனால் உயிரினும் மேலான நேசத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது வைத்திருக்கும் முஸ்லிம்கள் எந்தளவுக்கு கொதித்துப்போய் இருப்பார்கள்? ருஷ்திக்கு உறைத்திருக்குமா?

தெரியவில்லை. ஆனால், கருத்துச் சுதந்திரம் என்கிற போர்வையில் ருஷ்தியை அரவணைத்து, பாதுகாத்து இந்தப்பிரச்னையை சாக்காக வைத்துக்கொண்டு ஈரானுடன் பல்லாண்டுகள் தூதரக உறவுகளை முறித்து முரட்டுத்தனமாக நடந்து கொண்ட மேற்கத்திய நாடுகள் ருஷ்தியின் ஆவேசத்தைக் கண்டு கொள்ளவில்லையே..! ருஷ்திக்கு எதிராக முஸ்லிம்கள் ஆவேசத்தை வெளிப்படுத்தியபோது கண்டித்து பக்கம் பக்கமாக எழுதித்தள்ளிய ஊடகம் ருஷ்தியின் ஆவேசத்தை அமுக்கி விட்டதே..! ஏன்?

நன்றி: நம்பிக்கை ஜூலை 2005

Tuesday, July 12, 2005

சிறுகதை - வேண்டாத பிள்ளை!

('நம்பிக்கை' ஜூன் 05 இதழில் வெளியான சிறுகதை, சிறு மாற்றங்களுடன்..)

அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் ஆறாவது மாடி வீட்டின் சன்னலோரம் உதுமான் அமர்ந்திருந்தார். எதிரே உள்ள தொடக்கப் பள்ளியின் வாசலருகில் வகுப்பு முடிந்து வரும் தம் குழந்தைகளை எதிர்பார்த்து பெற்றோர்களும், பணிப்பெண்களும் காத்திருக்கின்றனர். பள்ளி நேரம் முடிந்து குழந்தைகள் வரத்தொடங்கி விட்டனர். அவர்கள் ஒருவர் ஒருவராகவும் வருவார்கள். இரண்டு மூன்று பேர் சேர்ந்து உரக்கப் பேசி சிரித்துக் கொண்டும் வருவார்கள். சிலர் சோர்வாக வருவார்கள். களைப்பு முகத்திலேயே தெரியும். தனக்காக காத்திருக்கும் பெற்றோரை பார்த்த உடன் சடாரென ஒரு உற்சாகம் பிறக்க புத்தகப்பையை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு ஓடி வருவார்கள். பத்து, பதினைந்து நிமிடங்களில் அந்த இடம் காலியாகி விடும். பள்ளி நடக்காத, சனி ஞாயிறு, மற்றும் விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களிலெல்லாம் மாலை வேளைகளில் இந்த குழந்தைகளை கண்டு மகிழ்வது உதுமானின் ஒரு முக்கிய பொழுது போக்கு. பள்ளி விடுமுறை நாட்களில் நேரம் போவது அவருக்கு பெரும் சிரமமாக இருக்கும். எப்படா மீண்டும் பள்ளி திறப்பார்கள் என்று காத்திருப்பார்.

'காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது!' என பெருமூச்சிட்டார் உதுமான். அவரது குழந்தைகளை இதே போல் பள்ளிக்கு அழைத்துச் சென்ற நாட்கள் அவர் நினைவிலாடியது. காலை நேர வகுப்பென்றால் ஏழு மணிக்கெல்லாம் பள்ளிக்குள் இருக்க வேண்டும். பள்ளிக்கூடம் வீட்டிற்கு அருகில்தான் இருந்தது. ஐந்து நிமிட நடை தூரம்தான். பிள்ளைகளின் புத்தகப்பைகள்தான் எவ்வளவு கனமாக இருக்கும்! கொஞ்சம் தாமதமாகி விட்டால் அந்தப் பையையும் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக விரைவார்கள். உதுமானும் அவர்களுடன் சேர்ந்து ஓட வேண்டி இருக்கும். இல்லாவிட்டால் அவரை எதிர் பார்க்காமல் சாலையை கடக்க இறங்கி விடுவார்கள். மாலையில் பள்ளி முடியும் நேரத்தில் அம்மா சல்மா போய் அவர்களை அழைத்து வருவாள். சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு குர்ஆன் வகுப்பிற்கோ, டியூஷனுக்கோ போக வேண்டி இருக்கும். சல்மாவுக்குத்தான் அதிக அலைச்சல்.

உதுமானின் இரு மகள்களில் மூத்தவள் படபடவென்று வெகுளித்தனமாக பேசுவாள். மனதில் ஒன்றையும் மறைத்து வைக்கத் தெரியாது. திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற பின்பும் அந்த வெகுளித்தனம் மட்டும் மாறவேயில்லை. அவள் கணவருக்கு சவுதி அரேபியாவில் ஒரு நல்ல வேலை கிடைத்தது. புனித நகரான மக்காவுக்கு அருகில் உள்ள ஜித்தாவில் வேலை என்றதும் உடனே குடும்பத்துடன் புறப்பட்டு விட்டார்கள். உதுமானும், சல்மாவும் ஹஜ் யாத்திரை சென்ற போது அவர்கள் வீட்டில் போய் தங்கி விட்டு வந்தார்கள். அவர்களும் குடும்பத்துடன் இரண்டு வருடத்திற்கொருமுறை சிங்கப்பூர் வருவார்கள். மற்றபடி வாரம் ஒரு முறை தொலைபேசியில் அழைப்பார்கள்.

சின்னவள் மூத்தவளைவிட நான்கு வயது இளையவள். அமைதியான சுபாவம். படிப்பில் கெட்டி. கணிணி படிப்பில் ஆர்வம் கொண்டு படித்தாள். அவளுக்கு அமைந்த கணவரும் கணிணி வல்லுனர்தான். இருவரும் தற்போது கனடாவில் இருக்கிறார்கள்.

சின்னவள் பிறந்தபோது உதுமான் ஒரு நாணயமாற்று வியாபாரியிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். சுற்றுலாப்பயணிகள் அதிகம் நடமாடும் இடத்தில் கடை இருந்தது. காலை எட்டு மணிக்கு போனால் இரவு ஒன்பது மணி வரை கை ஓயாத வேலை இருக்கும். சம்பளம்தான் போதுமானதாக இல்லை. ஆனால் கிடைத்த சம்பளத்தில் பொறுப்பாக குடும்பம் நடத்தும் திறமை சல்மாவிடம் இருந்தது.

இரண்டாவது மகள் பிறந்து மூன்று மாதமே ஆன நேரத்தில்தான் அது நிகழ்ந்தது. சல்மா மீண்டும் கர்ப்பமாகி இருப்பதாக டாக்டர் சொன்னபோது உதுமானுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சாதாரணமாக சந்தோஷப்பட வேண்டிய ஒரு செய்தி அவருக்கு அதிர்ச்சி அளித்ததென்றால் அதற்கு காரணம் இருந்தது. அப்போதைய குடும்ப பொருளாதார சூழ்நிலையில் இன்னொரு குழந்தையை பெற்று வளர்க்க தம்மால் முடியுமா என்ற கேள்வி அவர் முன் விசுவரூபமெடுத்து நின்றது. அது மட்டுமல்லாமல், மூன்று மாதங்களுக்கு முன்புதான் பிரசவம் நடந்திருக்க, இன்னொரு கர்ப்பத்தை சுமக்க சல்மாவின் உடல்நிலை இடங்கொடுக்குமா என்பதும் அவரை மிக குழப்பத்தில் ஆழ்த்தியது.

மிகுந்த யோசனைக்கு பிறகுதான் உதுமான் அந்த முடிவுக்கு வந்தார். கர்ப்பத்தை கலைத்துவிடுவதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை. சல்மாவுக்கு இதில் உடன்பாடே இல்லை. வேறு எதற்காகவும் அவள் தன் கணவருடன் இந்தஅளவுக்கு வாதிட்டதேயில்லை. ஆனால் அவர் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார்.

சல்மாவுக்கு இருமுறை பிரசவம் பார்த்த அதே டாக்டரிடம் அழைத்துச் சென்று விஷயத்தை கூறினார் உதுமான். அவர்கள் மேல் அக்கறை கொண்ட அந்த டாக்டர் கர்ப்பத்தை கலைக்க வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். உதுமான் வ்¢டாப்பிடியாக இருந்ததால் வேறு ஒரு டாக்டரிடம் பரிந்துரை செய்து அனுப்பி விட்டார்.

இந்த டாக்டர் ஒரு சீனர். உதுமான் சொன்னதை காது கொடுத்து கேட்ட டாக்டர் அவர் மேல் அனுதாபப்பட்டதாகத்தான் தோன்றியது. அதன் பிறகு கர்ப்பம் கலைப்பதைப் பற்றி அவர் விளக்கமாகச் சொல்லி 'நிறைய ரத்தமெல்லாம் வெளியாகும்' என்று சொன்னபோது உதுமானுக்கு கொஞ்சம் கலக்கமாக இருந்தது. 'யாரும் செய்யாததையா நாம் செய்கிறோம்' என்று ஒருவாறு சமாதானம் செய்து கொண்டார்.

பிறகு ஆபரேஷனுக்கு நாள் குறிப்பதற்காக ஒரு நர்ஸிடம் அவர்களை அனுப்பி வைத்தார் அந்த டாக்டர். அந்த தமிழ் நர்ஸ் சல்மாவின் முகவாட்டத்தைக்கண்டு விஷயத்தை ஒருவாறு விளங்கிக்கொண்டார் போலிருக்கிறது. சல்மாவிடம் அவர் ஆறுதலான தொனியில் பேச்சுக்கொடுத்தார். உதுமான் அந்த உரையாடலில் குறுக்கிடவில்லை. சல்மாவுக்கு இத்தகைய இதமான பேச்சு தேவைதான் என்று அவருக்கு தோன்றியது. ஆபரேஷனுக்கு தேதி குறித்தபின் அவர் சொன்னார், "இது நீங்க கணவன் மனைவி எடுக்க வேண்டிய முடிவு. இதுல நான் மூன்றாம் மனுஷி கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனா, நல்லா யோசனை பண்ணிக்குங்க. ஒருவேளை மாறுதலான முடிவு எதுவும் எடுத்தீங்கன்னா இந்த தேதியில வராமெயே இருந்திடலாம். தேதி குறிச்சுட்டமே என்பதற்காக வர வேண்டியதில்லை." உதுமான் மனதில் இப்போது கலக்கத்துடன் குழப்பமும் சேர்ந்து கொண்டது.

இது போன்ற குழப்பமான சூழ்நிலைகளில் தகுந்த ஆலோசனை வேண்டி உதுமான் நாடிச்செல்வது மெய்தீன் மாமாவிடம்தான். அவரை தொலைபேசியில் அழைத்து பேசியபோது தன்னையறியாமலே உதுமானின் குரல் தழுதழுத்தது. "ரொம்ப மனசைப் போட்டு குழப்பிக்கிட்டு இருக்காதே! நாளைக்கு உன்னை ஒருத்தர் கிட்டே அழைச்சுக்கிட்டு போறேன். உன் குழப்பம் தீர ஆலோசனை சொல்றதுக்கு சரியான ஆள் அவர்" என்றார் மெய்தீன் மாமா.

அடுத்த நாள் அவர் உதுமானை அழைத்துச் சென்றது ஒரு பள்ளிவாசல் இமாமிடம். சாந்தமான தோற்றம் கொண்ட பெரியவர் அவர். அஸர் தொழுகை முடிந்த பிறகு அந்த அமைதியான சூழ்நிலையில் அவரைச் சந்தித்தார்கள் அவ்விருவரும். உதுமான் அவரது பிரச்னையை விளக்கியபோது குறுக்கிடாமல் பொறுமையுடன் அவர் கேட்டுக்கொண்டிருந்த விதமே அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. 'இவர் எனக்கு ஒரு நல்ல லோசனை சொல்வார்' என்ற நம்பிக்கையும் அவருக்கு ஏற்பட்டது.

பிறகு அந்த இமாம் சொன்னார், "தம்பி, நான் உங்களுக்கு ஆலோசனை சொல்லனும்னா, நான் கேட்கிற சில கேள்விகளுக்கு நீங்க எதையும் மறைக்காம உண்மையான பதிலை சொல்லனும். டாக்டர் கிட்டேயும், வக்கீல் கிட்டேயும் எதையும் மறைக்கக் கூடாதுன்னு சொல்வாங்க இல்லியா, அது போலத்தான் இதுவும்."

"சரி" என்றார் உதுமான்.

"கர்ப்பத்தை கலைக்கணும்னு நீங்க நினைக்கிறதுக்கு முக்கியமான காரணம் என்ன?"

"அது.. வந்து.. இப்பத்தான் ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடி பிரசவம் ஆகியிருக்கு. உடனே மறுபடியும் கர்ப்பம்னா உடம்பு தாங்குமாங்கிற கவலைதான்!" தன் குரலில் தயக்கம் இருந்தது அவருக்கே தெரிந்தது.

"இன்னொரு கர்ப்பத்தை தாங்க முடியாதுன்னு டாக்டர் யாரும் சொன்னாங்களா?"

"டாக்டர் அப்படி சொல்லலை. உண்மையைச் சொல்லப்போனா 'கர்ப்பத்தை கலைக்காதீங்க'ன்னுதான் சொன்னாங்க"

சற்று நேரம் மவுனமாக அவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு இமாம் சொன்னார், "தம்பி! கொஞ்சம் நிதானமா யோசனை பண்ணிப் பாருங்க! உங்க மனைவி மேல நீங்க வச்சிருக்கிற அக்கறையினால 'இன்னொரு கர்ப்பத்தை அவரால தாங்க முடியுமா?'ன்னு நீங்க கவலைப்படுறீங்க. ஆனா உங்களைவிட உங்க மனைவியின் உடல்நிலையைப் பற்றி நல்லா தெரிஞ்ச டாக்டர் 'கர்ப்பத்தை கலைக்க வேண்டாம்'னு அறிவுரை சொல்றாங்களே! அவங்க சொல்றதுதானே நியாயமா தெரியுது! அதுக்கும்மேலே உங்களோட கவலைக்கு குர்ஆன் விளக்கம் கொடுக்குது பாருங்க..."

'இதற்கெல்லாமா குர்ஆன் விளக்கம் கொடுக்கிறது!' என எண்ணினார் உதுமான்.

"அல்லாஹ் எந்த ஒர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை'. ஒரு பெண்ணால அடுத்தடுத்து இரண்டு கர்ப்பங்களை சுமக்க முடியாதுன்னா அப்படி ஒரு கஷ்டத்தை ஆண்டவன் எந்த பெண்ணுக்குமே கொடுத்திருக்க மாட்டான். சரிதானே?" என்று சொன்ன இமாம், உதுமான் யோசனை செய்யட்டும் என்பதற்காகவோ என்னவோ சற்று நேரம் அமைதியாக இருந்தார்.

உதுமானுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. இருந்தாலும் அவர் இந்த முடிவுக்கு வருவதற்கு முக்கியமான காரணமான பொருளாதார சூழ்நிலைக்கு இவரால் என்ன தீர்வு அளிக்க முடியும்?

அவரது எண்ணவோட்டத்தை புரிந்து கொண்டது போல் இமாம் கேட்டார், "வேறு ஏதாவது பிரச்னை இருக்கா?" மிக தயக்கத்துடன் அவர் தனது பொருளாதார சூழ்நிலையையும், இன்னொரு பிரசவம், குழந்தை வளர்ப்பு ஆகியவற்றை தன் வருமானத்தைக்கொண்டு சமாளிக்க முடியாது என்பதாலேயே இந்த முடிவுக்கு வர நேரிட்டதையும் சுருக்கமாக சொன்னார்.

"தம்பி! உங்க நிலைமை எனக்கு புரியுது. இதுக்கு நீங்க உதவி கேட்கவேண்டியது இறைவன் கிட்டேதான். அந்த இறைவன் சொல்கிறான், 'வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்'. இன்னும் பிறக்கவில்லை என்றால்கூட கர்ப்பத்தில் இருப்பதும் ஒரு உயிர்தானே!. அதுவும் உங்கள் குழந்தைதானே!."

இதற்கு மேல் உதுமானுக்கு வேறு எந்த விளக்கமும் வேண்டியிருக்கவில்லை. ஆபரேஷனுக்கு குறிப்பிட்டிருந்த தேதியில் அவர்கள் மருத்துவமனைக்கு போகவில்லை. சல்மாவுக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது.

****
வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. உள்ளே வந்தது உதுமானின் மகன் அப்துல்லாதான். பட்டமேற்படிப்பு முடித்து ஒரு அரசு நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறான்.

பலத்த சிந்தனையில் ஆழ்ந்திருந்த உதுமான், சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதை கூட இவ்வளவு நேரம் உணரவில்லை. அவரது அருகில் வந்து ஆதரவாக அவரது தோளில் கை வைத்த அப்துல்லா அவரது முகக்குறிப்பை அறிந்தவனாக, "என்ன வாப்பா, டாய்லட் போகணுமா?" என்றான். அவனது கணிணி பையை கீழே வைத்துவிட்டு, சில ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்ட ஸ்ட்ரோக்கின் விளைவாக கை,கால்கள் உணர்விழந்து, பேசும் சக்தி இழந்து சக்கர நாற்காலியிலேயே காலத்தை கழித்துவரும் அவரை, கழிவறைக்கு நாற்காலியுடன் தள்ளிச்சென்றான். கழிவறை அருகில் வந்ததும் ஒரு குழந்தையைத் தூக்குவதுபோல அவரை இருகைகளிலும் தூக்கிக்கொண்டு கழிவறையுள் நுழைந்தான். ஏதோ சொல்ல முயன்று முடியாமல் தவித்த உதுமானின் இரு கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தோடியது.

Wednesday, May 25, 2005

வணிகம் என்றொரு வணக்கம்!

மனிதர்கள் அனைவரும் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பொருளீட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தொழில், வணிகம், உத்தியோகம் ஆகியவை பொருளீட்ட நாம் மேற்கொள்ளும் சில வழிமுறைகள். இம்மூன்றில் நாம் எதை தேர்ந்தெடுத்தாலும் அதிலிருந்து நமக்கு வருமானம் கிடைக்கிறது. சிலவற்றில் அதிகம் கிடைக்கும். சிலவற்றில் குறிப்பிட்ட தொகையே கிடைக்கும். சிலவற்றில் சில நேரங்களில் நட்டம் கூட ஏற்படலாம். வருமானம் பெற்றுத்தரும் வழிமுறைகள் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்தால் இவற்றுக்கிடையில் வேறு வித்தியாசங்கள் அதிகம் இல்லை.

ஆனால் இஸ்லாத்தின் பார்வையில் இந்த வழிமுறைகள் எல்லாம் சமமானவை அல்ல. இஸ்லாம் இவற்றுள் பெரும்பாலானவற்றை ஆகுமாக்கி வைத்து, சிலவற்றை தடுத்திருக்கிறது. குர்ஆன் கூறுகிறது: "வணிகத்தை ஆகுமாக்கி வைத்த இறைவன் வட்டியை தடுத்து விட்டான்" (2:275). அதோடு மட்டுமல்லாது, இஸ்லாம் தொழில், வணிகம் ஆகியவற்றை வெறும் வருமானம் பெற்றுத்தரும் வழிமுறையாக மட்டும் பாராது, அதற்கும் அதிகமான ஒரு உயர்ந்த அந்தஸ்தை அளிக்கிறது.

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உண்மை பேசி நாணயத்துடன் நடந்து கொள்ளும் ஒரு வணிகர், மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீத் (இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தோர்) ஆகியோருடன் இருப்பார்" (அறிவிப்பாளர்: அபூஸயீத் குத்ரீ (ரலி) - நூல்: திர்மிதி)

இத்தகைய உயர்ந்த அந்தஸ்து கொடுக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது, இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் வணிகம் என்பது வெறுமனே பொருளீட்டும் வழி மட்டுமல்லாது, அதற்கும் மேலாக சமுதாயத்திற்கு மிக பயனளிக்கும் ஒரு சேவையும் கூட என்பது தெரிகிறது. இத்தகைய உயரிய அந்தஸ்திற்கு தகுதியுடையதாக ஆக வேண்டுமென்றால் அந்த வணிகம் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்ற வழிமுறைகளையும் இஸ்லாம் சொல்லித்தருகிறது.

இன்றைய சூழ்நிலையில் வணிகம் என்பது பண நிர்வாகம், பொருளாதாரம், தயாரிப்பு, சந்தைப்படுத்தல், மனிதவள மேலாண்மை, போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாக, மிக சிக்கலானதாக இருக்கிறது. தொலைத்தொடர்பு வசதிகள், கணினி போன்ற வணிக நிர்வாகத்திற்கு தேவையான துறைகள் வெகுவாக முன்னேற்றம் அடைந்துள்ளன. நிர்வாகிகளாக ஆக விரும்புபவர்கள் பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டியுள்ளது.

இங்கு சில கேள்விகள் எழலாம்.

(1) 14 நூற்றாண்டுகளுக்கு முன் கூறப்பட்ட, அதற்குப்பின் மாற்றப்படாத இஸ்லாமிய நெறிமுறைகளும் போதனைகளும் இன்றைய காலக்கட்டதிற்கும் பொருந்துமா?

(2) வணிகம் நடத்துவதற்கு தேவையான மேற்கண்ட எல்லா துறைகளிலும் இஸ்லாம் வழிகாட்டுதல்களை தந்துள்ளதா?

(3) தொழிற்துறை நிர்வாகம் குறித்து பல்கலைக்கழகங்கள் போதிக்கும் பாடங்கள் இஸ்லாத்திற்கு ஏற்புடையானவை அல்லவா?

இந்த கேள்விகளுக்கு விடை அறிவதற்கு இஸ்லாமிய கொள்கைகள் குறித்த சில அடிப்படையான கருத்துக்களை புரிந்து கொள்வது நல்லது.

முதலாவதாக, இஸ்லாமின் கொள்கைகள் அனைத்துமே ஒரு மனிதனை நல்லொழுக்கங்களைக் கொண்ட ஒரு சிறந்த மனிதனாக ஆக்கும் நோக்கம் கொண்டவை. இறுதித்தூதர் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் "நல்ல ஒழுக்கங்களை பரிபூரணமாக்குவதற்காகவே நான் அனுப்பப்பட்டேன்." தொழுகை முதற்கொண்ட எல்லா இஸ்லாமிய கடமைகளும்கூட மனிதர்களை நல்ல ஒழுக்கத்தின்பால் இட்டுச் செல்லும் பயிற்சிகளே.

இஸ்லாம் கற்றுத்தரும் இத்தகைய நற்பண்புகளைப் பெற்ற ஒரு சிறந்த மனிதர், ஒரு சிறந்த வணிகராகவும் திகழ்வதில் வியப்பேதும் இல்லை. இந்த வணிகர்,
- நாணயமிக்கவராக இருப்பார்.
- பொய் சொல்ல மாட்டார். மோசடி செய்ய மாட்டார்.
- தான் தொடர்பு கொள்பவர்களுடன் மென்மையுடனும் நற்பண்புகளுடனும் நடந்து கொள்வார்.
- அளவையிலும் நிறுத்தலிலும் நேர்மையுடன் நடந்து கொள்வார்.
- தான் விற்கும் பொருளில் குறைகள் ஏதேனும் இருந்தால் அதை மறைக்காமல் தெளிவாக எடுத்துரைத்து விற்பார்.
- மக்களுக்கு தேவைப்படும் பொருட்களை பதுக்கி வைக்க மாட்டார்.

இத்தகைய வணிகருடன் வியாபாரம் செய்ய யார்தான் விரும்ப மாட்டார்கள்? வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் ஒரு வணிகர் தனது தொழிலில் வெற்றியடைய தடையென்ன இருக்கப் போகிறது? இஸ்லாம் சொல்லித்தரும் இந்த நெறிமுறைகள் 14 நூற்றாண்டுகளுக்கு முன் சொல்லப்பட்டதாக இருந்தாலும் எல்லா காலக்கட்டத்திற்கும் பொருந்துபவையே!

இரண்டாவதாக, மார்க்க அறிஞர்கள் இஸ்லாமின் கொள்கைகளை ஒரு கட்டிட வரைபடத்திற்கு ஒப்பிடுகிறார்கள். வரைபடத்தை அடிப்படையாக கொண்டு கட்டிடம் எழுப்பப்படுகிறது. ஆனால் வரைபடமே கட்டிடமல்ல. அதுபோல, இஸ்லாமின் கொள்கைகள் முஸ்லிம்கள் தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் தேவையான ஒரு அடிப்படைத்திட்டம்.

வணிகம் நடத்துவதற்கு தேவையான எல்லா துறைகளிலும் இஸ்லாம் வழிகாட்டுதல்களை தந்துள்ளதா? என்ற கேள்விக்கு மௌலானா சையித் அபுல் அ'லா மௌதூதி (ரஹ்) அவர்கள் திருமறையைப்பற்றி கூறிய ஒரு கருத்து, பொருத்தமான பதிலாக இருக்கிறது. "குர்ஆன் மனிதனுக்கு வழிகாட்டுகிறது என்பதன் பொருள், இஸ்லாமிய வாழ்க்கை முறையைச் செயல்படுத்துவதற்காக வாழ்வின் ஒவ்வொரு சின்னஞ்சிறு அம்சம் குறித்தும் விரிவான சட்ட திட்டங்களையும் விதிமுறைகளையும் வகுத்துத் தருகிறது என்பதல்ல. மாறாக வாழ்க்கையின் ஒவ்வொரு துறை குறித்தும் அதற்குள்ள எல்லைகளையும் வரம்புகளையும் நிர்ணயித்து, இறைவனின் விருப்பத்துக்கு இசைவாக அத்துறைகளை எவ்வாறு அமைக்க வேண்டும், எவ்வாறு நிர்மாணிக்க வேண்டும் என்று அறிவிக்கக் கூடிய கைகாட்டிகளை ஆங்காங்கே அது ஊன்றி வைக்கிறது"

மூன்றாவதாக, நல்லொழுக்க போதனைகள் இரண்டு வகைப்படும். செய்யவேண்டியவற்றை பட்டியலிட்டு அவற்றை மட்டுமே செய்யும்படி போதிப்பது, அல்லது செய்யக்கூடாதவற்றை பட்டியலிட்டு அவற்றிலிருந்து விலகி இருக்கும்படி அறிவுறுத்துவது ஆகியவையே அவை. இஸ்லாம் இந்த இரண்டு வகை போதனைகளை செய்திருந்தாலும், செய்யக்கூடாதவற்றை அது தெளிவாக வரையறுத்துள்ளதுபோல் செய்யவேண்டிய அனைத்து விஷயங்களையும் அது பட்டியலிடவில்லை என்றே மார்க்க அறிஞர்கள் கருதுகின்றனர். இதன் பொருள் என்னவெனில், எவையெல்லாம் இஸ்லாமில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ தடுக்கப்படவில்லையோ அத்தகைய செயல்களில் ஈடுபடுவது குற்றமல்ல என்பதே.

இதை ஒரு சிறிய உதாரணம் மூலமாக விளக்கலாம். சில நாடுகளில் வாகனமோட்டிகள் சாலைகளில் "U" போல திரும்புவதற்கு உரிய இடங்களில் அதற்கான சாலைக்குறியீட்டு பலகைகள் வைத்திருப்பார்கள். அந்த இடங்களில் மட்டுமே "U" போல திரும்ப முடியும். வேறு சில நாடுகளில் சாலைகளில் எங்கெல்லாம் "U" போல திரும்ப அனுமதி இல்லையோ அந்த இடங்களில் அதற்கான குறியீட்டு பலகைகள் வைத்திருப்பார்கள். அந்த குறிப்பிட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் "U" போல திரும்பலாம் என்பதுதான் இதன் பொருள். இஸ்லாமிய கொள்கைகள் இந்த இரண்டாம் வகையைப் போன்றவை.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்த்தால், இஸ்லாம் மனித வாழ்வுக்கு தேவையான அடிப்படையான நெறிமுறைகளை சொல்லித்தருவதோடு நின்று விடாமல், தனி மனிதருக்கும் சமுதாயத்திற்கும் தீமை தருபவை என விலக்கி வைக்கப்பட்டவைகளை தவிர மற்ற காரியங்களெல்லாம் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையே என்ற பரந்த கண்ணோட்டத்தையும் வழங்குகிறது. எனவே, இஸ்லாமிய கொள்கைகளுக்கு முரண்படாத தொழில் நிர்வாக நுணுக்கங்களை பல்கலைக்கழகங்களில் பயிலுவதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதும் இஸ்லாத்திற்கு ஏற்புடையதே!

மேலும், திருமறையும், இறைத்தூதரும் காட்டித்தந்த வழியில் தமது வணிகத்தை நடத்திவரும் ஒரு வணிகர் மனதில் இறையச்சம் எப்போதும் நிரம்பி இருக்கும். எந்த ஒரு செயலையும் துவங்குமுன் "இது இறைக்கட்டளைக்கு ஏற்புடையதா, மாற்றமானதா" என கண்டறிய அவரது மனம் விழையும். "வியாபாரமோ, கொடுக்கல் வாங்கலோ அல்லாஹ்வை திக்ரு செய்வதைவிட்டும் (ஈமான் உள்ள) அம்மனிதர்களை திருப்பி விடா" (24:37) என்ற திருமறை வசனத்திற்கு இலக்கணமாக அவர் திகழ்வார். இந்த சூழ்நிலையில் வணிகமும் ஒரு வணக்கமாகவே ஆகிவிடுகிறது.

-----
"நம்பிக்கை" மே 2005 இதழில் வெளியான கட்டுரை..

இஸ்லாம் குறித்த விவாதங்கள்!

இஸ்லாம் குறித்த காரசாரமான விமரிசனங்கள் பல வலைப்பதிவுகளில் நடைபெற்று வருகிறது. 'இஸ்லாத்தைப்பற்றி மற்றவர்கள் விமரிசனம் செய்யக்கூடாதா?' என்ற கேள்வியும் அவ்வப்போது எழுகிறது. நான் மார்க்க அறிஞனல்ல என்றாலும், நானறிந்த வரையில் ஒரு சிறு விளக்கத்தை தரலாம் என்று நினைக்கிறேன். யாரையும் பழிப்பதோ, குத்திக்காட்டுவதோ என் நோக்கமல்ல என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

விமரிசனம் என்பது இஸ்லாத்திற்கு புதியது அல்ல. நபிகளாரின் காலத்திலிருந்தே அது கடுமையான கண்டனங்களையும் விமரிசனங்களையும் சந்தித்தே வந்திருகிறது. அவற்றிற்கான தக்க பதில்களும் விளக்கங்களும் அவ்வப்போது அளிக்கப்பட்டும் வந்துள்ளன. ஒருவகையில் இஸ்லாம் இத்தகைய விமரிசனங்களை வரவேற்கிறது என்று கூட சொல்லலாம். எனவே, இஸ்லாத்தை குறித்து யார் வேண்டுமானாலும் விமரிசனம் செய்யலாம். விவாதம் ஆரோக்கியமானதாக நடைபெற கீழ்க்கண்ட சில அடிப்படைகளை புரிந்து மனதில் இறுத்திக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

1. முதலில் ஒரு ஸென் கதையைப்பார்ப்போம்: ( நன்றி: கங்காவின் 'தினம் ஒரு ஸென் கதை)

"கோப்பையை காலி செய்"
ஒரு பல்கலைக் கழக பேராசிரியர் சிறந்த ஸென் துறவியை சந்திந்து அவரிடம் ஞானம் பற்றி தெளிவு பெறுவதற்காக சென்றார். துறவி அமைதியாக தேனீரினை கோப்பையில் ஊற்றிக் கொண்டு இருந்த போது, பேராசிரியர் ஸென் புத்த மதத்தை பற்றியும் தியானம் பற்றியும் தனக்கு தெரிந்ததை பற்றி வலவல வென்று பேசிக் கொண்டிருந்தார். பேராசிரியரின் கோப்பையின் விளிம்பு வரை தேனீர் ஊற்றிக் கொண்டு இருந்த துறவி, நிறுத்தாமல் தொடர்ந்து ஊற்றிக் கொண்டே இருந்தார். கோப்பையில் இருந்து வழியும் தேனீரை கவனித்துக் கொண்டிருந்த பேராசிரியர், ஒரு நிலைக்கு மேல் பொறுக்காமல் "கோப்பை நிறம்பி விட்டது. இதற்கு மேல் அதில் இடம் இல்லை" என்றார். அதற்கு துறவி "நீயும் இந்த கோப்பை போல் தான்", "நீ எப்போழுது உனது கோப்பையை காலி செய்து இடம் வைக்கிறாயோ, அப்போது தான் உனக்கு ஞானம் பற்றி என்னால் கூற முடியும்" என்றார்.

ஆக, இஸ்லாம் பற்றி நன்கு விளங்கிக்கொள்ள விரும்பும் நண்பர்கள் முதலில் தங்கள் கோப்பைகளை காலி செய்து கொள்வது நல்லது. விவாதத்தின்போது வெளிப்படும் புதிய கருத்துக்கள், புதிய கோணங்கள், புதிய விளக்கங்களை ஏற்றுக்கொள்ள மனதில் இடம் வேண்டுமல்லவா?

2. விவாதத்தின் கருப்பொருள்:

இஸ்லாத்தின் கருத்துக்களோடு முஸ்லிம்களின் சொல், செயல் ஆகியவற்றை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். நடைமுறையில் முஸ்லிம்களின் சொல், செயல் அனைத்தும் எல்லா நேரங்களிலும் இஸ்லாத்தின் அடிப்படைகளை சார்ந்து இருப்பதில்லை. இது ஒரு கசப்பான உண்மை. பின்லாடனாக இருந்தாலும், கொமைனியாக இருந்தாலும், நாகூர் ரூமியாக இருந்தாலும், நானாக இருந்தாலும் இந்த நிலைதான். இறைத்தூதர்கள் மட்டுமே இதில் விதிவிலக்கானவர்கள். நபிகளாரின் சொல் செயல் அனைத்துமே இஸ்லாமாக இருந்தது.

ஆக, விவாதிக்கப்படும் பொருள் இஸ்லாத்தின் கருத்தா அல்லது முஸ்லிம்களின் சொல், செயல்பாடுகளா என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.

3. ஆதாரம் ப்ளீஸ்..

இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆனும் ஹதீஸும்தான். எனவே உங்கள் சந்தேகங்களை முடிந்தவரை ஆதாரங்களுடன் எடுத்து வையுங்கள். குர்ஆன் வசனங்களை யாராவது உங்களுக்கு தவறாக விளக்கி இருக்கலாம். ஹதீஸ் என நீங்கள் நம்பி இருந்த ஒரு செய்தி வெறும் கட்டுக்கதையாக இருக்கலாம். அதனால், 'நான் ஆதாரம் காட்டினால் நீங்கள் இஸ்லாத்தை விட்டு விலக தயாரா?' என்பது போன்ற சவால்களை தவிர்க்கவும்.

'முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள்' என்பது போன்ற பொதுப்படையான வாக்கியங்களையும் (generalised statements) தவிர்க்கவும். இத்தகைய விவாதங்களுக்கு முடிவென்பதே கிடையாது.

4. விளக்கம் கிடைக்க தாமதமாகலாம்:

பொதுவாக இஸ்லாத்தை வெளியிருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும் கேள்விகளும் சந்தேகங்களும் முஸ்லிம்களுக்கு தோன்றுவதில்லை. அவற்றிற்கான விளக்கங்களும் அவர்களிடம் பெரும்பாலும் தயாராக இருப்பதில்லை. அத்தகைய கேள்விகளை எதிர் நோக்கும் முஸ்லிம்கள் உணர்ச்சிவசப்படாமல் மார்க்க நூற்களையும் மார்க்க அறிஞர்களையும் அணுகி தக்க விளக்கம் பெற்று பதிலளிப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும். அதனால், நீங்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு தக்க விளக்கம் கிடைக்க தாமதமாகலாம். ஆனால் இஸ்லாத்தில் அத்தகைய கேள்விகளுக்கு பதிலில்லை என்ற முடிவுக்கு வந்து விட வேண்டாம்.

5. முகமூடிகள் ஜாக்கிரதை:

இணையத்தில் நிறைய முகமூடிகள் உலவுகின்றனர். இஸ்லாமிய பெயர்களை வைத்துக்கொண்டு இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்புபவர்களும் அவர்களுள் இருக்கலாம். அதனால் பெயரை மட்டும் வைத்து எந்த முடிவுக்கும் வந்து விட வேண்டாம். அத்தகையோர் வெளிப்படுத்தும் கருத்துக்களை சற்று உன்னிப்பாக கவனித்தால் அவர்களின் உண்மை முகம் வெளிப்படும்.

ஆகவே, வாருங்கள் நண்பர்களே! ஒன்று சேர்ந்து இஸ்லாத்தைப்பற்றி தெரிந்து கொள்வோம்!

Thursday, March 10, 2005

யூசுஃப் இஸ்லாமுக்கு நஷ்டஈடு!

யூசுஃப் இஸ்லாமுக்கு நஷ்ட ஈடு வழங்கும் பிரிட்டிஷ் பத்திரிக்கைகள்!

(08-03-05 அன்று பதிந்த இக்கட்டுரை அன்றே காணாமல் போய்விட்டது. அதனால் மீண்டும் பதிகிறேன்.)

இரண்டு ஆங்கில பத்திரிக்கைகள் இவ்வளவு என்று குறிப்பிடாமல் தாங்கள் யூசுஃப் இஸ்லாம் எனும் பிரபல பாடகருக்கு இழப்பீடு கொடுத்ததாக தெரிவித்தன. முன்பு கேட் ஸ்டீவன்ஸ் என்ற பெயரில் புகழ்பெற்ற பாப் இசைப்பாடகராக இருந்தவர் யூசுஃப் இஸ்லாம். அவர் இஸ்லாத்தை தழுவியபின் இஸ்லாமிய அழைப்புப்பணியில் ஈடுபட்டு உலகெங்கும் சுற்றி வருகிறார். அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் பல இஸ்லாமியக் கல்வி நிலையங்கள் உருவாக்கி அறப்பணிகள் செய்து வருகிறார். இவரது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில் இவரை பயங்கரவாதத்துடன் தொடர்புப் படுத்தி செய்தி வெளியிட்டதற்காக இந்த இழப்பீட்டை அவருக்கு அளிக்க வேண்டிய நிலை அப்பத்திரிக்கைகளுக்கு ஏற்பட்டது.

இது பற்றி யூசுஃப் இஸ்லாம் கூறியதாவது: "தி சண்டே டைம்ஸ் பத்திரிக்கையும், தி ஸன் பத்திரிக்கையும் என்னைப் பற்றி பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி இனி எழுதுவதில்லை என்றும் இதற்கான சட்ட நடவடிக்கைக்குரிய எனது செலவு தொகையோடு எனக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நஷ்ட ஈடாக தருவதாகவும் ஒப்புக் கொண்டுவிட்டன. இப்பொதெல்லாம் முஸ்லிம்களைப் பற்றி பொய்யாகவும் அவதூறாகவும் செய்திகளை வெளியிடுவது மீடியாவுக்கு மிகவும் எளிதான செயலாகிவிட்டது. இவ்விஷயம் எனக்கு பெரும் பாதிப்பை உண்டுபண்ணிவிட்டதோடு, நான் செய்து வரும் அழைப்புப்பணி, கல்விப்பணிகளுக்கு இடையூறு உண்டாக்கிவிட்டது. இவ்விதம் இழைக்கப்பட்ட தீய விளைவை நேர் செய்வது பெரும்பாலும் சிரமமானதொன்றாகும்" என்று கூறினார் யூசுஃப் இஸ்லாம்.

நன்றி: நம்பிக்கை மாத இதழ் மார்ச் 05

Saturday, March 05, 2005

நூல் அறிமுகம்: இயற்கை மதம்

நூல் அறிமுகம்: இயற்கை மதம்

ஆசிரியர்: அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி (ரஹ்)

முதன் முதலாக திருமறையை எளிய தமிழில் மொழிபெயர்த்து அதன் போதனைகள் முறையான மார்க்கக் கல்வி பெறாத சாதாரண தமிழ் முஸ்லிம்களையும் சென்றடையச் செய்த இந்த மார்க்க அறிஞருக்கு தமிழ் முஸ்லிம் சமுதாயம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

இந்தப் பெரியார் எழுதிய பிற நூற்களுள் ஒன்றே இந்த 'இயற்கை மதம்'. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்நூல் இஸ்லாமின் ஆன்மிக நம்பிக்கைகளை விளக்குவதுடன், இஸ்லாம் போதிக்கும் அரசியல், பொருளாதாரம், வாழ்வியல் போன்றவற்றை விமரிசிப்பவர்களுக்கும் தக்க பதிலளிக்கிறது. பிற சமூகங்களில் வழக்கத்திலுள்ள தீண்டாமை, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஆகியவற்றை கடுமையாக சாடும் இந்நூல், இத்தகைய சமூக கொடுமைகளுக்கு இஸ்லாம் எப்படி தீர்வளிக்கிறது என்பதைப் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை முன் வைக்கிறது. இரட்டைத் தம்ளர் முறை இன்றளவும் பரவலாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், இந்நூலின் கருத்துக்கள் இன்றைய காலக்கட்டத்திற்கும் பொருந்திப்போவது ஆச்சரியமான ஒன்றல்ல.

அக்கால சோவியத் ரஷ்யாவைப் பற்றியும் அவர்களின் பொது உடைமைக் கொள்கையைப் பற்றியும் எழுதும்போது, நூலாசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார், "... அந்த ஸோவியத் அரசாங்கம் பின்பற்றும் பொது உடைமைக் கொள்கையானது அதன் ஆட்சிக்குட்பட்ட மக்களை வெகு சீக்கிரத்தில் மிக்க தாழ்ந்த நிலைமைக்கு கொண்டு வந்து அவர்கள் கேவலம் அடையும்படி செய்யும் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை". இக்கூற்று தற்காலத்தில் எவ்வளவு உண்மையாகி விட்டது என்பதைப் பார்க்கும்போது ஆசிரியரின் தொலைநோக்குப் பார்வை நமக்கு புலப்படுகிறது.

இந்நூல் முன்வைக்கும் செய்தியை சுருக்கமாக அதன் பதிப்புரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். 'இறைவனின் மார்க்கமான இஸ்லாமின் வாழ்க்கை நெறி, பின்பற்றுவதற்கு இலகுவானது; சாத்தியமானது; எவ்வித குறைகளோ குற்றங்களோ இல்லாதது; இயற்கைக்கு உகந்த முறையில், அறிவார்ந்த சீர்திருத்தங்களுக்கு எல்லாம் முன்னோடியாக, எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானது. எனவே, இஸ்லாம் ஓர் இயற்கை மதமே!'

இந்நூலிற்கு ஹிஃபாஜத்துல் இஸ்லாம், ஸைஃபுல் இஸ்லாம், சுதேசமித்திரன் போன்ற பத்திரிக்கைகளிலும் திருவாளர் ஈ.வெ.ரா. பெரியார், ஜூட்டி எம். கிருஷ்ணமாச்சாரி ஆகியோரும் மதிப்புரைகள் எழுதியுள்ளனர்.

ஈ.வெ.ரா. பெரியார் இவ்வாறு குறிப்பிடுகின்றார், 'இயற்கை மதம்' என்னும் அதன் பெயருக்கேற்ப, இஸ்லாமிய மதக்கொள்கைகள் இயற்கைத்தன்மைக்கு முற்றிலும் பொருந்தியவை என்பதை அதன் ஆசிரியர் அதில் தெளிவுபட விளக்கிக் காட்டியிருப்பதுடன், இஸ்லாமிய மதச்சட்டங்கள் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் பொருத்தமானவை, அனுபவ சாத்தியமானவை, எந்நாட்டிலும் உள்ளவர்கள் எளிதில் அனுசரிக்கக் கூடியவை என்பதாகவும் விளக்கிக் காட்டுகின்றார். ... இந்நூல் இந்து மக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என்ற சமய வித்தியாசமின்றி அனைவரும் வாங்கி வாசித்துப் பார்க்க வேண்டியதொரு நூலாகும்'.


வெளியீடு:

தாருல் ஹுதா
211 (102) லிங்கி செட்டி தெரு
மண்ணடி. சென்னை 600 001
தொலைபேசி: 044 25247866, 98401 74121

இணையத்தளம்: www.darulhuda.info
மின்னஞ்சல்: click@darulhuda.info

டபுள் டெம்மி சைஸில் 128 பக்கங்கள்
விலை: ரூ.30

Tuesday, February 15, 2005

ஹதீஸ் ஒரு சிறு விளக்கம் - 2: தபகாத் இப்னு ஸஃது

திண்ணையில் வெளியான எனது முந்திய ஹதீஸ் பற்றிய கடிதத்தை ‘குழப்பவாதம்’ என்றும் ‘திசை திருப்பும் முயற்சி’ என்றும் தனது 27.1.05 பதிவில் குற்றம் சாட்டிய நேசகுமார், அதே பதிவில் ‘ஹதீதுகளைப்பற்றி சொல்லியிருக்கும் சலாஹ¤தீன் தபகாத் பற்றியும் கொஞ்சம் ஆய்ந்து எழுதியிருந்தால் நன்றாகயிருந்திருக்கும்’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து மார்க்க அறிஞர்களை கலந்தாலோசித்து திரட்டிய தகவல்களை இங்கு முன்வைக்கிறேன்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்கு பிறகு சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகே ஹதீஸ்கள் எழுத்துப்பூர்வமாக தொகுக்கும் பணி தொடங்கியது. நபிகளார் அவர்களின் காலத்தில் குர்ஆன் வசனங்கள் வஹீ மூலம் அறிவிக்கப்படும்போது அவ்வசனங்களை எழுத்து வடிவத்தில் அவ்வப்போது குறித்து வைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதே சமயத்தில் ஹதீஸ்களையும் எழுத்து வடிவத்தில் குறித்து வைத்தால் வீணான குழப்பம் ஏற்படும் என்பதால் ஹதீஸ்களை பதிவு செய்வதை நபிகளார் தடை செய்திருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து அபூபக்கர், உமர், ஆகிய கலிபாக்களின் ஆட்சிக்காலத்திற்கும் பிறகு, கலிபா உமறுப்னு அப்தில் அஜீஸ் அவர்களின் ஆட்சிக்காலத்தில் அவரது உத்தரவின்பேரில் அபூபக்கரிப்னு ஹஜ்ம் என்ற அறிஞர் அவர் அறிந்திருந்த ஹதீஸ்களை தொகுத்து ஒரு கிரந்தம் எழுதினார். இக்கிரந்தத்தை தொடர்ந்தே வேறு சில மார்க்க அறிஞர்களும் தங்களுக்கு தெரிந்த இதர ஹதீஸ்களையும் எழுத ஆரம்பித்தனர். இவ்வாறுதான் ஹதீஸ்களை தொகுக்கும் பணி தொடங்கியது.


இவ்வாறு தொகுக்கப்பட்ட கிரந்தங்களில், நபி (ஸல்) அவர்களின் சொல், செயல் ஆகியவைகள் மட்டுமில்லாமல், ஸஹாபிகள் எனப்படும் நபித்தோழர்களின் சொல் செயல் ஆகியவைகளும், அவர்களுக்கும் அடுத்த தலைமுறையினரான தாபியீன்களின் மார்க்கத் தீர்ப்புகளும் கலந்திருந்தன. தாபியீன்கள் நபிகளாரின் காலத்தில் பிறந்தே இருக்காத தலைமுறையினர். இவர்கள் ஸஹாபிகளிடமிருந்து மார்க்கத்தை கற்றவர்கள்.

இந்த காலக்கட்டத்திலிருந்தே பொய்யான ஹதீஸ்களை கூறுபவர்களும் தோன்றிவிட்டார்கள். அதிகமான ஹதீஸ்களை அறிந்து அறிவிக்கும் மார்க்க அறிஞர்களை மக்கள் பெரிதும் மதித்தனர். அத்தகைய மதிப்பு தனக்கும் கிடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும், இஸ்லாத்தின் வளர்ச்சியை காணப்பிடிக்காமல் அது வளரும் வேகத்தை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் போன்ற காரணங்களினாலும், பொய்யான ஹதீஸ்களை புனைந்து மக்களிடையே இவர்கள் பரப்பத்தொடங்கினர்.

தபகாத் இப்னு ஸஃது தொகுக்கப்பட்ட காலத்தில் இவ்வகை கற்பனை ஹதீஸ்கள் நிறைய பரப்பப்பட்டிருந்ததாக தெரியவருகிறது. இதற்கு பல ஆண்டுகளுக்கு பிறகு (ஹிஜ்ரி 194-ல்) தோன்றிய இமாம் புகாரி அவர்களின் காலத்திலும் இவர்களுக்கு பின் தோன்றிய மற்ற ஹதீஸ் தொகுப்பாளர்களின் காலத்திலும்தான் ஹதீஸ்களை ஆய்ந்து, தரம் பிரித்து, ஆதாரமானவைகளை இனங்கண்டு தொகுக்கும் பணி நடந்து வந்தது.

தபகாத் இப்னு ஸஃது பற்றியும், இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள, நேசகுமார் ஆதாரமாக காட்டும் நிகழ்வு பற்றியும் இனி சில ஆதாரங்களை காண்போம்.

ஹதீஸ்கலையின் பெரிய இமாம்களில் ஒருவரான இப்னுஸ்ஸலாஹ், இப்னு ஸஃது பற்றியும் அவரது தபகாத் பற்றியும் பின்வருமாறு கூறுகிறார்கள்.

"இப்னு ஸஃது நம்பகமானவராக இருந்தாலும் அவர் தனது "தபகாத்"தில் பலவீனமான அறிவிப்பாளர்கள் வாயிலாக அதிகமான செய்திகளை அறிவித்துள்ளார். அத்தகைய பலவீனமான அறிவிப்பாளர்களில் முஹம்மத் பின் உமரும் ஒருவர்" (1)

இந்தக் கதை இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கு யாரும் ஆதாரம் தரவில்லை என்கிறார் நேசகுமார். அப்படி கூறுவது தவறான வாதமாகும். நிறைய ஆதாரங்கள் உண்டு.

முதலில், இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசை:

1) முஹம்மத் பின் யஹ்யா பின் ஹப்பான்
அவரிடமிருந்து
2) அப்துல்லாஹ் பின் ஆமிர்
அவரிடமிருந்து
3) முஹம்மது பின் உமர்
அவரிடமிருந்து
4) இப்னு ஸஃது

இந்த அறிவிப்பாளர் வரிசைப்படி நபி(ஸல்) அவர்கள் இப்படி நடந்துகொண்டதாக சொல்பவர், முஹம்மத் பின் யஹ்யா பின் ஹப்பான். இவர் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பிறக்கவே இல்லை. இவர் நபியின் மரணத்திற்கு பல்லாண்டுகளுக்குப் பின் பிறந்த ஒரு தாபிஈ ஆவார். ஒரு தாபிஈ, நபி(ஸல்) அவர்கள் இப்படிச் செய்தார்கள், இப்படிச் சொன்னார்கள் என்று அறிவிக்கும் எந்தச் செய்தியும் ஹதீஸ் கலை அறிஞர்களிடத்தில் ஒப்புக்கொள்ளப்படாத செய்தியாகும்.

இந்தக் குறை மட்டுமல்ல, இதைவிட பெரிய குறை, இரண்டாவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் ஆமிர், ஹதீஸ்கலை அறிஞர்களால் பலவீனமானவர், மத்ரூத் (ஏற்றுக்கொள்ளமல் விடப்பட்டவர்) என்று வர்ணிக்கப்பட்டவர். (2)

அடுத்து, மூன்றாவது அறிவிப்பாளர், முஹம்மத் பின் உமர்; இவரும் ஹதீஸ் கலை அறிஞர்களால், மத்ரூத் (ஏற்றுக்கொள்ளாமல் விடப்பட்டவர்) என்று அறிவிக்கப்பட்டவர் ஆவார். (3)

ஆக இந்தச் செய்தி பலவீனத்துக்கு மேல் பலவீனமானது என்பது தெளிவாகிறது.

இந்தச் செய்தி தஃப்ஸீர் (குர்ஆன் விளக்கவுரை) நூற்களில் வந்துள்ளதே என நேசகுமார் கேள்வி எழுப்புகிறார். அப்படியானால் குர்ஆன் விளக்கவுரையாளர்களின் தலைவர் என அறியப்படும் இமாம் இப்னு கஸீர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

திருக்குர்ஆனின் 32:37-வது வசனத்திற்கு கீழ் இமாம் இப்னு கஸீர் கூறுவது: "இப்னு அபீஹாத்தமும், தபரீயும் இவ்விடத்தில் சில செய்திகளை குறிப்பிடுகிறார்கள். அவை ஆதாரமில்லாதவையாதலால், அச்செய்திகளை நாம் புறக்கணிக்கவே விரும்புகிறோம். ஆதலால் அவற்றை இங்கு நாம் கொண்டுவரவில்லை".

மேலும் இமாம் இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் தனது "ஜாதுல் மஸீர்" என்ற பிரபலமான திருக்குர்ஆன் விளக்கவுரையில், 32:37-வது வசனத்தின் விளக்கப்பகுதியில் மேற்படி கதையை சுட்டிக்காட்டி, இந்தக்கதையை மறுத்து விளக்கமளித்துள்ள அறிஞர்களின் விளக்கத்தை விரிவாக எழுதியுள்ளார். இப்னுல் ஜவ்ஸீ, இப்னு கஸீரைவிட காலத்தால் முந்தியவர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

அடுத்து ஹதீஸ் கலை மேதை இப்னு ஹஜர், ஸஹீஹுல் புகாரியின் விளக்கவுரையில், 32:37-வது வசனத்திற்கு விளக்கமாக இடம்பெறும் ஹதீஸுக்கு விளக்கமளிக்கும் போது, "இப்னு அபிஹாத்தமும், தபரீயும் வேறு செய்திகளை (அதாவது மேற்படி கதைகளை) குறிப்பிட்டிருக்கிறார்கள். அவற்றை பல குர்ஆன் விரிவுரையாளர்கள் நகல் செய்துள்ளார்கள். அந்தச் செய்திகளை பேசுவதில் ஈடுபடுவதே வெறுக்கத்தக்கது” என்று கூறுகிறார்.

இப்படி ஹதீஸ்கலை அறிஞர்களாலும், குர்ஆன் விளக்கவுரையாளர்களாலும், இந்தக் கதை கட்டுக்கதைதான் என்று உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.

அதனால்தான் 'ரஹீக்' நூலின் ஆசிரியர், ஆதாரம் எழுதாமல் ‘கட்டுக்கதை' என்று மாத்திரம் குறிப்பிட்டுள்ளார். தவிர யாருக்கும் பயந்துக்கொண்டு எதையும் அவர் மறைக்கவில்லை.

எனவே, நேசகுமார் இனி ஆதாரமற்ற கட்டுக்கதைகளையும், அவற்றையே ஆதாரமாகக்கொண்டு எழுதப்பட்ட ஆங்கில புத்தகங்களையும், இவற்றை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்ட இணையத்தளங்களையும் படித்து தனது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மற்றபடி, நான் முன்பே சொல்லியதுபோல, நேசகுமாரின் கேள்விகள் என்னைப்போன்ற முஸ்லிம்களை ப்ல மார்க்க நூற்களை ஆழ்ந்து படிக்கவும், மார்க்க அறிஞர்களுடன் கலந்தாலோசிக்கவும், அறியாத பல விஷயங்களை அறிந்து கொள்ளவும் தூண்டுகிறது. எனவே, ஆதாரங்களின் அடிப்படையிலான பல கேள்விகளை நேசகுமார் தொடர்ந்து எழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இக்கட்டுரைக்கான ஆதாரங்களை திரட்டி உதவிய சகோதரர்களுக்கு எனது நன்றிகள்!

- சலாஹ¤த்தீன் - 15 பிப்ரவரி 05

Reference books:

(1) இப்னுஸ்ஸலாஹ், நூல்: அல் முகத்திமா ஃபீ உலூமில் ஹதீஸ், பக்கம் 369, பதிப்பு தாருல் குத்துப் அல் இல்மிய்யா

(2) தஹ்தீபுத் தஹ்தீப், பக்கம் 245, பதிப்பு- தாருல் குத்துப் அல் இல்மிய்யா

(3) தக்ரீபுத் தஹ்தீப், பக்கம் 555, பதிப்பு- பைத்துல் அஃப்கார்.

(4) முஹம்மது அப்துல் காதர் ஸாஹிபு பாக்கவி (ரஹ்), நூல்: தஜ்ரீதுல் ஜாமிஇஸ் ஸஹீஹில் புகாரி தமிழ் மொழிபெயர்ப்பு பாகம்-1, பதிப்பு - இஸ்லாமிய நூல்கள் மலிவுப்பதிப்பு பப்ளிஷர்ஸ் & புக் செல்லர்ஸ்

Friday, February 11, 2005

இயற்கையின் சீற்றம்! இறை சித்தமா?

கோலாலம்பூரிலிருந்து வெளிவரும் இஸ்லாமிய தமிழ் மாத இதழான ‘நம்பிக்கை’ பிப்ரவரி 05 இதழில் வெளியான தலையங்கம்.

சுனாமி.

நமது அகராதியில் புதிதாக புகுந்துவிட்ட ஒரு சொல்.நில நடுக்கத்தால் உருவாகும் கடல் பிரளயத்தை உணர்த்தும் ஜப்பானிய வார்த்தை. உச்சரிப்பில் ஆபத்தை நுகர முடியவில்லை. அனுபவம் அவ்வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் கதிகலங்க வைக்கிறது.

இந்தியப் பெருங்கடல் வட்டத்திற்குட்பட்ட நாடுகளின் கடலோரப் பகுதிகளில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்புப் பேரிடர் செய்திகள் வந்த வண்ணமுள்ளன. ஆங்காங்கே மக்கள் தொடர்ந்து பட்டு வரும் அவதிகளுக்கு வரலாற்றில் முன்னுதாரணம் ஏதுமில்லை.

இரண்டாம் உலக யுத்தத்தில் வீசப்பட்ட அணுகுண்டுகளில் பலியான மக்கள் ஹிரோஷிமா - நாகசாகி என்ற இரு நகரங்களில் வசித்தவர்களே. அதிலும் பாதிப்பு ஒரு நாட்டின் ஒரு பகுதியைத்தான் உள்ளடக்கியது. பல நூறு அணுகுண்டுகளின் தாக்கத்தை இரு கண்டங்களின் பல நாடுகளை பேதமின்றி இந்த சுனாமி ஏற்படுத்தியுள்ளது. இப்பேரிடருக்கு விஞ்ஞான அடிப்படையில் காரணம் கூறியுள்ளனர்.

பூமி ஒரு கோள். அதன் மேல்பரப்பு குளிர்ந்துவிட்ட தட்டுகளால் ஆனது. மையம் ‘லாவா’ எனும் வெப்பக் குழம்பினாலானது. மையப்பகுதியில் வெப்பத்தினால் அழுத்தம் கூடும்போது ஏற்படும் வெடிப்பு, பூகம்பமாக - எரிமலை குமுறலாக மேல்மட்டத்திற்கு வருகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூமியின் மேல் தகடுகள் உராய்கின்றன. அதனால், ஆழ்கடல் அலைகள் உருவெடுக்கின்றன; வெகுண்டெழுந்து ‘சுனாமி’யாக பேரழிவை ஏற்படுத்துகிறது.

இன்னொரு பார்வையில், நிகழ்ந்துள்ள பேரிடர் ஒரு சாபக்கேடு என்றும், இறைவனின் கோபப்பார்வை என்றும் சித்தரித்துள்ளனர். ‘பலா’ - தண்டனை இறக்கப்பட்டுவிட்டது என்ற விளக்கத்தையும் தந்துள்ளனர்.

‘காக்கும் கடவுளே அழிவைத்தந்துவிட்டான்’ எனும் அங்கலாய்ப்பும் சேர்ந்துள்ளது. அவநம்பிக்கையில் இறைமறுப்பும் ஒரு சாராரிடம் உருவெடுத்துள்ளது.

‘அவனின்றி ஓர் அணுவும் அசையா’ என்ற கோட்பாட்டில் இயற்கை தரும் வளங்களும் நலன்களும் அதன் சீற்றமும் துன்புறுத்தலும் இறை கட்டளைகளுக்கு உட்பட்டதே.

ஆனால் ‘இறைவன் பழிவாங்கிவிட்டான்!’ என்ற கூற்று இஸ்லாத்திற்கு உடன்பாடற்ற கொள்கை. படைக்கப்பட்ட அனைத்தும் அவற்றிற்கு விதிக்கப்பட்ட நியதிகளுக்கு உட்பட்டே இயங்குகின்றன. பேரிடர், பெருநஷ்டம், இழப்பு ஏற்பட்டால் அவை இறையச்சத்தின் அடையாளங்களாக முஸ்லிம்கள் கருத வேண்டும். நம்பிக்கை வலுப்பெற்று, வாழ்க்கையை திருத்தி அமைக்க வகை செய்ய வேண்டும்.

அவதியுறும் மக்களின் துயர்துடைப்பிற்கு உதவுவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. இவ்விஷயத்தில் சமுதாயப்பற்று முஸ்லிம் சமூகத்துடன் நின்று விடக்கூடாது. மனித நேயத்தின் முழு வீச்சும் முஸ்லிம்களிடம் பிரதிபலிக்க வேண்டும். இன மத பேதமின்றி உதவிகளை வாரி வழங்க வேண்டும்.

‘நம்பிக்கை’ இதழைப்பற்றி..

மலேஷிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வெளிவரும் ‘நம்பிக்கை’, கடந்த 9 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அனேகமாக, கிழக்காசிய வட்டாரத்திலிருந்து தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஒரே இஸ்லாமிய தமிழ் இதழ் இதுவாகத்தான் இருக்கும். தலையங்கம், நேர்காணல், ஆளுமை, சிந்தனைத்துளி போன்ற தலைப்புகளில் பயனுள்ள கட்டுரைகளும், சிறுகதைகள், கவிதைகளும் தாங்கி இந்த இதழ் வந்து கொண்டிருக்கிறது.

முகவரி:

Nambikkai
YPI Publication
Lot 44025, Jalan PJS 10/11
Bandar Sri Subang
46000 Petaling Jaya
Selangor Darul Ehsan
Malaysia

Tel: 6 03 5631 4802
Fax: 6 03 5632 8025


- சலாஹ¤த்தீன் - 11 பிப்ரவரி 05

Tuesday, February 08, 2005

நேசகுமாரின் விளக்கங்களுக்கு பதில்!

நபிகள் நாயகம் - அன்னை ஜைனப் திருமணம் குறித்து நேசகுமார் தனது வலைப்பதிவில் நீண்ட விளக்கம் ஒன்று அளித்திருக்கிறார். இந்த நீண்ட கடிதம் எழுதும்முன் எனது முந்திய திண்ணை கடிதத்தை அவர் சற்று கவனமாக படித்திருக்கலாம். இந்த விவாதத்தில் அவர் தரப்பு வாதங்கள் அனைத்தும் ஆதாரமற்ற ஒரு கட்டுக்கதையை அடிப்படையாக கொண்டே அமைந்திருக்கின்றன. பொய்யை உண்மை என்று வாதிடுபவர்களுக்குத்தான் அதற்கான ஆதாரங்களை தெள்ளத்தெளிவாக எடுத்து வைக்க வேண்டிய கடமை இருக்கிறது. மாறாக, பொய்யை 'பொய்தான்' என்று சொல்வதற்கும் ஆதாரம் கேட்கிறார் நேசகுமார். நாம் அதற்கும் தயார்!

1. //ஹதீஸ்களிலும் தப்ஸீர் புத்தகங்களிலுமே இந்த 'கட்டுக்கதை' காணக்கிடைக்கிறது எனும்போது, எது ஹதீஸ், எது ஹதீஸ் இல்லை என்ற வாதத்தின் அடிப்படையே தகர்ந்து போகிறது.// என்கிறார் நேசகுமார். எனது முந்திய கடிதத்தை அவர் சற்று கவனமாக படித்திருந்தால் இந்த கேள்வியே எழுந்திருக்காது. இங்கு விவாதம் எது ஹதீஸ், எது ஹதீஸ் இல்லை என்பதல்ல. எது ஸஹீஹ் (ஆதாரபூர்வமான) ஹதீஸ், எது ஸஹீஹ் அல்ல என்பதுதான். இதை தெளிவுபடுத்துவதற்காகவே ஹதீஸ் பற்றிய சிறு விளக்கத்தை அளித்திருந்தேன். அது குழப்பவாதமோ, திசைதிருப்பும் முயற்சியோ அல்ல. (இந்த விவாதத்தில் ஷியாக்களைப் பற்றி நேசகுமார் பேச ஆரம்பிப்பதுதான் தெளிவான திசை திருப்பும் முயற்சி!)

2. ஒரு ஹதீஸ் ஸஹீஹ் என்று ஒப்புக்கொள்ளப்படுவதற்கு அதன் அறிவிப்பளர் வரிசை மிக முக்கியமானது. நேசகுமார் குறிப்பிடும் ஹதீஸ், ஸஹீஹ் என்று ஒப்புக்கொள்ளப்படுவதற்கு எந்த தகுதியும் அற்றது என்பதை எனது முந்திய கடிதத்தில் தெளிவு படுத்தியிருந்தேன். இது குறித்து, சகோதரர் அபூமுஹை தனது வலைப்பதிவில் நீண்ட விளக்கம் அளித்திருக்கிறார்.

http://abumuhai.blogspot.com/2004_12_01_abumuhai_archive.html

//முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தம் மனதில் எண்ணியது இது தான் என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. நபி(ஸல்) அவர்களும் சொல்லவில்லை. ஸைனபைப் பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்ததாக நபி(ஸல்) அவர்களும் சொல்லவில்லை. ஸைனபும் சொல்லவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த அறிவிப்பாளர் வரிசையும் கிடையாது. ஒரு ஆதாரமுமின்றி இவ்வாறு எழுத எப்படித் துணிந்தார்கள்? நபி(ஸல்) அவர்களின் உள்ளத்தில் மறைத்திருந்த எண்ணத்தை நபி(ஸல்) அவர்களின் உள்ளத்தில் ஊடுறுவி அறிந்தார்களா? அல்லது நபி(ஸல்) அவர்களின் கடந்தகால வாழ்வில் ஏதேனும் களங்கத்தைக் கண்டு அதனடிப்படையில் இவ்வாறு அனுமானம் செய்தார்களா? நபி(ஸல்) அவர்களைக் களங்கப்படுத்த வேண்டுமென்பதற்காகவே இஸ்லாத்தின் எதிரிகள் இந்தக் கதையை புனைந்துள்ளனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.//

இதற்கு நேசகுமாரின் பதில் என்ன?

3. நேசகுமார் கூறுகிறார், “இவ்விஷயத்தை பதிவு செய்த ஆரம்பக்கால இஸ்லாமிய அறிஞர்கள் கடுமையாக சோதித்து உண்மையென்று தம்மில் தெளிந்த பின்னரே பதிவு செய்து வைத்துவிட்டு சென்றிருக்கும் நிலையில்..”. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதற்கான ஆதாரங்கள் நேசகுமாரின் கைவசம் இருக்கும் பட்சத்தில், இந்த நிகழ்வு ஒரு ஸஹீஹான ஹதீஸ்தான் என்று நிரூபிக்க நேசகுமாருக்கு எந்த பிரச்னையும் இருக்கப் போவதில்லை. (ஸஹீஹ் என்றால் என்ன என்பதற்க்கு எனது முந்திய பதிவைப் பார்க்கவும்) இதை அவர் ஆதாரங்களுடன் நிரூபித்தால் அதை ஒப்புக்கொள்வதில் யாருக்கும் எந்த தயக்கமும் இருக்கப் போவதில்லை. நேசகுமார் செய்வாரா?

4. நேசகுமார் மேலும் கூறுகிறார், “...இதை கட்டுக்கதை என்று கூறும் மெளதூதியோ மற்றவர்களோ அம்முடிவை, தம்முடைய மதநம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே முன்மொழியும்போது, அதற்கு வேறு ஏதும் சான்று பகராதபோது, இதை எம்போன்றவர்களால் ஒப்புக் கொள்ள முடிவதில்லை.” நேசகுமாரின் இந்த கூற்றும் அடிப்படையற்றதே. இதில், மதப்பிடிப்புள்ள அறிஞர்கள் இந்த நிகழ்வு நபிகளாரை அவதூறு செய்வதாலேயே இதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் என்ற கருத்து தொனிக்கிறது. ஒரு ஹதீஸ் ஒப்புக்கொள்ளப்படுவதற்கும், ஒப்புக்கொள்ளப்படாததற்குமான அளவுகோல், முன்பே விளக்கியதுபோல், அது ஸஹீஹ் ஆனதா, அல்லவா என்பதுதானே ஒழிய அது நபிகளாரை போற்றுகிறதா, தூற்றுகிறதா என்பதல்ல. நபிகளாரை அளவுக்கு அதிகமாக போற்றும் ஒரு ஹதீஸ் (“நபியே! உம்மை படைத்திருக்காவிட்டால் இந்த உலகையே படைத்திருக்க மாட்டேன்” என்று இறைவன் அறிவித்தான் என்பது) ஆதாரமற்றது என்பதால், மதப்பிடிப்புள்ள மார்க்க அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

5. நேசகுமார் குறிப்பிடும் நிகழ்வு “ஹதீஸ் மற்றும் தஃப்ஸீர் புத்தகங்களிலேயே காணக்கிடைக்கிறது என்று தீவிர மதப்பிடிப்புள்ள முஸ்லிம்களே ஒப்புக்கொள்கிறார்கள்” என்று சொல்லும் அவர், இதற்கென ‘ரஹீக்’ என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டியுள்ளார். ஆனால் அப்புத்தகத்தில் 399-400 பக்கங்களில், மேற்குறிப்பிட்ட அந்த நிகழ்வு அப்பட்டமான கட்டுக்கதை என்றும் அதை இறைவன் எவ்வாறு தெளிவு படுத்தினான் என்றும் விளக்கப் பட்டிருக்கிறது.

அந்நூலிலிருந்து குறிப்பிட்ட அந்த பகுதி:

ஜைனப் (ரழி) நபி (ஸல்) திருமண விஷயத்தில் பெரும் பொய்க் கதைகளையும் கற்பனைகளையும் நயவஞ்கர்கள் புனைந்தனர். அதவது, முஹம்மது ஒருமுறை திடீரென ஜைனபைப் பார்த்து விட்டார். அப்போது ஜைனபின் அழகில் மயங்கி ஜைனபின் மீது காதல் கொண்டார். இதை அறிந்த அவரது வளர்ப்பு மகன் முஹம்மதுக்காக தனது மனைவியை விட்டுக் கொடுத்து விட்டார் என்று கூறினர். இந்தக் கட்டுக் கதையை அவர்கள் எந்தளவு பரப்பினார்கள் என்றால், இன்று வரை அதன் தாக்கம் ஹதீஸ் மற்றும் தஃப்ஸீர் நூற்களில் காணக்கிடைக்கிறது. இந்த பொய்ப் பிரச்சாரம் இறை நம்பிக்கையில் குறையுள்ளவர்களைப் பெரிதும் பாதித்தது. ஆகவே, உள்ளங்களில் ஏற்பட்ட சந்தேக நோய்களைக் குணப்படுத்தும் விதமாக பல தெளிவான வசனங்களை அல்லாஹ் குர்ஆனில் இறக்கி வைத்தான். இது பொய்ப் பிரச்சாரம் என்று அல்லாஹ் அத்தியாயம் அஹ்ஜாபின் தொடக்கத்திலேயே இவ்வாறு கூறுகிறான்.

நபியே! நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிராகரிப்பவர்களுக்கும், நயவஞ்சகர்களுக்கும் (பயந்து அவர்களுக்கு) வழிப்படாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) அறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:1)

6. நேசகுமார் குறிப்பிடும் நிகழ்வு ஆதாரமற்றது என்பதற்கு மேலும் ஆதாரங்கள்:

அல்லாமா ஷபீர் அஹமது உஸ்மானி அவர்களின் ‘த•ப்ஸீரே உஸ்மானி’ எனும் குர்ஆன் விளக்கஉரை நூலில் 33-ம் அத்தியாயத்தின் அடிக்குறிப்பு ஒன்று கீழ்க்கண்டவாறு கூறுகிறது: “..The legends which are described by the unauthentic historians at this place are rejected by Ibne Hajar and Ibne Kathir’

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இப்னு கஸீர் (Ibne Kathir) தனது விரிவுரை நூலில் நபிகளார் - அன்னை ஜைனப் திருமணம் நிகழ்ந்த சூழ்நிலையை விரிவாக விவாதித்திருக்கிறார். நேசகுமார் குறிப்பிடும் சம்பவம் அதில் இடம்பெறாததோடு, ‘இச்சூழலில் அறிவிக்கப்பட்ட சில ஹதீஸ்கள் ஆதாரமற்றவை (ஸஹீஹ் அல்ல) என்பதால் அவற்றை புறக்கணிப்பதே சரி’ என்ற குறிப்பும் இடம் பெற்றுள்ளது.

7. “இச்சம்பவம் இப்னு சாதின் தப்காத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று உணர்ந்தால், அப்போதாவது நபிகள் நாயகமும் நம்மைபோன்று அல்லது நம்மைவிட அதிகமாக ஆசாபாசங்கள் உடையவரே என்பதை சலாஹ¤தீனும் மற்ற இஸ்லாமிய அன்பர்களும் ஒப்புக்கொள்வார்களா?” என்று நேசகுமார் கேள்வி எழுப்புகிறார். நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன், ஒரு பதிவு அரபியில் எழுதப்பட்ட ஒரு நூலில் இடம்பெற்றிருப்பதாலேயே ஆதாரபூர்வமானதாக ஆகிவிடாது. ஒரு ஸஹீஹ் ஆன ஹதீஸ் என்று நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அது ஒப்புக்கொள்ளப்படும். நேசகுமார் தனது வாதத்தை ஸஹீஹ் ஆன ஹதீஸ்களை கொண்டு நிரூபித்தால் அதை எல்லா முஸ்லிம்களும் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இதை நிரூபிக்க நேசகுமார் தயாரா?

8. “இம்மாதிரியான விவாதங்களிலிருந்து முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும் தமது மதத்தின் குறைபாடுகள் புலப்பட்டு, அது மத வெறியை தணித்தால் சமுதாயம் மிகவும் பயன்பெறும்.” என நேசகுமார் கருத்து தெரிவித்திருக்கிறார். விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் அவர் எப்படி இந்த ஒரு முடிவுக்கு வந்தார் என்பது எனக்கு புரியவில்லை. விவாதம் ஒரு முடிவுக்கு வரும் சூழ்நிலையில் ‘குறைபாடுகள் இஸ்லாம் மார்க்கத்தில் இல்லை, அதை தவறாக புரிந்து கொண்டவர்களின் செயல்பாடுகளில்தான் இருக்கிறது’ என்பதை அவர் சரியாக புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்.

9. மற்றபடி, நேசகுமார் இவ்வாறு விவாதம் புரிவதில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியே! அவர் எழுப்பும் கேள்விகளுக்கு விடை அறிவதற்காக வேண்டியாவது பல நூற்களை படிக்கிறேன். மார்க்க அறிஞர்களுடன் பேசி தெளிவு பெறுகிறேன். இஸ்லாம் ஒரு தெளிவான வாழ்க்கை வழிகாட்டி என்ற என் நம்பிக்கை இன்னும் வலுப்பெற்று வருகிறது.

- சலாஹ¤த்தீன் -

ஹதீஸ் - ஒரு சிறு விளக்கம்!

'திண்ணை' 20-01-05ல் வெளியான கட்டுரையின் மறுபதிவு..

நபிகள் நாயகம் அவர்கள் அன்னை ஜைனப் அவர்களை மணந்து கொண்டபோது நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றி குறிப்பிட்ட போது அபு அப்துல்லாஹ் இப்னு சாஅத் பதிவு செய்துள்ள நிகழ்வை ஆதாரமாக நேசகுமார் காட்டி இருந்தது உண்மைதான். அவர் ஆதாரம் தரவில்லை என்று சொன்னது என் தவறு.
.
பொதுவாக தான் காட்டும் ஆதாரங்களுக்கு உரிய இணைய சுட்டியையோ, குர்ஆன் வசனங்கள் / ஹதீஸ் அறிவிப்புகளின் எண்களையோ, ஆசிரியர், நூல், பக்க எண், பதிப்பாளர் போன்ற விபரங்களையோ தரும் நேசகுமார், இந்த விஷயத்தில் அபு அப்துல்லாஹ் இப்னு சாஅத் என்ற ஒரு பெயரை மட்டும்
குறிப்பிட்டிருந்தார். இந்த விபரங்களுடன் சில மார்க்க அறிஞர்களை அணுகி
விளக்கம் கேட்டபோது, அவர்கள் இந்த நூலாசிரியரை அறிந்திருந்தார்கள்.
இவர் ‘தபகாத்’ என்ற பெயரில் நூல் ஒன்று தொகுத்திருப்பதாகவும்
அறிந்திருந்தார்கள். ஆனால் இந்த நூல் மார்க்க அறிஞர்களிடையே
உபயோகப்படுத்தப்படுவதில்லை என்பதால் இந்த நூல் யாரிடமும் கைவசம் இல்லை. அதன் மூலத்தை பார்க்காமல் அவர்களால் கருத்து எதுவும் தெரிவிக்க இயலவில்லை. நேசகுமாருக்கு எப்படியோ கிடைத்திருக்கிறதே என்ற எண்ணத்தில் மனம் தளராமல் இணையத்தில் தேடியபோது... கிடைத்தே
விட்டது!. இரண்டு அல்லது மூன்று இணையத்தளங்களில் (அனைத்தும் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சார இணையத்தளங்கள்!) இந்த நூலை குறிப்பிட்டு, அதில் முஹம்மது இப்னு யஹ்யா இப்னு ஹய்யான் என்பவர் அறிவித்ததாக ஒரு சம்பவத்தை குறிப்பிடுகின்றார்கள். அதன் ஆங்கில மூலத்தை அப்படியே கீழே கொடுத்துள்ளேன். நேசகுமார் இந்த சம்பவத்தை சித்தரித்த விதம்
கிட்டத்தட்ட இந்த ஆங்கில மூலத்துடன் ஒத்துப்போவதால், அவர் இந்த
இணையத்தளங்களில் கூறப்படும் கருத்துக்களையே தனது ஆதாரமாக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது.
.
இச்சம்பவம் பலவிதமாய் புத்தகங்களில் காணப்படுகிறது என்று குறிப்பிடும்
நேசகுமார், இதன் நுணுக்கமான விளக்கங்களுக்கு செல்லாமல் அதன்
சாராம்சத்தையே பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.
நேசகுமாரின் பார்வையில் இதன் சாராம்சம்: “ஜைனப்பை அவரது கணவன்
வெளியே சென்றிருக்கும்போது சரியானபடி ஆடை அணியாத நிலையில் பார்த்த நபிகள் நாயகத்தின் இதயம் சஞ்சலமுற்றது. இதையறிந்த அவரது (வளர்ப்பு) மகன், தாமே முன்வந்து மனைவியை விட்டுக்கொடுத்து விடுகிறேன் என்று சொன்னார். ஹதீஸ்கள் மற்றும் தஃப்ஸீர் புத்தகங்களிலேயே இச்சம்பவம் காணக்கிடைக்கிறது” என்பதே.
நேசகுமார் குறிப்பிடும் அந்த நிகழ்வு அல்லது பதிவு ஒரு கட்டுக்கதையே என்பது அதை கொஞ்சம் கவனித்து படித்தாலே புரியும். அதற்கு முன் ‘ஹதீஸ்கள் மற்றும் தஃப்ஸீர் புத்தகங்களிலேயே இச்சம்பவம் காணக்கிடைக்கிறது ‘ என்று நேசகுமார் சொல்வதால் ‘ஹதீஸ் என்றால் என்ன?’ என்பதைப்பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வது இங்கு பயனளிக்கும்.
.
1) வேறு எந்த தலைவருக்கும் இல்லாத ஒரு சிறப்பாக, நபிகள் நாயகம்
அவர்களின் சொல், செயல் அங்கீகாரம் அனைத்தும், (அவர்களின் அந்தரங்க
வாழ்க்கை உட்பட) ஆதாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்றையும் ஹதீஸ்கள் என்பார்கள்.
.
2) எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக்கூடாது? என்ற
அடிப்படையில் ஹதீஸ்கள் நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது.
a. ஸஹீஹ் (ஆதாரபூர்வமானவை)
b. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)
c. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)
d. ளயீப் (பலவீனமானது)
இவற்றில் ஸஹீஹ் மட்டுமே ஆதாரப்பூர்வமான, ஏற்றுக்கொள்ளத்தக்க,
நடைமுறைப்படுத்த வேண்டிய ஹதீஸ்களாகும்.
.
3) ஒரு ஹதீஸ் ‘ஸஹீஹ்’ (ஆதாரபூர்வமானது) என்று ஒப்புக்கொள்ளப்படுவதற்கு சில தகுதிகள் உண்டு. அவற்றுள் முக்கியமானது, அறிவிப்பளரின் வரிசை. ஹிஜ்ரி இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் ஹதீஸ்களை நூல் வடிவில் தொகுக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது, நபிகள் நாயகம் தொடர்பான ஒரு செய்தியை ஒருவர் அறிவித்தால், தனக்கு அந்தச் செய்தியை கூறியது யார்? அவர் யாரிடம் கேட்டார்? அவர் இச்செய்தியை யாரிடம் கேட்டார்? என்று சங்கிலித்தொடராக கூறிக்கொண்டே நபிகள் நாயகம் வரை செல்ல வேண்டும். அதோடு,
.
a. இந்த சங்கிலித்தொடரில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும்
நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.
b. அனைவரும் உறுதியான நினைவாற்றல் உடைவயர்களாக இருக்க வேண்டும்.
c. அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
d. அவர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ
அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டிருக்க வேண்டும்.
இந்தத்தன்மைகள் ஒருங்கே அமையப்பெற்றிருந்தால் மட்டுமே அதை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று ஒப்புக்கொள்ளப்படும். அவ்வாறல்லாமல் அரபியில் எழுதப்பட்ட ஒரு நூலில் இடம் பெற்றிருப்பதால் மட்டுமே ஒரு சம்பவம் ஆதாரப்பூர்வமான ஹதீஸாக ஆக முடியாது.

ஹதீஸ் தொகுப்புகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு, கீழ்க்கண்ட
இணையத்தளங்களை பார்வையிடலாம்.

http://www.tamililquran.com/hadeeth.asp?file=hadith_art_1.html

இஸ்லாமிய எதிர்ப்புப்பிரச்சார இணையத்தளங்களிலும், நேசகுமாராலும்
சுட்டிக்காட்டப்படும் அந்த ‘நிகழ்விற்கு’ மேலே கூறப்பட்ட ஒரு ஸஹீஹான
ஹதீஸிற்குறிய எந்த தகுதியும் இல்லை என்பது தௌ¤வாக தெரிகிறது.
.
1. இது ஒரு சம்பவத்தை பற்றி விவரிப்பதற்கு மாறாக, ஒரு கதையையே
உள்ளடக்கி இருக்கிறது. ஜைதை தேடி நபிகளார் அவர் வீட்டிற்கு செல்வதில்
தொடங்கி, ஜைது தன் மனைவியை விவாகரத்து செய்தல், ஜைனப் இத்தா
இருத்தல், நபிகளாருடன் அவரது திருமணம் தொடர்பாக இறைக்கட்டளை வருதல், நபிகளாரின் அடிமைப்பெண் இச்செய்தியை ஜைனப்பிடம் தெரிவித்து பரிசு பெறுதல் என பல சம்பவங்களை உள்ளடக்கியதாக இந்த நிகழ்வு இருக்கிறது.
.
2. முஹம்மது இப்னு யஹ்யா இப்னு ஹய்யான் என்பவர் அறிவித்ததாக இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பாளர், சங்கிலித்தொடரில் முதல் அறிவிப்பாளரா அல்லது கடைசி அறிவிப்பாளரா என்ற விபரம் தெரியவில்லை. இவர் கடைசி அறிவிப்பாளர் என்றால், முதல்
அறிவிப்பாளர் யார்? இவர்தான் முதல் அறிவிப்பாளர் என்றாலும் அது
சாத்தியமில்லை. ஏனெனில் இந்த அறிவிப்பில் பல சம்பவங்கள் கலந்து
இருப்பதால், ஒருவரே இந்த சம்பவங்கள் அனைத்திலும் நேரடியாக பங்கு
பெற்றிருக்க முடியாது.
.
3. நபிகளாரை வீட்டுடையில் இருந்த ஜைனப் அவர்கள் வரவேற்றதாக
சொல்லப்படும் சம்பவத்தில் பங்கு பெற்றவர்கள், நபிகளாரும், ஜைனப் அவர்கள் மட்டுமே. இது ஒரு ஹதீஸாக அறிவிக்கப்பட்டிருந்தால், இந்த இருவரில் ஒருவர்தான் முதல் அறிவிப்பாளராக (றாவீ என்று அரபியில் சொல்வார்கள்) இருந்திருக்க வேண்டும்.
.
4. ஜைனப் அவர்கள் அவசரமாக திரைச்சீலையை விலக்கி நபிகளாரை
வரவேற்றபோது, நபிகளார் அதை விரும்பினார்கள் என்று இங்கு கூறப்படுகிறது. (..so she leapt in a hurry, and the Messenger of God
liked her when she did that) இது நபிகளாரின் மனதிற்குள் தோன்றிய எண்ணமாக இருப்பதால், நபிகளார் மட்டுமே இதை அறிவித்திருக்க முடியும். மேலே கூறப்பட்ட அறிவிப்பாளரான இப்னு ஹய்யான் இதை அறிய வேறு
வழியே இல்லை.
.
இந்த நிகழ்வு கட்டுக்கதையைத்தவிர வேறில்லை என்பதற்கு, மேலும் பல
ஆதாரங்களை கூறிக்கொண்டேபோகலாம். சகோதரர் அபூமுஹையின்
வலைப்பதிவிலும் இத்தகைய ஆதாரங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.
மௌலானா மௌதூதி அவர்களின் குர்ஆன் தஃப்ஸீரிலும், ‘ரஹீக்’ என்னும்
நபிகளாரின் வாழ்க்கை வரலாற்று நூலிலும் இந்தச் சம்பவம் ஒரு கட்டுக்கதை என்பதாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதற்கு மேலும், இந்த நிகழ்வு ஒரு ஆதாரபூர்வமான ஹதீஸ் என்பதற்கு நண்பர் நேசகுமார் வசம் ஆதாரங்கள் ஏதுமிருப்பின் தாரளமாக அவற்றை அவர் முன் வைக்கலாம். இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சார இணையத் தளங்களிலிருந்து அல்லாமல், அவர் நேரடியாக ‘தபகாத்’ என்னும் நூலிலிருந்தோ அதன் மொழிபெயர்ப்புகளிலிருந்தோ இந்த சம்பவத்தை எடுத்திருந்தாரென்றால், அந்த குறிப்பிட்ட பக்கங்களை தயவு செய்து scan செய்து அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். அல்லது வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூற்களிலோ, தஃப்ஸீர்களிலோ (குர்ஆன் விளக்கஉரை) இச்சம்பவம் நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த ஆதாரங்களை தரும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.

========================

இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சார இணையத் தளங்களில் காணப்படும் text
அப்படியே:

Muhammad Ibn Yahya Ibn Hayyan narrated, "The Messenger
of God came to Zaid Ibn Haritha's house seeking him.
Perhaps the Messenger of God missed him at that time,
that is why he said, 'Where is Zaid?' He went to his
house seeking him and, when he did not find him,
Zainab Bint Jahsh stood up to [meet] him in a house
dress, but the Messenger of God turned away from her.
She said, 'He is not here, Messenger of God, so please
come in; my father and mother are your ransom.' The
Messenger of God refused to come in. Zainab had
hurried to dress herself when she heard that the
Messenger of God was at her door, so she leapt in a
hurry, and the Messenger of God liked her when she did
that. He went away muttering something that was hardly
understandable but for this sentence: 'Praise be to
God who disposes the hearts.' When Zaid came back
home, she told him that the Messenger of God came.
Zaid asked, 'You asked him to come in, didn't you?'
She replied, 'I bade him to, but he refused.' He said,
'Have you heard [him say] anything?' She answered,
'When he had turned away, I heard him say something
that I could hardly understand. I heard him say,
"Praise be to God who disposes the hearts." ' Zaid
went out to the Messenger of God and said, 'O
Messenger of God, I learned that you came to my house.
Did you come in? O Messenger of God, my father and
mother are your ransom. Perhaps you liked Zainab. I
can leave her.' The Messenger of God said, 'Hold on to
your wife.' Zaid said, 'O Messenger of God, I will
leave her.' The Messenger of God said, 'Keep your
wife.' So when Zaid left her, she finished her legal
period after she had isolated herself from Zaid. While
the Messenger of God was sitting and talking with
`Aஒisha, he was taken in a trance, and when it lifted,
he smiled and said, 'Who will go to Zainab to tell her
that God wedded her to me from heaven?' The Messenger
of God recited, 'Thus you told someone whom God had
favoured and whom you yourself have favoured: "Hold on
to your wife." ' `Aஒisha said, 'I heard much about her
beauty and, moreover, about how God wedded her from
heaven, and I said, "For sure she will boast over this
with us." ' Salama, the slave of the Messenger of God,
hurried to tell her about that. She gave her some
silver jewellery that she was wearing."

இஸ்லாம் - தவறான புரிதல்களும் விரோத பிரச்சாரங்களும்!

முஸ்லிம் அல்லாத சகோதரர்களிடையே இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் பற்றியும் காணப்படும் தவறான கருத்துக்களுக்கு பல்வேறு காரணங்களைச் சொல்லலாம்.

முதலாவதாக, இஸ்லாத்தைக் குறித்தும் அதன் தாத்பர்யம், கொள்கை கோட்பாடுகளைக் குறித்தும் அவர்களுக்கு எவரும் எடுத்துச் சொல்லவில்லை; முஸ்லிம்களே சொல்ல மறந்து விட்டனர்.

இரண்டாவதாக, பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்ட ஆங்கிலேயர்கள் தீவிரமான முஸ்லிம் விரோதப் பிரச்சாரத்தை மேற்கொண்டு தவறான கருத்துக்களை ஆழமாக விதைத்து விட்டனர். அதன் பாதிப்பு இன்று வரை நீடிக்கிறது.

மூன்றாவதாக, வகுப்புவாதிகளும் பாஸிஸவாதிகளும் தொடர்ந்து இடைவிடாமல், சளைக்காமல் மேற்கொண்டு வரும் தீவிரமான முஸ்லிம் விரோதப் பிரச்சாரம்! இவர்கள் இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக்கட்டி இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறித்து தவறான கருத்தை வலிந்து திணித்து வருகின்றனர்.

நான்காவதாக, முஸ்லிம்களின் தவறான செயல்களே இஸ்லாத்துக்கும் பிறமதச் சகோதரர்களுக்கும் இடையே தடுப்புச்சுவராக எழுந்து நிற்கின்றன. முஸ்லிம்கள் சரியான, உண்மையான இஸ்லாத்தை கடைப்பிடிக்கத் தவறியதும் ஒரு முக்கியமான காரணமாகும்.

இவற்றோடு ஊடகத்தின் பங்கையும் சேர்த்துக்கொள்ளலாம். எதிர்மறையான நிகழ்வுகளோடும், குணங்களோடும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இணைத்துச் சொல்வது ஊடகத்தினருக்கு வாடிக்கையாகிவிட்டது. போர், பயங்கரவாதம், கலவரங்கள், ஆள்கடத்தல், விமானக்கடத்தல், ஆடம்பரம், சர்வாதிகாரம், மூட நம்பிக்கை, பின் தங்கிய நிலை போன்ற எதிர்மறையான குணங்களோடுதான் முஸ்லிம்களை ஊடகம் அடையாளங்காட்டுகிறது.அது மட்டுமின்றி, வரலாற்றுப் பாடநூல்களிலேயே முஸ்லிம்கள் குறித்து தவறான கருத்துகளும் அரைகுறையான உண்மைகளும் இடம் பெற்றிருப்பதும் சின்ன வயதிலேயே தவறான கருத்துகள் வேரூன்றுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. (1)

இத்தகைய சூழ்நிலையில் இஸ்லாம் குறித்து நிலவும் தவறான புரிதல்களை அகற்றி சரியான முறையில் உண்மை இஸ்லாத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் கடமை இன்றைய முஸ்லிம்களுக்கு இருக்கிறது.

(1) “சத்தியப்பேரொளி” எனும் நூலிற்கு இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்டின் தலைவர் ஹெச். அப்துர் ரகீப் அவர்கள் எழுதிய பதிப்புரையிலிருந்து..

அசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்!

அசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது.  கீழ்க்காணும் திருமறை வசனங்களை...